அடுத்து இந்த நாட்டிலும் பரவிய புதிய வகை கொரோனா... என்ன செய்யப் போகிறது உலக சுகாதார அமைப்பு
பாரீஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரீஸிலும் உருமாறிய கொரோனா பாதிப்பு ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரிட்டன் நாட்டில் குறைந்து வந்த கொரோனா வைரஸ், கடந்த சில வாரங்களாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் புதிய வகை கொரோனா வைரசை கண்டறிந்தனர்.
Recommended Video
இதேபோல தென் ஆப்பிரிக்காவிலும் மற்றொரு புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. தடுப்பு மருந்துகளிலிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ளவே வைரஸ் இவ்வாறு தன்னை தொடர்ந்து உருமாற்றி வருவதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பிரான்சில் புதிய வகை கொரோனா
தற்போது இந்த உருமாறிய கொரோனா வைரஸ் பிரான்ஸ் நாட்டிற்கும் பரவியுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் புதிய வகை கொரோனா காரணமாக ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். பிரிட்டன் நாட்டில் வசிக்கும் அந்த நபர் லண்டனிலிருந்து கடந்த டிசம்பர் 21ஆம் தேதி பிரான்ஸ் திரும்பியுள்ளார். அப்போது நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு உருமாறிய கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மேலும், பயணத்தின்போது அவருடன் தொடர்பிலிருந்தவர்கள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக அந்நாட்டுச் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
புதிய கட்டுப்பாடுகள்
முன்னதாக, கடந்த திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய பிரான்சின் சுகாதாரத் துறை அமைச்சர் ஆலிவர் வேரன், இந்த உருமாறிய கொரோனா ஏற்கனவே நாட்டில் இருக்கக்கூடும் என்று எச்சரித்திருந்தார். ஒருவருக்கு உருமாறிய கொரோனா உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து பிரிட்டன் பயணிகளுக்கு பிரான்ஸ் அரசு 48 மணி நேரம் தடை விதித்தது. அதன் பின்னர் தற்போது பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பிரிட்டனுடனான பயணிகள் போக்குவரத்தை அனுமதிப்பதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது பிரான்ஸ் குடிமகன்களுக்கும் பிரான்ஸில் தங்க உரிய அனுமதி வைத்திருப்பவர்களுக்கும் தொழில்முறையாக பிரான்ஸ் வருபவர்களுக்கு மட்டும் தற்போது அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பிரிட்டனிலிருந்து பிரான்ஸ் வருபவர்கள் மூன்று நாள்களில் தங்களுக்கு கொரோனா இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும் என்றும் பிரான்ஸ் உத்தரவிட்டுள்ளது.
பல்வேறு நாடுகளுக்கும் பரவும் புதிய வகை கொரோனா
இந்தப் புதிய வகை கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளுக்கும் வேகமாகப் பரவி வருகிறது. இத்தாலி தலைநகர் ரோமில் ஒரு நோயாளிக்கு உருமாறிய கொரோனா இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். அதேபோல டென்மார்க்கில் ஒன்பது பேருக்கும், நெதர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் தலா ஒருவருக்கும் இந்தப் புதிய வகை கொரோனா இருப்பது கண்டயறிப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
பிரிட்டனில் அதிகரிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்
இந்தப் புதிய வகை கொரோனா வைரஸ் மற்ற வகைகளைவிட 70% வேகமாகப் பரவுவதாகப் பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன் தெரிவித்திருந்தார். மேலும், கிறிஸ்மஸுக்கு முன்னதாக பிரிட்டிஷ் சுகாதாரத் துறை அமைச்சர் மாட் ஹான்காக் இங்கிலாந்தின் தெற்கு பகுதிகளில் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவித்தார்.
கொரோனா பாதிப்பு
ஐரோப்பாவில் கொரோனா காரணமாக மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாகப் பிரிட்டன் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 39 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் அங்கு கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 லட்சத்தைக் கடந்துள்ளது. அவர்களில் 69 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.