"காசாவுக்காக செய்தேன்".. 2 இஸ்ரேல் தூதரக ஊழியர்கள் அமெரிக்காவில் சுட்டுக்கொலை.. இளைஞர் வெறிச்செயல்
நியூயார்க்: அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் இஸ்ரேலிய தூதரகத்தின் பெண் ஊழியர் உள்பட 2 பேரை இளைஞர் ஒருவர் சுட்டுக்கொன்றார். காசாவில் போர் புரியும் இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தியதாகவும் அதன் பிறகு அங்கிருந்து ஓடாமல் காசாவுக்காக செய்தேன்.. காசாவுக்காக செய்தேன் என்று கூறியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி இறந்த 2 ஊழியர்களும் காதலர்கள் என்பதும் அவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருந்த நிலையில் துப்பாக்கிச்சூட்டில் பலியாகி இருக்கும் உருக்கமான தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் நல்ல நட்பு உள்ளது. குறிப்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவியேற்றவுடன் முதல் முறையாக சந்தித்த தலைவர் யார் என்றால் அது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தான். இந்நிலையில் தான் அமெரிக்காவின் வாஷிங்டனில் capital jewish மியூசியம் உள்ளது.

இந்த மியூசியத்தில் யூதர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி நடந்தது. இதில் அமெரிக்காவுக்கான இஸ்ரேல் தூதரக அதிகாரிகளும், ஊழியர்களும் பங்கேற்றனர். நிகழ்ச்சி முடிந்து இரவு 9 மணிக்கு அனைவரும் மியூசியத்தை விட்டு வெளியே வந்தனர்.
இஸ்ரேல் தூதரக அதிகாரிகள், ஊழியர்களும் வெளியே வந்தனர். மியூசியத்துக்கு வெளியே நின்ற நபர் தூதரக ஊழியர்களை நோக்கி சென்று திடீரென்று குறி வைத்து துப்பாக்கியால் சுட்டார்.
இதில் சம்பவ இடத்திலேயே ஒரு ஆணும், பெண்ணும் இறந்தனர். இவர்கள் 2 பேரும் இஸ்ரேல் தூதரகத்தில் பணியாற்றிய ஊழியர்கள். அவர்களின் பெயர்கள் யாரோன் லிஷின்ஸ்கி மற்றும் சாரா மில்கிரிம் என்பதும் தெரியவந்தது. இவர்கள் 2 பேரும் காதலர்கள் என்று கூறப்படுகிறது. விரைவில் திருமணம் செய்ய இருந்த நிலையில் அவர்கள் 2 பேரும் இறந்துள்ளனர்.

மேலும் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் அங்கிருந்து ஓடவில்லை. ‛போலீசுக்கு போன் போடுங்கள்' என்று கத்தியபடி நின்றார். போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 10 நிமிடம் கழித்து போலீசார் வந்தனர். அந்த நபரை போலீசார் கைது செய்த போது, ‛காசாவுக்காக செய்தேன். காசா மக்களுக்காக தான் இதை செய்தேன். பாலஸ்தீனுக்கு விடுதலை வேண்டும். பாலஸ்தீனத்தை சுதந்திரமாக செயல்பட வைக்க வேண்டும்' என்று கோஷம் போட்டார்.
விசாரணையில் அந்த நபரின் பெயர் எலியாஸ் ரோட்ரிக்ஸ் என்பதும், 30 வயது நிரம்பியவர் என்பதும் தெரியவந்தது. சிகாகோவை சேர்ந்த அவர் காசாவுக்கு ஆதரவு நிலைப்பாடு கொண்டவர். காசா மீது இஸ்ரேல் போர் புரிந்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எலியாஸ் ரோட்ரிக்ஸ் இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தி உள்ளார்.
இதுதொடர்பாக மெட்ரோபாலிட்டன் போலீசில் தலைவர் பமிலா ஸ்மித் கூறுகையில், ‛‛இஸ்ரேல் தூதரக ஊழியர்கள் மியூசியத்தை விட்டு வெளியே வந்தனர். அப்போது 30 வயது நிரம்பிய நபர் 4 பேரிடம் பேசினார். திடீரென்று எந்த வார்னிங்கும் கொடுக்காமல் துப்பாக்கியால் சுட்டார். இதில் 2 பேர் இறந்துள்ளனர். விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது'' என்றார்.

இந்த சம்பவத்துக்கு அதிபர் டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்தார். ‛இந்த இரட்டை கொலைக்கு யூத விரோதம் தான் அடிப்படை. இதோடு இதற்கு முடிவு கட்டுவோம். வெறுப்பு மற்றும் பயங்கரவாதத்துக்கு அமெரிக்காவில் இடமில்லை' என்று அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தை இஸ்ரேலும் கடுமையாக கண்டித்துள்ளது. ஐநாவுக்கான இஸ்ரேலிய தூதர் டேனி டானன், யூத எதிர்ப்பு பயங்கரவாதத்தின் உச்சம் இந்த சம்பவம். இதற்கு காரணமானவர்கள் மீது அமெரிக்கா உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவதாக கூறினார். இந்த சம்பவத்தின் முழு பின்னணி குறித்து அமெரிக்க போலீசாரும், உளவுத்துறை அதிகாரிகளும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications