ராணுவத்தை அனுப்ப திட்டமா?.. பென்டகனில் முக்கிய அதிகாரிகளை நீக்கிய டிரம்ப்.. உள்ளே வந்த விசுவாசிகள்!
நியூயார்க்: அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமாக பென்டகனில் முக்கியமான அதிகாரிகள் பலர் நீக்கப்பட்டு, அதிபர் டிரம்பின் விசுவாசிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். டிரம்பின் இந்த திடீர் நடவடிக்கை நிறைய சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
1807 மார்ச் மாதம் 3ம் தேதி.. அமெரிக்காவில் கொண்டு வரப்பட்ட சட்டம் "insurrection act". அமெரிக்க நாட்டிற்குள் உள்நாட்டு கலவரம், கட்டுப்படுத்த முடியாத போராட்டம், உள்நாட்டு போர் ஏற்படும் சமயங்களில் அதிபருக்கு உச்சபட்ச அதிகாரம் கொடுக்கும் சட்டம் ஆகும் இது.
இந்த சட்டம் மூலம்.. அமெரிக்காவின் மாகாணங்களுக்குள் அதிபர் டிரம்ப் ராணுவத்தை அனுப்ப முடியும். இந்த சட்டத்தை பயன்படுத்தி..போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த ராணுவம், தேசிய படைகளை அதிபர் டிரம்ப் பயன்படுத்த முடியும்.. இந்த சட்டத்தை டிரம்ப் தற்போது கையில் எடுக்க திட்டமிடுகிறாரோ என்று சந்தேகம் எழுந்துள்ளது... ஆம் அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமான பென்டகனில் டிரம்ப் செய்து வரும் மாற்றங்கள் இந்த சந்தேகத்தை அதிகமாக்கி உள்ளது.
என்ன நடந்தது
அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமாக பென்டகனில் கடந்த சில நாட்களாக முக்கியமான அதிகாரிகள் பலர் நீக்கப்பட்டு வருகிறார்கள். நேற்று முதல்நாள் பென்டகனின் பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பர் நீக்கப்பட்டார். மார்க் எஸ்பர் நீக்கப்பட்டு 24 மணி நேரத்தில் இன்னும் 3 உயர் அதிகாரிகள் பென்டகனில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்... இந்த இடங்களில் எல்லாம் அதிபர் டிரம்பிற்கு நெருக்கமான விசுவாசிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஏன்
எஸ்பர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக டிரம்பிற்கு நெருக்கமான கிறிஸ்தபர் மில்லர் பாதுகாப்பு செயலாளர் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் முன்னாள் ஜெனரல் ஆண்டனி டாட்டா பென்டகனில் முக்கிய பொறுப்பை பெற்றுள்ளார். முன்னாள் நேவி அட்மிரல் ஜோசப் கேர்ணல் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக காஸ் பட்டேல் என்னும் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள் எல்லோரும் டிரம்பிற்கு மிகவும் நெருக்கமான அதிகாரிகள்.
நெருக்கம்
அதிலும் சில அதிகாரிகள்.. டிரம்பிற்காக தேர்தல் நேரத்தில் பிரச்சாரம் செய்தவர்கள். இன்னும் சிலர் ஜார்ஜ் பிளாய்டு போராட்டத்தின் போது வாஷிங்டன் உள்ளே ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்று டிரம்பிற்கு அறிவுரை வழங்கியவர்கள். இவர்களைத்தான் டிரம்ப் பென்டகன் உள்ளே இறக்கி உள்ளார். அதிலும் பென்டகனில் பதவி பெற்று இருக்கும் ஆண்டனி டாட்டா.. முன்னாள் அதிபர் ஒபாமாவை தீவிரவாதிகள் தலைவர்.. இஸ்லாமிய நாடுகளுக்காக பணியாற்றிய அமெரிக்க அதிபர் என்று விமர்சித்தவர்.. இவருக்கு பென்டகனில் உயர் பதவி கிடைத்துள்ளது.
பலர்
இப்படி டிரம்பிற்கு நெருக்கமான அதிகாரிகள் எல்லோரும் பாதுகாப்பு தலைமையகமாக பென்டகனில் உயர் பொறுப்பை பெற்று உள்ளனர். டிரம்ப் காலத்தில்.. டிரம்பிற்கு நெருக்கமாக இருந்த சிலர் கூட நீக்கப்பட்டு புதிய விசுவாசிகள் பணிக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். அதிபர் தேர்தலில் டிரம்ப் தோல்வியை ஏற்றுக்கொள்ளாமல் முரண்டு பிடித்து வருகிறார். இப்படிப்பட்ட நேரத்தில்தான் இந்த பணி மாற்றம் நடந்துள்ளது.
சந்தேகம்
ஜார்ஜ் பிளாய்டு போராட்டத்தின் போது.. அமெரிக்காவிற்குள் ராணுவத்தை அனுப்ப பென்டகன் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் அப்போதே மார்க் எஸ்பர் உள்ளிட்ட பென்டகன் அதிகாரிகள் மீது டிரம்ப் கோபத்தில் இருந்தார். இந்த நிலையில் அப்போது ராணுவத்தை அனுப்ப எதிர்ப்பு தெரிவித்த அதிகாரிகளை எல்லாம் டிரம்ப் தற்போது நீக்கி உள்ளார்.. இதனால் அமெரிக்காவிற்கும் ராணுவத்தை இறக்க டிரம்ப் பிளான் போடுகிறாரா என்று கேள்வி எழுந்துள்ளது.
சட்டம்
"insurrection act" சட்டத்தை பயன்படுத்தி..அமெரிக்காவிற்குள் ராணுவத்தை கொண்டு வர டிரம்ப் திட்டமிடுகிறாரா என்று கேள்விகள் எழுந்துள்ளது. இதற்காகத்தான் பென்டகனில் இருக்கும் முக்கிய அதிகாரிகளை, நேர்மையானவர்களை நீக்கிவிட்டு தனது விசுவாசிகளை கொண்டு வந்துள்ளாரோ என்று சந்தேகம் வருகிறது. டிரம்பின் இந்த செயல் முக்கியமான கேள்விகளை எழுப்பி உள்ளது. அதிபர் டிரம்ப் பதவி விலக மறுத்து.. அதற்கு எதிராக அமெரிக்க மக்கள் போராட்டத்தில் குதித்தால் டிரம்ப் அப்போது ராணுவத்தை அனுப்பும் திட்டத்தில் இந்த மாற்றங்களை செய்கிறாரா என்று கேள்வி எழுந்துள்ளது.