நல்ல செய்தி சொன்ன டிரம்ப்..ஈரான் எடுத்த மிக பெரிய முடிவு! இது மட்டும் நடந்துட்டாலே போதுமே! நடக்குமா?
நியூயார்க்: அமெரிக்கா-ஈரான் இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தாலும், எப்போது வேண்டுமானாலும் மீண்டும் வெடிக்கலாம் என்ற பதற்றம் நீடித்து வரும் நிலையில், தற்போது ஒரு புதிய திருப்பமாக, ஈரான் தனது செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்தே யுரேனியத்தை மையமாகக் கொண்டே போர் தொடங்கிய நிலையில், டிரம்பின் அறிவிப்பால் தற்போது மேற்காசியாவில் நீடித்து வரும் பதற்றம் குறையுமா? என்ற எதிர்பார்ப்பு சர்வதேச அளவில் உருவாகியுள்ளது.
கடந்த சில வாரங்களாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த தாக்குதல்களில் ஈரானின் முக்கிய ராணுவ அமைப்புகள் குறிவைக்கப்பட்டதாகவும், பல முக்கிய அதிகாரிகள் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது.

இதற்கு பதிலடி அளிக்கும் வகையில், ஈரானும் தனது தாக்குதல்களை அதிகரித்தது. குறிப்பாக, இஸ்ரேல் மற்றும் வளைகுடா பகுதிகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியானது.
ஈரான் யுரேனியம் ஒப்பந்தம்
இதற்கிடையில் உலக வர்த்தகத்திற்கு மிகவும் முக்கியமான கடல் பாதையாகக் கருதப்படும் ஹோர்மூஸ் நீரிணை தற்காலிகமாக மூடப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நடவடிக்கையால் பல நாடுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விநியோகம் பாதிக்கப்பட்டதுடன், எரிபொருள் விலையும் உயர்ந்ததது. இதனால் உலகளவில் பொருளாதார அச்சமும் உருவானது. இந்த பதற்றமான சூழ்நிலையில்தான், ஈரான் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும், போரை முடிவுக்கு கொண்டு வர ஒப்பந்தம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.
டொனால்ட் டிரம்ப்
இதைத் தொடர்ந்து தற்போது வெளியான புதிய தகவலில், ஈரான் தன்னிடம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஒப்படைக்க ஒப்புக்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்கா தொடர்ந்து ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க முயற்சி செய்து வருகிறது என்ற குற்றச்சாட்டை முன்வைத்து வந்த நிலையில், இந்த அறிவிப்பு முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
ஹோர்முஸ் நீரிணை
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், ஈரான் தனது அணு தொடர்பான பொருட்களை ஒப்படைக்க சம்மதித்துள்ளதாகவும், இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாக நல்ல வாய்ப்பு உருவாகியுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த ஒப்பந்தம் நிறைவேறினால், தற்போது பாதிக்கப்பட்டுள்ள எண்ணெய் விநியோகம் மீண்டும் சீராகும் என்றும், மூடப்பட்டுள்ள ஹோர்மூஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
அமைதி ஒப்பந்தம்
மேலும், இந்த அமைதி ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தால், அது ஒரு முக்கிய சர்வதேச நிகழ்வாக இருக்கும் என்றும், ஒப்பந்தம் பாகிஸ்தான் நாட்டில் கையெழுத்தாகும் வாய்ப்பு இருந்தால், தானும் அந்நாட்டிற்கு பயணம் மேற்கொள்ளலாம் என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். ஈரான் யுரேனியத்தை வழங்க தயாராக இருப்பதாக வெளியான தகவல், நீண்ட நாட்களாக நீடித்து வரும் பதற்றத்தை குறைக்கும் ஒரு முக்கிய அறிகுறியாக பார்க்கப்படுகிறது.
2ஆம் கட்ட பேச்சுவார்த்தை
இருப்பினும், இந்த ஒப்பந்தம் உண்மையில் நடைமுறைக்கு வருமா, அதன் மூலம் மேற்காசிய பகுதியில் நிலவும் பதற்றம் முழுமையாக குறையுமா என்பது அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகளின் முடிவைப் பொறுத்தே இருக்கும் என்று சர்வதேச அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனிடையே போர் நிறுத்தம் தொடர்பான 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடக்கவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications