அமெரிக்காவுக்கு வர முடியாது.. நீங்க இந்தியா வாங்க! டிரம்ப் அழைப்பை ஏற்க மறுத்த மோடி.. என்ன காரணம்?
நியூயார்க்: பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் இன்று தொலைபேசியில் 35 நிமிடங்கள் வரை பேசினார். அப்போது கனடா சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு அமெரிக்கா வரும்படி பிரதமர் மோடியை, டொனால்ட் டிரம்ப் அழைத்தார். ஆனால் அந்த அழைப்பை பிரதமர் மோடி ஏற்க மறுத்ததோடு, நீங்கள் இந்தியாவுக்கு வாருங்கள் என்று கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி 5 நாள் அரசு முறை பயணமாக 3 நாடுகளுக்கு கடந்த 15ம் தேதி காலையில் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டார். முதலில் அவர் இஸ்ரேல் அருகே உள்ள மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்து இருக்கும் தீவு நாடான சைப்ரஸ் நாட்டுக்கு சென்றார்.

அதன்பிறகு அங்கிருந்து கனடா புறப்பட்டு சென்றார். கனடாவில் நடக்கும் ஜி 7 நாடுகளின் உச்சி மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பிரதமர் மோடி பங்கேற்றார். இன்று அவர் கனடாவில் இருந்து புறப்பட்டு குரேஷியா நாட்டுக்கு செல்ல உள்ளார். இந்தியா - குரேஷியா இடையேயான உறவு, வர்த்தகத்தை வலுப்படுத்துவது பற்றி மோடி, அந்த நாட்டு தலைவருடன் பேச உள்ளார். குரேஷியா பயணத்தை முடித்த பிறகு பிரதமர் மோடி நம் நாட்டுக்கு வருகை தர உள்ளார்.
தற்போது பிரதமர் மோடி கனடாவில் உள்ளார். ஜி 7 கூட்டமைப்பை எடுத்து கொண்டால் பிரான்ஸ், அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி, கனடா உள்ளிட்ட நாடுகள் உள்ளன. இந்த மாநாட்டில் அந்தந்த நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். அமெரிக்கா சார்பில் அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்றார். டிரம்பும், மோடியும் சந்திக்க இருந்தனர். ஆனால் இஸ்ரேல் - ஈரான் மோதலால் ஜி 7 உச்சி மாநாட்டில் இருந்து பாதியில் டிரம்ப் அமெரிக்கா புறப்பட்டார்.
இதையடுத்து பிரதமர் மோடியும், டொனால்ட் டிரம்பும் இன்று தொலைபேசியில் உரையாடினர். மொத்தம் 35 நிமிடங்கள் வரை இருவருக்கும் இடையே உரையாடல் நடந்தது. இந்த தொலைபேசி உரையாடலின்போது டொனால்ட் டிரம்ப், பிரதமர் மோடியை அமெரிக்காவுக்கு வரும்படி கூறினார். பிரதமர் மோடி தற்போது கனடாவில் உள்ளார். கனடாவும், அமெரிக்காவும் அண்டை நாடுகளாகும். இருநாடுகளும் எல்லையை பகிர்ந்து கொள்கின்றன. இதனால் கனடா சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு அமெரிக்கா வரும்படி டிரம்ப் கூறினார்.
அதற்கு பிரதமர் மோடி மறுத்துவிட்டார். ‛‛கனடா சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு குரேஷியா செல்கிறேன். ஏற்கனவே இதுபற்றி குரேஷியா நாட்டுக்கு உறுதிமொழி கொடுத்துவிட்டேன். இதனை என்னால் மீற முடியாது. இதனால் அமெரிக்காவுக்கு வர இயலாது'' என்று பிரதமர் மோடி கூறினார். இந்தியாவில் விரைவில் குவாட் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க இந்தியாவுக்கு வாருங்கள் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். அமெரிக்கா செல்ல மறுத்த பிரதமர் மோடி இன்று கனடா சுற்றுப்பயணத்தை முடிக்கிறார். அதன்பிறகு பிரதமர் மோடி அங்கிருந்து குரேஷியாவுக்கு செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications