கூடலூர்-சிறியூர்- தெங்குமரஹாடா-சத்தியமங்கலம் சாலை.. நீலகிரி எதிர்பார்க்கும் மிகப்பெரிய திட்டம்
ஊட்டி: நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து சிறியூர், தெங்குமரஹாடா, சத்தியமங்கலம் வழியாக சாலை அமைத்தால், கூடலூரில் இருந்து மேட்டுப்பாளையம், கோவை, திருப்பூர், ஈரோடு, உள்ளிட்ட சமவெளி பகுதிகளுக்கு எளிதாக செல்ல முடியும். மேலும் கூடலூர், பந்தலூர் பகுதி மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களும், எரிபொருள்களும் எளிதாக கிடைக்கும் என்று நீலகிரி மாவட்ட மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒரே ஒரு சமவெளி பகுதி என்றால் அது தெங்குமரஹாடா தான்.. இங்கு செல்ல நீலகிரி மாவட்டத்தில் இருந்து நேரடியாக சாலை வசதிகள் இல்லை. மேட்டுப்பாளையத்தில் இருந்து பவானிசாகர் வழியாக வந்து தான் தெங்குமரஹாடா செல்ல முடியும். தெங்குமரஹாடா பகுதியை பொறுத்தவரை அடர்ந்த வனப்பகுதியில் மாயாற்றை கடந்து உள்ளது. நீலகிரி வனப்பகுதியில் வனவிலங்குகள் அதிக அளவில் வசித்து வரும் பகுதியாகும்.. இந்த பகுதியில் சாலைவசதிகள் கிடையாது. நேரடியாக சிறியூரை இணைத்து அதன் பிறகு கூடலூரையும் இணைக்க முடியும் என்றாலும், அடர்ந்த வனப்பகுதியாகும்..இதுதான் சிக்கலுக்கு காரணமாக உள்ளது. அதேநேரம் இந்த சாலை குறித்து கூடலூர் பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பந்தலூர் தோட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை துணை பொதுச்செயலாளர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பி இருந்தார். அந்த மனுவில் அவர் கூறுகையில், "நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூரில் இருந்து மேட்டுப்பாளையம், கோவை, திருப்பூர், ஈரோடு, சென்னை உள்பட தமிழகத்தின் சமவெளி பகுதிகளுக்கு செல்ல தற்போது ஊட்டி, குன்னூர் சாலை மார்க்கமாக செல்ல வேண்டும். மழைகாலங்களில் இந்த சாலையில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்புகள் ஏற்படுகிறது.
அப்போது சென்னைக்கு பெங்களூர் வழியாகவும், கோவைக்கு கேரளா மாநிலம் நிலம்பூர், பெருந்தல்மன்னா, பாலக்காடு வழியாகவும் செல்லும் நிலை உள்ளது. மேலும் அப்போது அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது. மலைப்பாதையின் வழியாக ஏறி இறங்கி செல்வதால் லாரிகளின் வாடகையும் அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்படும் விலை உயர்வால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே தெங்குமரஹாடா, சிறியூர், சத்தியமங்கலம் வழியாக சாலை அமைத்தால் கூடலூரில் இருந்து மேட்டுப்பாளையம், கோவை, திருப்பூர், ஈரோடு, உள்ளிட்ட சமவெளி பகுதிகளுக்கு எளிதாக செல்ல முடியும். மேலும் கூடலூர், பந்தலூர் பகுதிமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களும், எரிபொருள்களும் எளிதாக கிடைக்கும். விலை வாசியும் குறையும். எனவே பொதுமக்களின் நலன் கருதி இந்த சாலை திட்டத்தை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications