மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன்.. ஈரானின் சம்பவத்திற்கு பின் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதிவு
நியூயார்க்: ஈரான் அடுத்தடுத்து ஆறு ஏவுகணைகளை கத்தாரில் உள்ள அமெரிக்க விமானப்படை தளத்தின் மீது வீசிய நிலையில், அதனை பாதுகாப்பு மண்டலம் மூலம் அமெரிக்கா நடுவானிலேயே தாக்கி அழித்தது. இந்நிலையில் எத்தனை ஏவுகணைகள் விமானப்படைதளம் மீது விழுந்தது என்று தெரியவில்லை. இந்நிலையில் ஈரானின் தாக்குதலுக்கு பிறகு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட் எக்ஸ் பதிவினை பார்ப்போம்.
ஈரான் இஸ்ரேல் இடையே 10 நாட்களுக்கு மேலாக சண்டை நடந்து வரும் நிலையில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. எனினும் ஈரானை தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா அழைத்து வந்தது. ஆனால் இஸ்ரேலின் தாக்குதலுக்கு அமெரிக்கா ஆதரவு தருவதால், அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தைக்கு வர ஈரான் மறுத்துவிட்டது. இதையடுத்து திங்கள்கிழமை அதிகாலையில் ஈரான் மீது அமெரிக்கா நேரடியாக தாக்குதல் நடத்தியது. அந்த நாட்டின் போர்டோ, நட்டான்ஸ், இஸ்பகான் ஆகிய 3 இடங்களில் உள்ள அணுசக்தி நிலையங்களை தாக்கியது.

அமெரிக்காவின் பி-2 குண்டுவீச்சு விமானங்கள், 13,500 கிலோ எடை கொண்ட 'பங்கர் பஸ்டர்' எனப்படும் பதுங்கு குழி அழிப்பு குண்டுகளை வீசின. இந்த குண்டுகள் பூமிக்கு அடியில் 200 மீட்டர் ஆழத்தில் உள்ளவற்றையும் அழித்துவிடும் வல்லமை உடையவை. ஈரானின் போர்டோ அணுசக்தி தளம் மலையை குடைந்து மிகவும் ஆழத்தில் அமைக்கப்பட்டிருந்தது. அவற்றை அழிக்கவே 'பங்கர் பஸ்டர்' குண்டை அமெரிக்கா போட்டது. இந்த குண்டுவீச்சில் ஈரானின் மேற்படி அணுசக்தி தளங்கள் பெருத்த சேதத்தை சந்தித்தன. ஆனால் கதிர்வீச்சு அபாயம் எதுவும் ஏற்படவில்லை.
இதனிடையே தங்களுடைய அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதால் கோபம் அடைந்த ஈரான், அமெரிக்க ராணுவ அத்துமீறல் மற்றும் இந்த முரட்டு ஆட்சியால் செய்யப்பட்ட குற்றங்களுக்கு எதிராக முழு பலத்துடன் எதிர்க்கவும், ஈரானின் பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களைப் பாதுகாக்கவும் ஈரான் இஸ்லாமியக் குடியரசுக்கு உரிமை உண்டு என்று ஆவேசமாக கூறியது.
இந்நிலையில் அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பதிலடியாக, கத்தாரில் உள்ள அமெரிக்க விமான படையின் தளமான அல்-உதெய்த் தளத்தை குறிவைத்து ஈரான் நேற்று இரவு அதிரடியாக தாக்குதல் நடத்தியது. கத்தார் தலைநகர தோஹாவிற்கு வெளியே பாலைவனத்தில் 24 ஹெக்டேர் பரப்பளவில் அல்-உதெய்த் தள விமான தளம் அமைந்துள்ளது. இது அமெரிக்காவின் மத்திய கட்டளை மையமாகச் செயல்பட்டு வருகிறது. மத்திய கிழக்கு பிராந்தியத்திலேயே அமெரிக்காவின் மிகப் பெரிய தளமாக இருந்து வருகிறது. இங்கு சுமார் 10,000 அமெரிக்க வீரர்கள் பணியாற்றி வருகிறார்கள். இங்குதான் நேரடியாக ஈரான் தாக்கியது. மொத்தம் 6 ஏவுகணைகளை வீசிய நிலையில், அதனால் பெரிய பாதிப்பு இல்லை என்று கூறப்படுகிறது. இதனை டிரம்ப் உறுதி செய்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட பதிவில். "பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட கத்தார் நாடு செய்துள்ள அனைத்திற்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். கத்தாரில் உள்ள அமெரிக்க தளத்தில் இன்று நடந்த தாக்குதலை பொறுத்தவரை எந்த அமெரிக்கர்களும் கொல்லப்படவில்லை அல்லது காயமடையவில்லை என்பதைத் தவிர, மிக முக்கியமாக, எந்த கத்தார் மக்களும் கொல்லப்படவில்லை அல்லது காயமடையவில்லை என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்..." என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications