தமிழ்நாட்டில் கொட்டித்தீர்க்கும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை?
நீலகிரி: கனமழை எதிரொலி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் தென்மேற்குப் பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. தென் மாவட்டங்களிலும் மேற்கும் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் மட்டுமல்லாது வட மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே அடுத்த இரு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதேபோல் கேரளாவில் 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, கோவை, திண்டுக்கல் மதுரை, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தூத்துக்குடி, நாமக்கல், சேலம், ஈரோடு, சிவகங்கை, திருச்சி, கரூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூரில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் இன்று காலை முதலே விட்டுவிட்டு லேசான மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. முன்பு தமிழ்நாட்டிற்கு இன்று மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டு இருந்தது. இதனால் மழையால் ஏற்படும் சேதங்களை உடனடியாக சரிசெய்ய மாவட்ட நிர்வாகங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கனமழை எதிரொலி காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மீறினால் சம்மந்தப்பட்ட பள்ளி, கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அம்ரித் தெரிவித்துள்ளார்.
அதேபோல் கனமழை காரணமாக நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை மற்றும் கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் எனவும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். அதேபோல் மழை பெய்து வருவதால், அத்தியாவசிய தேவையின்றி பொதுமக்கள் வெளியில் வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications