3 நாளைக்கு புத்தாண்டு கொண்டாட்டம் கிடையாது.. ஸ்க்ரிட் உத்தரவு போட்ட நீலகிரி ஆட்சியர்
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் 3 நாட்களுக்கு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும், இரவு 11 மணிக்கு மேல் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் நீலகிரி ஆட்சியர் அம்ரித் அறிவுறுத்தியுள்ளார்.
தென் ஆப்பிரிக்க நாட்டில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றின் அடுத்த அவதாரமான ஓமிக்ரான் வைரஸ் தொற்று, இந்தியாவிலும் கால் பதித்துள்ளது. மஹாராஷ்டிரா, டெல்லி, தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, குஜராத், உத்தர பிரதேசம், கர்நாடா உள்ளிட்ட மாநிலங்களில் பரவி உள்ளது.
ஓமிக்ரான் வைரஸ் தொற்று டெல்டா வகை கொரோனா தொற்றுகளை விட மிகவும் ஆபத்தானது என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதால், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும்படி, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் ஓமிக்ரான் மற்றும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தமிழக அரசு பல்வேறு வழிமுறைகளை அறிவித்துள்ள நிலையில் சுற்றுலா நகரமான நீலகிரியில் மூன்று நாட்களுக்கு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி மாவட்டத்தில் நட்சத்திர விடுதிகள், தனியார் காட்டேஜ்கள், ஆலயங்கள், உட்பட அனைத்து இடங்களிலும் இரவு 11 மணி வரை மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளதாகவும் நோய் தடுப்பு வழி நெறிமுறைகளை பின்பற்றி வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் கலந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் புத்தாண்டுக் கொண்டாட்டங்களின் போது பட்டாசுகள் வெடிக்க தடை விதிப்பது உடன் அனைத்து சுற்றுலா தலங்களிலும் முக கவசம் சமூக இடைவெளி கிருமிநாசினி பயன்படுத்துதல் உள்ளிட்ட வழி நெறிமுறைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். மேலும் இரவு நேரங்களில் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் கூடாது எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் ஜனவரி 10 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. புதிய கட்டுபாடுகள் அறிவிப்பு.. முழு விவரம் இதோ!