அமெரிக்கா ஒன்னும் செய்ய முடியாது.. இந்தியாவுடன் மிகப்பெரிய டீலிங் போடும் ரஷ்யா! புடின் பயங்கர முடிவு
மாஸ்கோ: எண்ணெய் வர்த்தகம் மட்டுமின்றி இந்தியாவுடன் இன்னும் நெருக்கமான பொருளாதார உறவுகள், வர்த்தக உறவுகளை மேற்கொள்ளலாம் என்று ரஷ்யா முடிவு செய்துள்ளதாம்.
ரஷ்ய நிறுவனங்கள் தங்களது உற்பத்தி வசதிகளை இந்தியாவில் அமைப்பதற்கு ஆர்வம்காட்டி வருகின்றன. எண்ணெய் மற்றும் எரிசக்தித் துறைகளுக்கு அப்பாற்பட்ட உறவுகளை விரிவாக்கும் நோக்கில், இந்தியாவுடன் பல துறைகளில் கூட்டு முயற்சிகளைத் தொடங்க ரஷ்யா திட்டமிட்டுள்ளது. பொறியியல், கப்பல் கட்டுதல், தகவல் தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க மின்சாரம், எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் உலோகம் போன்ற பல்வேறு துறைகளில் உற்பத்தியை உள்ளூர்மயமாக்குவது குறித்து பல ரஷ்ய நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

இந்தியா ரஷ்யா உறவு
கடந்த டிசம்பரில் நடைபெற்ற இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சிமாநாட்டின் தொடர்ச்சியாக இந்த ஆர்வம் அதிகரித்துள்ளது. அந்த உச்சிமாநாட்டில் பொருளாதார ஒத்துழைப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. ரஷ்யாவின் வர்த்தகப் பிரதிநிதி ஆண்ட்ரி சோபோலேவ், ரஷ்ய அரசுக்குச் சொந்தமான டிஏஎஸ்எஸ் (TASS) செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், மாஸ்கோவின் அயல்நாட்டுப் பொருளாதாரத் திட்டத்தில் இந்தியா ஒரு முதன்மை இலக்கு, வளம் மற்றும் எரிசக்தி அல்லாத தயாரிப்புகளின் பங்களிப்பை அதிகரிப்பதன் மூலம் இருதரப்பு வர்த்தகத்தை விரிவுபடுத்த இரு நாடுகளும் தீவிரமாக உள்ளன, என்று தெரிவித்தார்.
ரஷ்யா இந்திய சந்தைக்கு மட்டுமல்லாமல், தெற்காசியா மற்றும் பிற சர்வதேச சந்தைகளுக்கும் பொருட்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதேசமயம், ரஷ்யாவிலுள்ள வணிக வாய்ப்புகளில் இந்திய நிறுவனங்களும் அதிகரித்து வரும் ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகின்றன.
2030-ஆம் ஆண்டுக்குள் $100 பில்லியனை எட்டும் இருதரப்பு வர்த்தக இலக்கை நோக்கிய முன்னேற்றம் ஊக்கமளிப்பதாக இருந்தாலும், இந்திய ஏற்றுமதி குறைந்தபட்சம் $30-35 பில்லியனையும், ரஷ்யாவிலிருந்து இறக்குமதி சுமார் $60-65 பில்லியனையும் கொண்டிருக்க வேண்டும் என்று ரஷ்யா விரும்புவதாக கூறப்படுகிறது.
எண்ணெய் வர்த்தகம்
அதேபோல் அமெரிக்காவின் புதிய தடைகளை மீறி, இந்தியாவிற்கு அதிக அளவில் மலிவான ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியாவதை உறுதிசெய்ய, ரஷ்யா இப்போதே நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து இந்தியா ரஷ்ய கச்சா எண்ணெயின் உலகின் இரண்டாவது பெரிய கொள்முதல் நாடாக மாறியுள்ளது.
ரஷ்ய மலிவு எண்ணெயை இந்தியா நம்பியிருப்பதை நிறுத்த டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து அழுத்தம்கொடுத்து வருவதால், அமெரிக்கா-இந்தியா உறவுகள் அண்மைய மாதங்களில் சரிந்துள்ளன. விளாடிமிர் புடினின் உக்ரைன் போருக்கு இந்தியா நிதியுதவி செய்வதாக டிரம்ப் குற்றம் சாட்டினார். இதனால், ஆகஸ்ட் மாதத்தில், ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்கியதற்காக அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்யப்படும் இந்தியப் பொருட்களுக்கு டிரம்ப் 25% அபராத வரியை விதித்தார்.
இந்தியா மீது வரி டிரம்ப்
ஆனால், இந்தியாவோ இதை ஒரு இறையாண்மை சார்ந்த பிரச்சனையாகக் கருதி பின்வாங்க மறுத்தது. தனது எரிசக்தி கொள்கைகளை மூன்றாம் நாடுகள் கட்டளையிட முடியாது எனவும் திட்டவட்டமாகத் தெரிவித்தது. அதன் பிறகு இரு நாடுகளிடையேயான வர்த்தக பேச்சுவார்த்தைகள் எந்த உடன்பாட்டையும் எட்டவில்லை. கடந்த வாரம், டிரம்ப் நிர்வாகம் ரஷ்ய எண்ணெய் கொள்முதல் தொடர்பாக, இந்தியாவிற்கு 500% வரி விதிப்போம் என்றும், இந்தியா தலைமையிலான பல உலகளாவிய முன்முயற்சிகளிலிருந்து விலகுவோம் என்றும் மிரட்டல் விடுத்து அழுத்தத்தை அதிகரித்தது.
தொடரும் ரஷ்ய உறவு
அமெரிக்கத் தடைகளை இந்தியா போன்ற நாடுகள் கடந்து செல்வதற்கு வசதியாக, ரஷ்யா ஏற்கனவே அதன் விநியோகச் சங்கிலியை மறுசீரமைக்கத் தொடங்கியதற்கான அறிகுறிகள் உள்ளன. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் கச்சா எண்ணெய் ரோஸ்னெஃப்ட் அல்லது லுகோயில் அல்லாத ஒரு நிறுவனத்தால் வழங்கப்பட்டால், அந்த சுத்திகரிப்பு நிலையம் அமெரிக்கத் தடைகளுக்கு உட்பட்டது அல்ல. அதன்படி அமெரிக்காவின் புதிய தடைகளை மீறி, இந்தியாவிற்கு அதிக அளவில் மலிவான ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியாவதை உறுதிசெய்ய, ரஷ்யா இப்போதே நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஏற்றுமதித் தரவுகள், டிசம்பர் மாதத்திற்குள் பல புதிய ரஷ்ய எண்ணெய் ஏற்றுமதியாளர்கள் உருவானதை காட்டுகின்றன. இவர்கள், ரஷ்ய எண்ணெய் ஜாம்பவான்களுக்கும், இந்தியா போன்ற நாடுகளில் உள்ள சுத்திகரிப்பு நிலையங்களுக்கும் இடையே மறைமுகத் தரகர்களாக செயல்பட நோக்கம் கொண்டவர்கள் எனத் தெரிகிறது.
இந்த புதிய நிறுவனங்கள் ஏற்கனவே ஏற்றுமதியில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிவிட்டதாகவும், முழு விநியோகச் சங்கிலியும் மறுசீரமைக்கப்பட்டு, பெரும்பாலான பேரல்கள் ரோஸ்னெஃப்ட் அல்லது லுகோயில் அல்லாத நிறுவனங்களால் வழங்கப்படும் என்பதற்கு இரண்டு அல்லது மூன்று மாதங்கள் மட்டுமே ஆகும் என்றும் ரஷ்யா தரப்பு தெரிவிக்கிறது . கடந்த டிசம்பரில் இந்தியாவிற்குச் சென்ற ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், அமெரிக்க எதிர்ப்பு இருந்தபோதிலும் இந்தியாவிற்கு ரஷ்ய எண்ணெய் விநியோகம் தடங்கலின்றி தொடரும் என்று உறுதியளித்தார். இந்திய அரசும், ரஷ்ய எண்ணெய் கொள்முதல் குறித்து அரசு அல்லது தனியார் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு எந்த நேரடி உத்தரவையும் பிறப்பிக்கவில்லை; மாறாக, அவற்றின் செயல்பாடுகளுக்குச் சிறந்த முறையில் செயல்படவே ஊக்குவித்துள்ளது.












Click it and Unblock the Notifications