“வாக்குறுதியை நிறைவேற்றிய டிரம்ப்”.. சுனிதா வில்லியம்ஸ் பூமியில் இறங்கியதுமே வெள்ளை மாளிகை வெளியிட்ட எக்ஸ் பதிவு
நியூயார்க்: விண்வெளியில் 9 மாதங்கள் சிக்கித் தவித்த விண்வெளி வீரர்களை மீட்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டு உள்ளதாக அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக ஃபுளோரிடா கடலில் தரையிறங்கியதை அடுத்து, அவர்கள் மீட்புக் குழுவினரால் பத்திரமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், அமெரிக்க வெள்ளை மாளிகை, ஸ்பேஸ் எக்ஸ், நாசா மற்றும் எலான் மஸ்க் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளது.

பூமிக்குத் திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவில் விண்வெளி வீராங்கனையாகப் பணியாற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ், விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஜூன் மாதம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு அனுப்பப்பட்டனர். 8 நாட்களில் பணி முடிந்து பூமிக்கு திரும்ப வேண்டியவர்கள் தொழில்நுட்பச் சிக்கலால் திட்டமிட்டபடி திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது.
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் விண்வெளியில் 286 நாட்கள் செலவிட்டனர். இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த நிக் ஹேக், சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் மற்றும் ரஷ்யாவை சேர்ந்த அலெக்சாண்டர் ஆகியோர் டிராகன் 9 விண்கலத்தில் இந்திய நேரப்படி நேற்று காலை 10.35 மணிக்கு பூமிக்கு புறப்பட்டனர். சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து 17 மணி நேர பயணத்துக்குப் பிறகு இன்று அதிகாலை 3.27 மணி அளவில் அமெரிக்காவின் ஃபுளோரிடா கடல் பகுதிக்கு டிராகன் விண்கலம் வந்து சேர்ந்தது.
வாக்குறுதி நிறைவேற்றப்பட்டது
"வாக்குறுதி அளிக்கப்பட்டது, வாக்குறுதி செய்து முடிக்கப்பட்டது: 9 மாதங்கள் விண்வெளியில் சிக்கித் தவித்த விண்வெளி வீரர்களை மீட்பதாக அதிபர் டிரம்ப் உறுதியளித்தார். இன்று, அவர்கள் அமெரிக்காவில் பாதுகாப்பாக தரையிறங்கினர், எலான் மஸ்க், ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் நாசாவுக்கு நன்றி!" என்று அமெரிக்க வெள்ளை மாளிகை எக்ஸ் தளத்தில் வெளொயிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி 28 ஆம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து (ISS) சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகிய இரண்டு விண்வெளி வீரர்களையும் மீட்டுக் கொண்டு வர எலான் மஸ்க் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

டிரம்ப் விடுத்த வேண்டுகோள்
இருவரையும் பத்திரமாக அழைத்து வாருங்கள் என்று அதிபர் டிரம்ப், எலான் மஸ்க்கிடம் வேண்டுகோள் விடுத்தார். முன்னாள் அதிபர் ஜோ பைடன் அரசு, 2 விண்வெளி வீரர்களை கைவிட்டுவிட்டதாகவும் டிரம்ப் குற்றம் சாட்டினார்.
அதிபர் டிரம்ப் வேண்டுகோளின் பேரில், போயிங்கின் ஸ்டார்லைனர் காப்ஸ்யூலில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து இரண்டு நாசா விண்வெளி வீரர்களை வீட்டிற்கு அழைத்து வருவதற்கான திட்டத்தை எலன் மஸ்க் அறிவித்தார். அதன்படி பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டிருந்தன.
சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் என இரு நாசா விண்வெளி வீரர்களும், அமெரிக்க விண்வெளி வீரர் நிக் ஹேக் மற்றும் ரஷிய விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோர் இந்திய நேரப்படி இன்றுஅதிகாலை 3:27 மணி அளவில் புளோரிடா கடற்கரையில் வெற்றிகரமாக தரையிறங்கினர். அவர்கள் படகு மூலம் பத்திரமாக மீட்கப்பட்டு மறுவாழ்வு மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications