முன்கூட்டிய தகவல் அனுப்பிய ஈரானுக்கு நன்றி சொன்ன டிரம்ப்.. இறுதியாக சொன்ன முக்கியமான விஷயம்
நியூயார்க்: ஈரான் தனது அணுசக்தி நிலையங்களை அழித்ததற்கு அதிகாரப்பூர்வமாக மிகவும் பலவீனமான பதிலடியைக் கொடுத்திருக்கிறது. இது நாங்கள் எதிர்பார்த்த ஒன்று தான். இதனை மிகவும் திறம்பட எதிர்கொண்டோம். 14 ஏவுகணைகள் ஏவப்பட்டன. இதில் 13 ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டன, மேலும் 1 ஏவுகணை மட்டும் சுட்டு வீழ்த்தப்படவில்லை.. தாக்குதல் குறித்து எங்களுக்கு முன்கூட்டியே அறிவித்ததற்காக ஈரானுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்
அணுசக்தி திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த மறுத்ததால், ஈரான் மீது கோபம் அடைந்த டிரம்ப் தாக்குதல் நடத்த உத்தரவிட்டார். டிரம்பின் உத்தரவுப்படி தான், திங்கள்கிழமை அதிகாலையில் ஈரான் மீது அமெரிக்கா நேரடியாக தாக்குதல் நடத்தியது. ஈரான் நாட்டின் போர்டோ, நட்டான்ஸ், இஸ்பகான் ஆகிய 3 இடங்களில் உள்ள அணுசக்தி நிலையங்களை தாக்கியது. அமெரிக்காவின் பி-2 குண்டுவீச்சு விமானங்கள், 13,500 கிலோ எடை கொண்ட 'பங்கர் பஸ்டர்' குண்டுகளை வீசி பூமிக்கு அடியில் பாதுகாப்பாக அமைக்கப்பட்டிருந்த அணுசக்தி நிலையங்களை அழித்தது.

இதனால் கோபம் அடைந்த ஈரான், நேரடியாக அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த முடியாத நிலையில், தனது நாட்டின் பக்கத்தில் உள்ள அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியான கத்தாரின் மீது கவனத்தை திருப்பியது. நேற்று இரவு திடீரென கத்தாரில் உள்ள அமெரிக்க விமானப்படை மையம் மீது சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்கியது. இதனை அமெரிக்காவின் பாதுகாப்பு அமைப்பு உடனே நடுவானிலேயே தடுத்து நிறுத்தி அழித்தது. ஒரே ஒரு ஏவுகணை தான் தரையில் விழுந்து வெடித்தது என்று கூறப்படுகிறது.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட முதல் பதிவில். "பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட கத்தார் நாடு செய்துள்ள அனைத்திற்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். கத்தாரில் உள்ள அமெரிக்க தளத்தில் இன்று நடந்த தாக்குதலை பொறுத்தவரை எந்த அமெரிக்கர்களும் கொல்லப்படவில்லை அல்லது காயமடையவில்லை என்பதைத் தவிர, மிக முக்கியமாக, எந்த கத்தார் மக்களும் கொல்லப்படவில்லை அல்லது காயமடையவில்லை என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்..." என்று பதிவிட்டுள்ளார்.
டிரம்ப் வெளியிட்ட மற்றொரு பதிவில் கூறுகையில், "ஈரான் தனது அணுசக்தி நிலையங்களை அழித்ததற்கு அதிகாரப்பூர்வமாக மிகவும் பலவீனமான பதிலடியைக் கொடுத்திருக்கிறது. இது நாங்கள் எதிர்பார்த்த ஒன்று தான். இதனை மிகவும் திறம்பட எதிர்கொண்டோம். 14 ஏவுகணைகள் ஏவப்பட்டன . இதில் 13 ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டன, மேலும் 1 ஏவுகணை மட்டும் சுட்டு வீழ்த்தப்படவில்லை.. ஏனெனில் அது ஆபத்து இல்லாத திசையில் சென்றது. இதில் எந்த அமெரிக்கர்களும் பாதிக்கப்படவில்லை, எந்த சேதமும் ஏற்படவில்லை என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மிக முக்கியமாக, ஈரான் அனைத்தையும் வெளியேற்றிவிட்டது. இனி வெறுப்பு இருக்காது என்று உறுதியாக நம்புகிறேன். தாக்குதல் குறித்து எங்களுக்கு முன்கூட்டியே அறிவித்ததற்காக ஈரானுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இது எந்த உயிர்களையும் இழக்காமல் காப்பாற்றவும், யாரும் காயமடையாமல் காப்பாற்றவும் சாத்தியமாக்கியது. ஒருவேளை ஈரான் இப்போது பிராந்தியத்தில் அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கு முன்னேறலாம். மேலும் இஸ்ரேலும் அதையே செய்ய உற்சாகமாக ஊக்குவிப்பேன்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications