நிலவின் மண்ணில் விதையை போட்டு.. தண்ணீர் ஊற்றிய விஞ்ஞானிகள்.. 2 நாளில் பார்த்தால்.. சர்ப்ரைஸ்!
நியூயார்க்: நிலவில் இருந்து கொண்டு வரப்பட்ட மண்ணில் விதைகளை போட்டு அமெரிக்க விஞ்ஞானிகள் அதில் தண்ணீர் ஊற்றி சோதனை செய்துள்ளனர்.
1969-1972 வரையிலான நாசாவின் அப்போலோ பயணத்தின் போது நிலவில் இருந்து மண் துகள்கள் பூமிக்கு கொண்டு வரப்பட்டன. பெரிய அளவிலான சோதனை குழாய்களில் நிலவில் இருந்து கிலோ கணக்கில் மண் கொண்டு வரப்பட்டது.
இந்த மண்ணில் பல்வேறு விதமான ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. நிலவின் பணப்பை தெரிந்து கொள்ள இந்த மண் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அப்போலோ மிஷன்
அந்த அப்போலோ மிஷன் மூலம் மொத்தம் 382 கிலோவிற்கு நிலவில் இருந்து பொருட்கள் கொண்டு வரப்பட்டன. இதில் நிலவின் பாறை, சிறிய கற்கள், மண், தூசிகள் எல்லாம் அடங்கும். இதில் இருந்து 1 கிலோ மண்ணை புளோரிடா பல்கலைக்கழகத்திற்கு ஆராய்ச்சிக்காக நாசா வழங்கியது. இதில் கடந்த சில வருடங்களாக பல்வேறு ஆராய்ச்சிகளை செய்து வருகின்றனர். நிலவின் அடிப்படையை தெரிந்து கொள்ள இங்கு ஆராய்ச்சிகள் செய்யப்படுகிறது.
சோதனை
அந்த மண்ணின் ஒரு பகுதியை வைத்துதான் தற்போது அதில் செடியை வளர வைத்துள்ளனர். இதில் விதைகளை போட்டு, லேசாக தண்ணீர் ஊற்றி வளர்த்து உள்ளனர். அருகிலேயே பூமியின் மண்ணை வைத்து விதைகளை போட்டு வளர்த்து உள்ளனர். சரியாக இரண்டாவது நாள் இரண்டு மண்ணில் இருந்த விதைகளும் செடியாக வளர்ந்து உள்ளது. இதை பார்த்த புளோரிடா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆச்சர்யத்தில் உறைந்து போனார்கள்.
சூப்பர்
நாசா நிலவிற்கு மீண்டும் 2025ல் மனிதர்களை அனுப்ப திட்டமிட்டு வருகிறது. இந்த நிலையில் நிலவின் மண்ணில் செடி வளர்க்க முடியும் என்று கண்டுபிடித்துள்ளனர். ஆனால் நிலவின் மண்ணில் வளர்ந்த செடி 6 நாட்களில் லேசாக சுருங்கி போக தொடங்கி உள்ளது. பூமியின் மண்ணில் வளர்ந்த செடி வேகமாக வளர்ந்தது. ஆனால் நிலவின் செடி அப்படியே வாடி போய் காணப்பட்டு உள்ளது.
ஆனால் வாடியது
இருப்பினும் இந்த முதல் கட்ட சோதனை வெற்றிதான். அந்த மண் செடி வளர்வதற்கு ஏற்றதாக இருப்பதாக புளோரிடா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் நிலவில் செடிகளை எதிர்காலத்தில் வளர்க்க முடியும் என்ற நம்பிக்கை வருகிறது. சில கட்டுப்படுத்தப்பட்ட முறையில், சரியான அளவில் தண்ணீருடன் நிலவில் விவசாயம் செய்ய முடியும். எதிர்காலத்தில் மனிதர்களை நிலவிற்கு அனுப்புவதற்கான முதல் படி இது என்று புளோரிடா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.