இஸ்லாமிய மதவாதத்துக்கு எதிரான மசோதா.. 'நீங்க அப்படி பேசலாமா?' - பாகிஸ்தானுக்கு பிரான்ஸ் சம்மன்
பாரீஸ்: பிரான்ஸில் இஸ்லாமிய அடிப்படைவாதம் தலைத்தூக்குவதைத் தடுக்கும் நோக்கில் நிறைவேற்றப்பட்ட மசோதா குறித்து பாகிஸ்தான் அதிபர் விமர்சித்த நிலையில், பிரான்ஸ் அரசு பாக்., தூதருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் அடுத்தடுத்து நடந்த தீவிரவாத தாக்குதல்களைத் தொடர்ந்து, தீவிர இஸ்லாமியவாத குழுக்களை எதிர்கொள்ளும் வகையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. குறிப்பாக, நபிகள் நாயகம் குறித்த கார்ட்டூன்களை மாணவர்களிடத்தில் காட்டி, 'பேச்சு, கருத்து சுதந்திரம்' பற்றி வகுப்பறையில் விவாதம் நடத்திய பிரெஞ்சு ஆசிரியரின் தலை பள்ளிக்கு வெளியே துண்டிக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து இந்த மசோதா கொண்டுவரப்பட்டது.
இந்த புதிய சட்டத்தின்படி, ஒருவரின் தனிப்பட்ட விவரங்கள், இருக்கும் இடம் போன்றவற்றைத் தெரிவித்து, அதன் மூலம் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துவது கிரிமினல் குற்றமாக கருதப்படும்.
தீய நோக்கத்தோடு
மேலும், இந்த புதிய சட்டம் மூலம், இணையத்தில் வெறுப்புரைகள் கட்டுப்படுத்தப்படும். இஸ்லாமிய கோட்பாடுகளை போதிக்கும் ரகசிய பள்ளிகளுக்கு தடை விதிக்கப்படும். தீய நோக்கத்தோடு இணையத்தைப் பயன்படுத்தி அடுத்தவர்களைப் பற்றிய தகவல்களை வெளியிடுவது தடுக்கப்படும். எனினும் இந்த மசோதா மூலம் பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுவதாகவும், இஸ்லாம் மதத்துக்கு எதிரான அச்சம் உருவாக்கப்படுவதாகவும் சிலர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
சம்மன்
இந்நிலையில், இந்த பிரெஞ்சு மசோதா முஸ்லீம்களுக்கு களங்கம் விளைவிப்பதாக பாகிஸ்தான் அதிபர் ஆரிஃப் ஆல்வி கூறியதை அடுத்து, பிரெஞ்சு வெளியுறவு அமைச்சகம் பாகிஸ்தானின் தூதருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
அவமதிப்பு
கடந்த சனிக்கிழமையன்று இதுகுறித்து ஒரு மாநாட்டில் உரையாற்றிய ஆல்வி, "சிறுபான்மையினரை தனிமைப்படுத்த பெரும்பான்மைக்கு ஆதரவாக சட்டங்கள் மாற்றப்படுவது, ஆபத்தான முன்மாதிரியாக இருக்கிறது. நீங்கள் நபியை அவமதிக்கும் போது, நீங்கள் அனைத்து முஸ்லிம்களையும் அவமதிக்கிறீர்கள்" என்று கூறியுள்ளார்.
வேற்றுமை கூடாது
மேலும், "இந்த அணுகுமுறைகளை சட்டங்களில் சிக்க வைக்க வேண்டாம் என்று பிரான்சின் அரசியல் தலைமையை நான் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் மக்களை ஒன்றிணைக்க வேண்டும் - ஒரு மதத்தை ஒரு குறிப்பிட்ட முறையில் முத்திரை குத்தக்கூடாது, மக்களிடையே வேற்றுமையை உருவாக்கக் கூடாது" என்று கூறியுள்ளார்.
மறுக்கிறோம்
இதுகுறித்து பிரெஞ்சு வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இந்த மசோதாவில் எந்தவிதமான பாரபட்சமான அம்சங்களும் இல்லாத நிலையில், பாகிஸ்தானின் குற்றச்சாட்டு எங்களுக்கு வியப்பை ஏற்படுத்துகிறது. நாங்கள் அதனை மறுக்கிறோம். இது மதம் மற்றும் மனசாட்சியின் சுதந்திரத்தின் அடிப்படைக் கொள்கைகளால் உருவாக்கப்பட்டது. வெவ்வேறு மதங்களுக்கிடையில் எந்த வேறுபாட்டையும் ஏற்படுத்தாது, எனவே எல்லா மதங்களுக்கும் சமமாக பொருந்தும். பாகிஸ்தான் இதைப் புரிந்துகொண்டு நமது இருதரப்பு உறவுகளுக்கு ஆக்கபூர்வமான அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும்" என்று அது மேலும் கூறியுள்ளது.