பிரான்ஸ் அதிபர் தேர்தல்.. இரு முறை வாக்குப்பதிவு நடப்பது இதற்குதானா! புதுவையிலும் விறுவிறு தேர்தல்
பாரீஸ்: பிரான்ஸ் அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தமிழகம் புதுச்சேரியிலும் நடைபெறும் நிலையில், அந்நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெறும் முறையைச் சற்றே பார்க்கலாம்.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்ஸில் இன்று இரண்டாம் கட்ட அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் தற்போதைய அதிபர் இமானுவேல் மாக்ரோன் மற்றும் மரைன் லு பென் ஆகியோர் களத்தில் உள்ளனர்.
பிரான்ஸ் நாட்டில் இன்று காலை முதலே அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று வாக்குப்பதிவு முடிந்த உடன் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

பிரான்ஸ்
பிரான்ஸ் நாட்டிற்கு வெளியே உள்ள அந்நாட்டின் பிராந்தியங்களிலும் இன்று இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. அதற்கு முன்பு பிரான்ஸ் நாட்டில் எப்படித் தேர்தல் நடைபெறுகிறது என்பதை பார்க்கலாம். பிரான்ஸ் அதிபர் தேர்தல் ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. பிரான்ஸ் அதிபர் சேர்தலில் ஒருவர் வெல்ல absolute majority எனப்படும் தனிப்பெரும்பான்மை பெற வேண்டும்.

அதென்ன absolute majority
இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் அதிக வாக்குகளைப் பெறுபவர்களுக்கே வெற்றி என்ற முறை கடைப்பிடிக்கப்படுகிறது. அதாவது தேர்தலில் 5 பேர் போட்டியிடுகின்றனர் என்றால் அதில் அதிக வாக்குகளைப் பெற்றவர்களே வென்றவர்களா அறிவிக்கப்படுவார்கள். மொத்தம் 100 வாக்குகள் உள்ளது என்றால், அதில் 30 வாக்குகளைப் பெற்றாலும், அவர் மற்றவர்களைக் காட்டிலும் அதிக வாக்குகளைப் பெற்றால் வென்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள். ஆனால், இந்த absolute majority முறையில் ஒருவர் 50 சதவிகித வாக்குகளை நிச்சயம் பெற்று இருக்க வேண்டும்.

தேர்தல் முறை
பிரான்ஸ் நாட்டில் இந்த absolute majority முறை தான் பின்பற்றப்படுகிறது. முதற்கட்ட தேர்தலில் பலரும் போட்டியிடுவார்கள். அதில் யாராவது 50% வாக்குகளைப் பெற்றால் அவர்கள் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள். அதேநேரம் யாரும் 50% வாக்குகளைப் பெறவில்லை என்றால், அதில் முதல் இரு இடங்களைப் பெற்றவர்களுக்கு மட்டும் இரண்டாம் கட்ட தேர்தல் நடத்தப்படும். அதில் 50% பெறுவோர் வென்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள்.

இரண்டாம் கட்ட தேர்தல்
கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி பிரான்ஸ் நாட்டில் முதற்கட்ட தேர்தல் நடைபெற்றது. அதில் யாருக்கும் absolute majority கிடைக்கவில்லை. அதிகபட்சமாக தற்போது அதிபராக இருக்கும் மக்ரோன் 27.85% வாக்குகளைப் பெற்றார். அவரைத் தொடர்ந்து மரைன் லு பென் 23.15% வாக்குகளைப் பெற்றார். இப்போது இவர்கள் இருவருக்கும் இடையே தான் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 2017 அதிபர் தேர்தலிலும் கூட இவர்கள் இருவருக்கும் இடையே தான் இரண்டாம் கட்ட தேர்தல் நடந்தது. அதில் 66.10% வாக்குகளைப் பெற்று மக்ரோன் வெற்றி பெற்றார்.

மீண்டும் நேருக்கு நேர்
இப்போது மீண்டும் 4 ஆண்டுகள் கழித்து இருவரும் மோதிக்கொள்கின்றனர். இதுவரை வெளியான கருத்துக் கணிப்புகள் மக்ரோனை வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. கடந்த 2017 தேர்தலைப் போலப் பெரியளவில் மக்ரோனால் வெல்ல முடியாது என்றாலும் கூட குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வென்று அவரே மீண்டும் அதிபர் பதவியில் அமர வாய்ப்புகள் அதிகம் என்று பிரான்ஸ் ஊடகங்கள் கூறியுள்ளன.

வெற்றியை தீர்மானிக்கும் இடதுசாரிகள்
இருவருக்கும் தனிப்பெரும்பான்மை பெற வைக்கும் அளவுக்குத் தீவிர ஆதரவாளர்கள் இல்லை. எனவே, இந்தத் தேர்தலில் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டாம் என்று முடிவு செய்கிறார்களோ அதுவே முடிவைத் தீர்மானிக்கும். இந்தத் தேர்தலில் இடதுசாரி வாக்காளர்களின் முடிவு முக்கியமானதாக இருக்கும். மரைன் லு பென் தீவிர வலதுசாரி என்பதால் அவருக்கு இடதுசாரிகள் வாக்கு செல்லாது. அதேநேரம் அதிபராக இருந்த காலத்தில் மக்ரோன் செயல்பாடுகள் இடதுசாரிகளில் பலரை ஆத்திர மூட்டியது. இதனால் மீண்டும் அவருக்கு வாக்களிப்பார்களா என்பது கேள்விக்குறி தான்!

அதிபர் தேர்தல்
பிரான்ஸ் சட்டப்படி அதிபர் தேர்தலில் பிரான்ஸ் நாட்டிற்கு வெளியே உள்ள ஆளுகைக்கு உட்பட பிராந்தியங்களில் வசிக்கும் மக்களும் வாக்களிக்கலாம். வெவ்வேறு டைம் ஜோன்கள் காரணமாக ஏற்கனவே கனடா கரீபியன் பகுதிகளில் உள்ள பிரஞ்சு பிரதேசங்களில் தேர்தல் முடிந்துவிட்டது. அதேபோல புதுச்சேரி, தமிழ்நாடு, கேரளா மாநிலங்களில் உள்ள பிரான்ஸ் குடிமக்கள் வாக்களிக்கவும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இங்குள்ள மொத்தம் 4564 பிரான்ஸ் குடிமக்கள் இன்று வாக்களிக்கின்றனர்.

புதுச்சேரி
இதற்காகப் புதுச்சேரியில் இரு வாக்குப்பதிவு மையங்களும், சென்னை மற்றும் காரைக்காலில் ஒரு வாக்குப்பதிவு மையத்தையும் பிரான்ஸ் தூதரகம் ஏற்படுத்தி உள்ளது.. இன்று காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 7 மணி வரை நடைபெறுகிறது. வாக்குப்பதிவு தொடங்கியது முதல் பிரான்ஸ் குடிமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். 18 வயதைத் தாண்டிய பிரான்ஸ் குடிமக்கள் வெளிநாட்டில் வசித்தாலும், அவர்கள் அனைத்து தேர்தல்களிலும் வாக்களிக்கலாம்.












Click it and Unblock the Notifications