21 ஆண்டுகளுக்கு முன் தொலைந்த மோதிரம்.. கலங்கிய தம்பதிகளுக்கு கிடைத்த சர்ப்ரைஸ்.. ஆஆ மிராக்கள்!
நியூயார்க்: அமெரிக்காவில் தம்பதியினர் ஒருவர் கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்னர் தாங்கள் தொலைத்த நிச்சயதார்த்த மோதிரத்தை மீண்டும் தேடி கண்டுபிடித்துள்ளனர். இதனை எப்படி தேடி கண்டுபிடித்தோம் என்பது குறித்த அவர்கள் கூறியுள்ள தகவல்கள் தற்போது சமூக வலைத்தள பயனர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்காவின் புளோரிடாவை சேர்ந்தவர் நிக் டே. இவருக்கு கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றிருக்கிறது. திருமணத்திற்கு முன்னதாக நிச்சயதார்த்தத்தில் தனது காதலியின் கையில் அணிவிப்பதற்காக அவர் ஆசை ஆசையாக வைர மோதிரம் ஒன்றை வாங்கியுள்ளார். திட்டமிட்டபடி நிச்சயதார்த்தம் நடைபெற்றிருக்கிறது. நிக் டேவும் வைர மோதிரத்தை தனது காதலி ஷைனாவின் கைகளில் போட்டுவிட்டு அழகு பார்த்திருக்கிறார். எல்லாம் இரண்டு மூன்று நாட்கள் மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்தது.
இதனையடுத்து எதிர்பாராத விதமாக ஷைனா அணிந்திருந்த மோதிரம் வீட்டு டாய்லெட்டில் விழுந்திருக்கிறது. அதனை மீட்டெடுக்க ஷைனா எவ்வளவோ முயன்றும் மோதிரம் மீண்டும் கிடைக்கவில்லை. இதனை எப்படி காதலனிடம் சொல்வது என்றும் தெரியவில்லை. இதனையடுத்து இரண்டு நாட்கள் எப்படியோ சமாளித்திருக்கிறார். ஆனால் மூன்றாவது நாள் காதலன் கேட்க இவர் மாட்டிக்கொண்டார். பின்னர் நடந்த விஷயத்தை கூறியுள்ளார்.
தேடுதல்
சிறிது நேரம் இருவருக்கு இடையேயும் இது தொடர்பாக சண்டை நடந்திருக்கிறது. அதன் பின்னர் மோதிரத்தை பத்திரமாக மீட்பது என்று இருவரும் முடிவெடுத்துள்ளனர். முதல் வேளையாக டாய்லெட்டிலிருந்து செப்டிக் டேங்கை இணைக்கும் பைப்பை தனியாக பிரித்து எடுத்து கவனமாக சோதனை செய்திருக்கின்றனர். ஆனால் அதில் எதுவும் கிடைக்கவில்லை. பின்னர் மெட்டல் டிடெக்டரை பயன்படுத்தி தேடியுள்ளனர். அப்போதும் மோதிரம் கிடைக்கவில்லை. சரி வேறு வழி கிடையாது என்று செப்டிக் டேங்க்கை சுத்தப்படுத்தும் லாரியை வர வைத்துள்ளனர். இந்த லாரியில் உள்ள இயந்திரம் செப்டிக் டேங்கில் உள்ள கழிவுகளை உறிஞ்சி எடுத்திருக்கிறது.
குடியிருப்பு
இப்படி எடுக்கப்பட்ட கழிவுகளை லாரியில் உள்ள கொள்கலனில் செலுத்துவதற்கு முன்னர் தனியாக ஒரு தொட்டியில் நிரப்பி அதில் மோதிரத்தை தேடி பார்த்துள்ளனர். அப்படி தேடியும் கிடைக்கவில்லை. சரி அவ்வளவுதான் என்று தேடுதல் முயற்சியை கைவிட்டுள்ளனர். ஆனால் மோதிரத்தை தொலைத்த கோபம் நிக் டேவுக்கு தொடர்ந்து இருந்துகொண்டே வந்திருக்கிறது. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தனது மனைவி ஷைனாவை திட்டிக்கொண்டே இருந்துள்ளார். இப்படியே காலங்கள் கடந்துகொண்டிருக்க சில நாட்களுக்கு முன்னர் இவர்கள் இருந்த வீட்டில் நிக் டேவின் பெற்றோரை குடி வைத்துவிட்டு இவர்கள் இருவரும் வேறு ஒரு வீட்டுக்கு சென்றுவிட்டனர்.
நீர் கசிவு
பழைய வீட்டில் குடியிருந்த நிக் டேவின் தாய் சில நாட்களுக்கு முன்னர் டாய்லெட்டில் நீர் கசிவு ஏற்பட்டுள்ளதை அறிந்து பிளம்மர் ஒருவரை அழைத்திருக்கிறார். வந்தவரும் நீர் கசிவை சரி செய்ய அதன் பழைய பைப்புகளை அனைத்தையும் எடுத்துவிட்டு புது பைப்புகளை மாற்றி இருக்கிறார். அப்போது அவருடைய கைக்கு மோதிரம் ஒன்று கிடைத்திருக்கிறது. இதை அப்படியே கொண்டு போய் நிக்கின் அம்மாவிடம் காட்ட முதலில் நிக் அம்மா தங்களுடையது கிடையாது என்று மறுத்துள்ளார். சரி எதுக்கும் தனது பையனிடம் ஒரு வார்த்தை கேட்டுவிடலாம் என்று நினைத்துக்கொண்டு போன் செய்து கேட்டிருக்கிறார்.
21 ஆண்டுகளுக்கு பின்னர்
மறுமுனையில் பேசிய நிக், அந்த பிளம்மரையும் மோதிரத்தையும் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள் நான் வந்துகொண்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார். பின்னர் சிறிது நேரத்திற்கெல்லாம் வீடு வந்து சேர்ந்த அவர் இந்த மோதிரத்தை பார்த்து அதிர்ச்சியில் உறைந்துள்ளார். ஆம் இந்த மோதிரம் சுமார் 21 ஆண்டுகளுக்கு முன்னர் தொலைந்து போன மோதிரம்தான் என்பதை உறுதி செய்து கையோடு மோதிரத்தை எடுத்துச்சென்று கடையில் கொடுத்து பாலிஷ் போட்டுள்ளார். பின்னர் கிறிஸ்துமஸ் கிஃப்டாக தன்னுடைய மனைவிக்கு மீண்டும் கொடுத்துள்ளார். கிஃப்டை பிரித்த பார்த்து ஆச்சரியத்தில் வியந்து போன மனைவி ஷைனா, இது எப்படி கிடைத்தது என்று கேட்க இவர் முழு கதையையும் சொல்லியுள்ளார்.
வாழ்த்து
இத்தனை நாட்கள் கழிவறையிலேயே இருந்த காரணத்தினால் மோதிரத்தின் கற்களை மட்டும் எடுத்து வேறு மோதிரத்தில் பொருத்திக்கொள்ளலாம் என்று இவர்கள் யோசித்து வருகின்றனர். இல்லையெனில் தங்களது வருங்கால சந்ததியினருக்கு இதனை காட்ட அப்படியே விட்டு விடலாம் என்றும் யோசித்திருக்கின்றனர். எப்படியாயினும் 21 ஆண்டுகளுக்கு பின்னர் மோதிரம் மீண்டும் கிடைத்திருப்பது இவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. அதேபோல இந்த செய்தியை சமூக வலைத்தளத்தில் அவர்கள் பகிர்ந்துள்ள நிலையில் அவர்களுக்கும் பலர் வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.