18 ஆண்டு.. சொந்த வீடு இன்றி விமான நிலையத்திலேயே வசித்த விசித்திர மனிதர்.. மாரடைப்பால் மரணம்-சோகம்
பாரீஸ்: குடியுரிமை பிரச்சனையால் சொந்த நாடு இல்லை என 18 ஆண்டுகளாக விமான நிலையத்திலேயே வசித்து பல திரைப்படங்களுக்கு கருவாக இருந்த 76 வயது நிரம்பிய நபர் மாரடைப்பால் மரணடைந்துள்ளார்.
உலகில் பல விசித்திரமான வழக்கத்தை பின்பற்றும் மனிதர்கள் உள்ளனர். இதில் சிலர் உலகம் முழுவதும் பிரபலமடைந்து விடுவார்கள்.
அந்த வகையில் பிரபலமடைந்தவர் தான் ஈரானை சேர்ந்தவர் மெஹ்ரான் கரிமி நாசேரி. இவரது வயது 76. இவரது தந்தை ஈரான் நாட்டை சேர்ந்தவர். தாய் ஐரோப்பிய நாட்டை சேர்ந்தவர்.
தொங்கு தோட்டம்.. பசுமை சுவர்.. பிரமிக்க வைக்கும் பெங்களூர் விமான நிலையம்.. பிரமாண்டத்தின் உச்சம்
நாட்டை விட்டு வெளியேற்றம்
மெஹ்ரான் கரிமி நாசேரி 1945ல் ஈரானில் பிறந்தார். அதன்பிறகு பிரிட்டன் சென்று படித்து மீண்டும் நாடு திரும்பினார். இந்நிலையில் தான் 1977 காலக்கட்டத்தில் ஈரானின் மன்னராக இருந்த முகமது ரெஸா பஹ்லவிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதாக நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் தனது தாயின் சொந்த நாடான ஐரோப்பாவில் குடியேற முடிவு செய்தார்.
குடியுரிமை வழங்க மறுப்பு
பிரிட்டனில் குடியேற முடிவு செய்தார். ஆனால் அரசியல் காரணங்களுக்காக அவருக்கு குடியுரிமை வழங்கப்படவில்லை. மேலும் பல நாடுகளும் மறுத்தன. இருப்பினும் அவர் பிரிட்டன், நெதர்லாந்து, ஜெர்மனி என சில நாடுகளில் வசித்த நிலையில் அவரது முக்கிய ஆவணங்கள் தவறின. இதனால் அவர் எந்த நாட்டை சேர்ந்தவர் என்பதை அடையாளப்படுத்துவதில் பிரச்சனை எழுந்தது.
விமான நிலையத்திலேயே..
இதையடுத்து அவர் தன்னை நாடு இல்லாதவர் என அறிவித்த நிலையில் பிரான்சின் பாரீசில் உள்ள சார்லஸ் டீ கவ்ளி விமான நிலையத்திலேய தங்க ஆரம்பித்தார். 1988 முதல் தொடர்ந்து விமான நிலையத்திலேயே தங்க துவங்கினார். விமான நிலைய முனையத்தில் உள்ள இருக்கையில் வசிக்க தொடங்கினார். உடைமைகளை தன்அருகே வைத்து கொண்டு அவர் வாழ தொடங்கினார். விமான நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்களுடன் நெருங்கி பழகிய நிலையில் அவர்களே உணவு கொடுத்தனர்.
வெளியான திரைப்படங்கள்
இந்நிலையில் தான் விமான நிலையத்தில் அவர் தங்கி வருவது உலகம் முழுவதும் பரவியது. இதையடுத்து அவரது வாழ்க்கையை அடிப்படையாக வைத்து பல நாடுகளில் திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டன. அமெரிக்காவில் ‛The Terminal', பிரெஞ்சு மொழியில் ‛Tombes du ciel' உள்பட பல படங்கள் இவரது கதையின் அடிப்படையில் படமாக்கப்பட்டன. இதனால் அவரது புகழ் இன்னும் உச்சத்துக்கு சென்றது. பல நாடுகளை சேர்ந்தவர்கள் அவரை நேர்க்காணல் செய்தனர்.
விமான நிலையத்தில் 18 ஆண்டு
இருப்பினும் அவர் தொடர்ந்து விமான நிலையத்திலேய வசித்து வந்தார். 18 ஆண்டுகள் வரை மெஹ்ரான் கரிமி நாசேரி விமான நிலையத்திலேய வசித்து வந்தார். 2006ல் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவம சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. இதையடுத்து அவர் உடல் நலனை கருத்தில் கொண்டு பிரான்சு அரசு அனுமதி வழங்கிய நிலையில் விடுதியில் தங்க துவங்கினார். திரைப்படங்களுக்காக அவர் பெற்ற பணத்தை பயன்படுத்தி விடுதியில் வசித்து வந்தார்.
மாரடைப்பால் மரணம்
இந்நிலையில் சமீபத்தில் அவர் மீண்டும் விடுதியில் இருந்து விமான நிலையத்துக்கு வந்து வசிக்க தொடங்கினார். இந்நிலையில் தான் அவர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். 18 ஆண்டுகளாக தொடர்ந்து விமான நிலையத்தில் வசித்த மெஹ்ரான் கரிமி நாசேரி இறுதியாக விமான நிலையத்தில் வசித்தபோதே இறந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.