புதினை குறிவைத்த டிரம்ப்.. ரஷ்யாவுக்கு குடைச்சல் கொடுக்க அமெரிக்கா உத்தரவு.. ஹேப்பியான உக்ரைன்
நியூயார்க்: உக்ரைன் மீது ரஷ்யா போர் புரிந்து வருகிறது. இந்த போர் 3 ஆண்டுகளை கடந்தும் தொடர்கிறது. போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நடவடிக்கை எடுத்து வருகிறார். ஆனால் இன்னும் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. இதனால் அதிருப்தியில் இருக்கும் டிரம்ப் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை நிறுத்துவதாக அறிவித்தார். ஆனால் சில நாட்களிலேயே தனது நிலைப்பாட்டை மாற்றி கொண்டுள்ள டிரம்ப், உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்களை அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போரை தொடங்கியது. இருநாடுகளும் அண்டை நாடுகளாக உள்ளன. இருநாடுகளுக்கும் இடையே இருந்த எல்லை பிரச்சனை மற்றும் உக்ரைனின் நேட்டோ அமைப்பில் சேர முயன்றது உள்ளிட்டவை ரஷ்யாவை கோபப்படுத்தியது.

இதையடுத்து கடந்த 2022ல் உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கையை தொடங்கியது. இந்த போர் 3 ஆண்டுகளை கடந்தும் தொடர்ந்து வருகிறது. இருநாடுகளும் பயங்கரமாக மோதி வருகின்றன. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுத உதவி, நிதி உதவிகளை வழங்கி வருகின்றன. இதனால் ரஷ்யவை உக்ரைன் சமாளித்து வருகிறது.
இதற்கிடையே தான் அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஜோ பைடனுக்கு பதில் அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றார். இவர் உக்ரைன் - ரஷ்யா போரை நிறுத்த நடவடிக்கை எடுத்தார். இதுதொடர்பாக ரஷ்ய அதிபர் புதினுடன் தொலைபேசியிலும், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியுடன் நேரடியாகவும் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் இன்னும் போர் நிறுத்தம் அமலுக்கு வரவில்லை.
இருநாடுகளும் டிரம்ப் சொல்வதை கேட்கவில்லை. இதனால் டிரம்ப் கடும் கோபத்தில் உள்ளார். அதுமட்டுமின்றி உக்ரைனுக்கும், அமெரிக்கா இடையேயான உறவும் அவ்வப்போது மோசமாகி வருகிறது. அந்த வகையில் தான் டொனால்ட் டிரம்ப் சில நாட்களுக்கு முன்பு உக்ரைனுக்கான ஆயுத சப்ளையை நிறுத்த அமெரிக்காவுக்கு உத்தரவிட்டார்.
அதாவது அமெரிக்காவின் ஆயுத கிடங்கில் ஆயுதங்களின் எண்ணிக்கை அதிகளவில் குறைந்துவிட்டது. இதனால் உக்ரைனுக்கு சில வான்வெளி பாதுகாப்பு ஏவுகணைகள், பீரங்கிகள், பிற ஆயுத விநியோகத்தை நிறுத்துவதாக டிரம்ப் அறிவித்தார். அதன்படி பேட்ரியாட் ஏவுகணைகள், ஜிஎம்எல்ஆர்எஸ், ஹெல்ஃபயர் ஏவுகணைகள் மற்றும் ஹோவிட்சர் பீரங்கிகள் உள்ளிட்டவற்றை நிறுத்துவதாக டொனால்ட் டிரம்ப் கூறினார்.
இந்நிலையில் தான் நேற்று டொனால்ட் டிரம்ப் தனது நிலைப்பாட்டை மாற்றி உள்ளார். ரஷ்யாவை சமாளிக்க உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்களை அமெரிக்கா அனுப்ப வேண்டும். இதன்மூலம் உக்ரைன் தங்களை காப்பாற்றி கொள்ள முடியும். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் செயலால் நான் மகிழ்ச்சியடையவில்லை'' என்று கூறியுள்ளார். இது ரஷ்யாவுக்கு மீண்டும் சிக்கலை ஏற்படுத்த உள்ளது.












Click it and Unblock the Notifications