ச்சீ! தலைக்கேறிய போதை.. நடுவானில்.. விமானத்தில் பெண் மீது சிறுநீர் போன நபர்.. ஷாக் சம்பவம்.. கொடுமை
நியூயார்க்: அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்த விமானத்தில் அதீத மது போதையில் இருந்த நபர் ஒருவர், சக பயணி மீது சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறுநீர் கழித்ததோடு மட்டுமல்லாமல் அந்தப் பெண்ணின் முகத்திற்கு நேராக அருவருப்பான செயலிலும் அவர் ஈடுபட்டிருக்கிறார்.
இதை விட கொடுமையான விஷயம் என்னவென்றால், இந்த சம்பவம் குறித்து புகார் அளித்தும் சம்பந்தப்பட்ட நபர் மீது ஒரு சிறு நடவடிக்கையை கூட விமான நிறுவனம் எடுக்கவில்லை என்பதுதான்.

அத்துமீறும் விமானப் பயணிகள்
சமீபகாலமாக விமானப் பயணத்தில் சிலர் செய்யும் சேட்டைகள் அத்துமீறி சென்று கொண்டிருக்கின்றன. இப்படித்தான் அண்மையில் அமெரிக்கா செல்லும் விமானம் ஒன்றில், பயணி ஒருவர் விமானி அறைக்கு சென்று தகராறில் ஈடுபட்டார்.அந்த சம்பவத்தில் விமானி சாதுர்யமாக செயல்பட்டதால் பெரும் விபத்தும், உயிர்ச்சேதமும் தவிர்க்கப்பட்டது. இதேபோல, பாகிஸ்தானில் ஓடும் விமானத்தில் ஒரு பயணி திடீரென அவசரகால கதவை திறக்க முயன்ற சம்பவமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரை விமான ஊழியர்கள் உடனடியாக தடுத்து நிறுத்தியதால், அந்த விமானமும் விபத்தில் சிக்குவது தவிர்க்கப்பட்டது. இந்த சூழலில், அண்மையில் விமானப் பயணி ஒருவர் செய்த செயல் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.

மது போதையில் சேட்டை
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து டெல்லிக்கு கடந்த நவம்பர் மாதம் 26-ம் தேதி 'ஏர் இந்தியா' விமானம் சென்று கொண்டிருந்தது. அதில் இந்தியாவைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க நபரும் பயணித்துக் கொண்டிருந்தார். முதலில், எந்தவித பிரச்சினையும் செய்யாமல் ஒழுங்காக வந்த அந்த நபர், மது அருந்த தொடங்கியதும் தனது சேட்டையை ஆரம்பித்தார். சக பயணிகளிடம் தேவையில்லாமல் பேசுவது; அங்குமிங்கும் நடப்பதுமாக அடுத்தவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டிருந்தார். எனினும், மது அருந்தியதால் தன்னிலை மறந்து இவ்வாறு செய்கிறார் என சக பயணிகளும் அவரை பொறுத்துக் கொண்டனர்.

பெண் மீது சிறுநீர் கழித்து அட்டூழியம்
இந்நிலையில், மதிய உணவு முடிந்ததும், பயணிகள் இளைப்பாறுவதற்காக விமானத்தில் இருந்து மின் விளக்குகள் அணைக்கப்பட்டன. அப்போது, அசந்து தூங்கிக்கொண்டிருந்த சக பெண் பயணி ஒருவர் தனது முகத்திலும் உடலிலும் ஏதோ தண்ணீர் படுவதை உணர்ந்து திடுக்கிட்டு எழுந்தார். அப்போது அவர் பார்த்த காட்சி அவரை அதிர்ச்சியில் உறைய வைத்தது. விமானத்தில் சேட்டை செய்து கொண்டிருந்த போதை ஆசாமி, தன் மீது சிறுநீர் கழித்துக் கொண்டிருந்ததை பார்த்து அவர் அலறினார். இவரது சத்ததைக் கேட்டு விழிந்த மற்ற பயணிகளும், அந்த நபர் செய்யும் செயலை பார்த்து சத்தம் போட்டனர்.
ஆனால், அந்த போதை ஆசாமியோ எந்தவித சலனமும் இல்லாமல் அந்தப் பெண்ணின் முகத்திற்கு நேராக தனது ஆணுறுப்பை காட்டிக் கொண்டே இருந்தார். இதையடுத்து, மற்ற பயணிகள் அவரை திட்ட தொடங்கியதால் அங்கிருந்து அவர் நகன்றார்.

எந்த நடவடிக்கையும் இல்லை
இதுகுறித்து, பாதிக்கப்பட்ட அந்தப் பெண் விமானக் குழு உறுப்பினர்களிடம் புகார் அளித்தார். ஆனால், அவர்கள் யாரும் அந்த நபரை கண்டிக்கவோ, அவரை தனியாக அமர வைக்கவோ இல்லை. மாறாக, பாதிக்கப்பட்ட பெண்ணை விமானத்திற்கு பின்னால் இருந்த ஒரு குறுகலான சீட்டில் அமர வைத்தனர். விமானத்தில் முதல் வகுப்பில் இருக்கைகள் காலியாக இருந்தும் அவரை அங்கு விமானக் குழுவினர் அமர வைக்கவில்லை. மேலும், அந்த நபர் மீது பாதுகாப்பு அதிகாரிகளிடமும் விமானக் குழுவினர் புகார் அளிக்காததால், இத்தனை அட்டூழியங்களை செய்த அந்த நபர் எந்தவித தண்டனைக்கும் உள்ளாகாமல் சென்றுவிட்டார்.

டாடா குழுமத் தலைவரிடம் புகார்
விமானக் குழுவினரின் அலட்சியத்தை கண்டு வெறுத்து போன அந்தப் பெண், தனது நேர்ந்த துயரம் குறித்து டாடா குழுமத்தின் தலைவர் என். சந்திரசேகரனுக்கு தனியாக புகார் கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார். இதற்கு பிறகாவது, ஒரு பெண்ணிடம் அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், விமானங்களில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது விமானங்களில் பயணிக்க வாழ்நாள் தடைவிதிக்கப்பட வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.












Click it and Unblock the Notifications