ஈரான் பிடிவாதம்.. விடாமல் காய் நகர்த்திய டிரம்ப்.. உலகையே உலுக்கிய அந்த 20 மணி நேரம்.. நடந்தது என்ன?
நியூயார்க்: அமெரிக்கா - ஈரான்... உலக அரசியலின் 'டாம் அண்ட் ஜெர்ரி' விளையாட்டில் ஒரு புதிய அத்தியாயம் பாகிஸ்தானில் அரங்கேறியிருக்கிறது. கடந்த 1979-ம் ஆண்டு இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு, இரு நாடுகளுக்கும் இடையே நடந்த மிக உயர்மட்டப் பேச்சுவார்த்தை இதுதான். ஆனால், 20 மணி நேர மாரத்தான் விவாதங்களுக்குப் பிறகும், முடிவு என்னவோ 'பழைய குருடி கதவைத் திறடி' கதைதான்!
பெரிய எதிர்பார்ப்புடன் தொடங்கப்பட்ட 'இஸ்லாமாபாத் பஞ்சாயத்து' இப்போது ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் போல முடிவின்றி நிற்கிறது.

15 மணி நேர மாரத்தான் பேச்சுவார்த்தை, ட்ரம்ப்பின் அதிரடி ட்வீட்கள், ஈரானின் பிடிவாதம் என களைகட்டிய அமைதிப் பேச்சுவார்த்தையின் முதல் அத்தியாயம், ஒரு 'சாலிட்' முடிவை எட்டாமலேயே முடிந்திருக்கிறது. அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் தனது குழுவுடன் வாஷிங்டன் திரும்பியிருப்பது, 'அமைதி வருமா அல்லது போர் தொடருமா?' என்ற மில்லியன் டாலர் கேள்வியை அப்படியே விட்டுச் சென்றிருக்கிறது.
யு.எஃப்.சி முதல் 'ட்ரூத் சோஷியல்' வரை!
சமீபத்தில் மியாமியில் நடந்த யு.எஃப்.சி (UFC 327) போட்டியில் விறுவிறுப்பாகக் கலந்துகொண்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அங்கிருந்து கிளம்பிய கையோடு ஈரான் விவகாரத்தில் தனது 'பஞ்ச்'களை வீசத் தொடங்கியிருக்கிறார். பாக்ஸ் நியூஸ் நேர்காணல் மற்றும் தனது சொந்த சமூக வலைதளமான 'ட்ரூத் சோஷியல்' ஆகியவற்றில் இந்தப் பேச்சுவார்த்தை குறித்து விரிவாகப் பேசியிருக்கிறார் ட்ரம்ப்.
"தொடக்கத்தில் கொஞ்சம் சுணக்கமாகத் தொடங்கிய பேச்சுவார்த்தை, போகப்போக மிகவும் சுமுகமாக மாறியது. ஈரான் பிரதிநிதிகளிடம் எனது தரப்புக் குழுவினர் (துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், ஜாரெட் குஷ்னர், ஸ்டீவ் விட்காஃப்) மிகுந்த மரியாதையுடனும் நட்புடனும் பழகினர். ஆனால், அந்த நட்பு அணுசக்தி விவகாரத்தில் பலிக்கவில்லை!" என வருத்தமும் கோபமும் கலந்து சொல்லியிருக்கிறார் ட்ரம்ப்.
முக்கிய முட்டுக்கட்டை: அணுசக்தி லட்சியம்!
இந்தப் பேச்சுவார்த்தையில் பல விஷயங்களில் இரு நாடுகளும் உடன்பட்டாலும், "அணுசக்தி கனவை கைவிட முடியாது" என்பதில் ஈரான் ஒற்றைக்காலில் நின்றிருக்கிறது.
"எங்களுக்குத் தேவையான மற்ற எல்லா விஷயங்களிலும் உடன்பாடு எட்டப்பட்டது. ஆனால், அணுசக்தி லட்சியத்தை கைவிட அவர்கள் மறுத்துவிட்டனர். எனக்குப் பொறுத்தவரை அதுதான் மிக முக்கியமான புள்ளி. ஈரான் பிடிவாதமாக இருக்கிறது" - இது ட்ரம்ப்பின் நேரடி அக்யூசேஷன்.
ஈரான் சொல்வது என்ன?
ஈரான் தரப்பில் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் தலைமையிலான குழு பங்கேற்றது. பேச்சுவார்த்தைக்குப் பிறகு எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்ட காலிபாப், "ஈரானின் தர்க்கத்தையும் கொள்கைகளையும் அமெரிக்கா புரிந்துகொண்டிருக்கிறது. இப்போது பந்து அவர்கள் பக்கம்தான் இருக்கிறது. எங்களின் நம்பிக்கையை அவர்கள் பெறுவார்களா என்பதை அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்" எனத் தந்திரமாகப் பதில் கொடுத்திருக்கிறார்.
ட்ரம்ப்பின் 'வார்னிங்' பெல்!
வழக்கம்போல தனது ஸ்டைலில் எச்சரிக்கைகளையும் விடுக்கத் தவறவில்லை ட்ரம்ப்.
சீனாவுக்கு செக்: "ஈரானுக்கு சீனா ஆயுதங்களை அனுப்பினால், 50 சதவீத வரி (Tariffs) விதிக்கப்படும்."
எரிசக்தி எச்சரிக்கை: "ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், ஒரே நாளில் ஈரானின் எரிசக்தி கட்டமைப்பைச் சிதைக்கும் வலிமை அமெரிக்காவுக்கு உண்டு."
ஹார்முஸ் ஜலசந்தியைத் திறந்து விடுவதாகச் சொல்லிவிட்டு ஈரான் ஏமாற்றிவிட்டது என்றும், கடலில் கண்ணிவெடிகளை வைத்து உலக நாடுகளுக்குப் பதற்றத்தை ஏற்படுத்துவதாகவும் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
சுமார் 20 மணி நேரம் நடந்த இந்தப் பேச்சுவார்த்தையை பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்து நடத்தியது. முடிவு எட்டப்படாவிட்டாலும், பேச்சுவார்த்தையைத் தொடருமாறு இரு தரப்பையும் பாகிஸ்தான் கேட்டுக்கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications