லே ஆஃப் இல்லை.. ஆனால் சம்பளத்தில் கட்.. ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த இன்டெல் நிறுவனம்.. பரபர அறிவிப்பு
ஆட்குறைப்பு பதில் சம்பள வெட்டில் கை வைக்கும் நிறுவனங்கள் இன்டெல் மட்டும் கிடையாது. ஆப்பிள் நிறுவனமும் இதேபோல சம்பள வெட்டை அமலாக்கியுள்ளது.
நியூயார்க்: கம்ப்யூட்டர்களுக்கு தேவையான செமிகன்டக்டர்களை உற்பத்தி செய்யும் மிகப்பெரிய நிறுவனமான 'இன்டெல்' தற்போது சிக்கன நடவடிக்கையில் களமிறங்கியுள்ளது. மற்ற டெக் நிறுவனங்களை போல இது ஆட்குறைப்பில் ஈடுபவில்லை என்றாலும் 25% வரை ஊழியர்களுக்கான ஊதியத்தை குறைத்துள்ளது.
உலகம் முழுவதும் உள்ள டெக் நிறுவனங்கள் தாங்கள் நஷ்டமடைந்து வருவதாக கூறி ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளன. கடந்த ஆண்டு நவம்பரில் பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையை பிள்ளையார் சுழியிட்டு தொடங்கி வைத்தது. இந்நிறுவனத்தின் 18 ஆண்டுகால வரலாற்றில் இது வரை இல்லாத அளவில் சுமார் 11 ஆயிரம் ஊழியர்களை மெட்டா வெளியேற்றியது. இதனையடுத்து பல நிறுவனங்கள் இந்த நடவடிக்கை கையில் எடுத்தன.
டிவிட்டர், கூகுள், ஐபிஎம் என டெக் ஜாம்பவான் நிறுவனங்கள் கொத்து கொத்தாக ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியது. இந்நிலையில் இந்த வரிசையில் இன்டெல்லும் சிக்கும் என்று எதிர்பார்கக்ப்பட்டது. ஆனால், இன்டெல் ஆட்களை எடுக்காமல் ஊதிய குறைப்பில் மட்டும் ஈடுபட்டுள்ளது. இது குறித்து நிறுவுனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்டெல் கார்ப்ரேஷன் வருவாய் நெருக்கடியுடன் போராடி வருகிறது. விரைவில் வீழ்ச்சியடையும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

சம்பள குறைப்பு
எனவே இதன காப்பாற்ற ஊழியர்களுக்கான ஊதிய குறைப்பை நிறுவனம் அமல்படுத்தியுள்ளது. அதன் படி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரிக்கு 25% சம்பளப் பிடித்தத்தை அமல்படுத்தியிருக்கிறது. தலைமை நிர்வாக அதிகாரி பாட் கெல்சிங்கர் இந்த முடிவை ஏற்றுக்கொண்டுள்ளார். அதேபோல அவரது நிர்வாக தலைமைக் குழுவின் உறுப்பினர்களுக்கு 15% சம்பளம் குறைக்கப்படும். சூப்பர் சீனயர் மேனஜர்களுக்கு 10 சதவிகிதமும், சீனியர் மேனஜர்களுக்கு 5 சதவிகிதமும் சம்பளம் பிடித்தம் செய்யப்படுகிறது. இது மட்டுமல்லாது ஊழியர்களுக்கான போனஸ் விஷயங்களிலும் நாங்கள் சில கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறோம்.

புதிய திட்டம்
இந்த மாற்றங்கள் எங்களின் ஊழியர்களை மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கும் என்று தெரியும். இருப்பினும் நீண்ட கால திட்டத்தை சாத்தியப்படுத்த எங்களுக்கு சேமிப்பு அவசியமாகிறது" என்று கூறியுள்ளது. இந்நிறுவனத்தின் 54 ஆண்டுக்கால வரலாற்றில் கடந்த காலாண்டை போன்று பெரிய பாதிப்பை இதற்கு முன்னர் நிறுவனம் எதிர்கொண்டதில்லை. கடுமையான போட்டி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில் ஏற்பட்டுள்ள மந்த நிலைதான் கடந்த காலாண்டில் நிறுவனத்தை இந்த அளவுக்கு பாதிப்பில் தள்ளியிருக்கிறது என்று கூறப்படுகிறது. இந்த இழப்புகளை சரி செய்ய புதிய திட்டத்தை சிஇஓ கெல்சிங்கர் முன்வைத்துள்ளார்.

வேகம்
அதன்படி இன்டெல் இதற்கு முன்னால் இருந்த வேகத்தைவிட அதிவேகத்தில் உற்பத்தியை உயர்த்த இருக்கிறது. ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் புதிய ஆலைகளை உருவாக்குவதன் மூலம் இதனை சாத்தியமாக்குவதே கெல்சிங்கரின் திட்டம். இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டால் சாம்சாங் மற்றும் தைவான் செமிகண்டக்டர் நிறுவனங்ளுக்கு இன்டெல் பங்கர 'டஃப்' கொடுக்கும். ஆனால் இது அவ்வளவு எளிதான ப்ளான் கிடையாது என்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் கணித்துள்ளனர். ஏனெனில் மேற்குறிப்பிட்ட இரண்டு நிறுவனங்களுமே செமிகண்டக்டர் உற்பத்தி துறையில் ஜாம்பவான்களாக இருக்கிறது.

இன்டெல் மட்டுமா?
ஆக புதிய ஆலைகளுக்காக பணத்தை சேமித்து வைக்கவே இன்டெல் இந்நடவடிக்கையில் இறங்கி இருக்கிறது. ஆண்டுக்கு 3 பில்லியன் அமெரிக்க டாலர்களை சேர்ப்பதன் மூலம் 2025ம் ஆண்டின் இறுதிக்குள் மொத்த சேமிப்பை 10 பில்லியன் டலராக உயர்த்த திட்டமிட்டிருக்கிறது. ஆட்குறைப்புக்கு மாற்றாக ஊழியர்களின் ஊதியத்தில் கைவைக்கும் நிறுவனம் இன்டெல் மட்டும் கிடையாது. ஆப்பிள் நிறுவனமும் இதே பாணியைதான் கைக்கொண்டுள்ளது. அதன் சிஇஓ டிம் குக்கின் ஊதியம் 40%க்கும் அதிகமாக குறைக்கப்பட்டுள்ளது. கோல்ட்மேன் சாக்ஸ் குரூப் இன்க் எனப்படும் நிதி நிறுவனமும் தனது சிஇஒவின் ஊதியத்தை 30% குறைத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications