யாரு சாமீ இவங்க! 29 அடி செல்போன் டவரை 'அலேக்காக' திருடி சென்ற.. பலே பவாரியாஸ்.. குழம்பும் போலீஸ்
பாட்னா: பீகார் மாநிலத்தில் நான்கடுக்கு மாடியில் அமைக்கப்பட்டிருந்த 29 அடி செல்போன் கோபுரத்தை திருடர்கள் சுவடே தெரியாமல் திருடி சென்றுள்ள சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
பீகார் மாநிலம் பாட்னாவில் ஷஹீன் கயூம் என்பவருக்கு சொந்தமாக நான்கு மாடி வீடு ஒன்று இருக்கிறது. இந்த வீட்டின் மாடியில் கடந்த 2006ம் ஆண்டு ஏர்செல் நிறுவனம் தனது செல்போன் டவர் ஒன்று கட்டியது. ஆனால் அதன் பின்னர் 2017ம் ஆண்டு இந்த டவர் ஜிடிஎல் நிறுவனத்துக்கு விற்கப்பட்டுவிட்டது. இந்த கைமாற்றலுக்கு பிறகு டவர் பெரிய அளவில் பயன்படாமலேயே இருந்திருக்கிறது.
இதனால் வீட்டின் உரிமையாளருக்கு வாடகை பணம் எதுவும் கொடுக்கப்படாமல் ஜிடிஎல் நிறுவனம் இழுத்தடிப்பு செய்திருக்கிறது. பல மாதங்களாக வாடகை பாக்கி வழங்கப்படாததால் வீட்டின் உரிமையாளர் கயூம் டவர் நிறுவனத்திடம் பணத்தை கேட்டிருக்கிறார். டவர் தற்போது செயல்பாட்டில் இல்லையென்பதால் வாடகை பணத்தை கொடுக்க முடியாது என்று நிறுவனம் கூறியிருக்கிறது. ஆனால் வீட்டு உரிமையாளர் ஷஹீன் கயூம், வாடகை கொடுக்கவில்லையெனில் டவரை காலி செய்துவிடுவோம் என்று கூறியுள்ளார்.

புகார்
இந்த பஞ்சாயத்துக்கு நடுவில் ஜிடிஎல் நிறுவனத்தின் ஏரியா மேலாளர், முகமது ஷாநவாஸ் அன்வர் கடந்த 16ம் தேதி டவரில் உள்ள பிரச்னைகளை சரி செய்யவும் பராமரிப்பு பணியை மேற்கொள்ளவும் ஷஹீன் கயூம் வீட்டிற்கு வந்திருக்கிறார். ஆனால் அவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அதாவது ஷஹீன் கயூம் வீட்டின் மாடியில் இருந்த டவரை கணவில்லை. இதனை சற்றும் எதிர்பாராத அவர் சுற்றி சுற்றி டவரை தேடியுள்ளார். ஆனால் எங்கு தேடியும் டவர் கிடைக்கவில்லை. டவரின் உதிரி பாகங்கள் கூட மிச்சமில்லாமல் அனைத்தும் காணாமல் போயுள்ளது. எனவே உடனடியாக பிர்பஹோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

வழக்குப்பதிவு
புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் IPC பிரிவு 379ன் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். விசாரணையில் இந்த டவரை கடைசியாக 2017ம் ஆண்டு ஜிடிஎல் நிறுவனத்தினர் வந்து சோதனை செய்து சென்றது தெரிய வந்தது. அதன் பின்னர் அவர்கள் வரவேயில்லை என்று பிர்பஹோர் காவல் நிலைய பொறுப்பாளர் சபிஹுல் ஹக் கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது, "நாங்கள் வீட்டின் உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டோம். ஆனால் அவர் கூறியது எங்களுக்கு அதிர்ச்சயளித்தது. அதாவது கொஞ்சம் நாட்களுக்கு முன்னர் ஜிடிஎல் நிறுவனத்தின் ஊழியர்கள் என சிலர் கயூமின் வீட்டிற்கு வந்துள்ளனர்.

ஊழியர்கள்
அவர்களிடம் வாடகை பாக்கி குறித்து கயூம் வாக்குவாதம் செய்துள்ளார். அவர்கள் நிச்சயம் வாடகை பாக்கியை தருவதாக கூறியுள்ளதோடு டவரை முழுமையாக மாற்றியமைக்க வேண்டும் என்று கூறி டவரை எடுத்து சென்றுள்ளனர். வீட்டு உரிமையாளர் கயூம் இவர்களை தடுக்கவில்லை. இதனையடுத்து டவர் முழுவதும் சிறி சிறிய துண்டாக பிரித்து ஒரு சிறிய லாரியில் ஏற்றி எடுத்து சென்றுள்ளனர். அவர்கள் சென்று நீண்ட நாட்களுக்கு பின்னர்தான் ஜிடிஎல் நிறுவனத்தின் அசல் ஊழியர்கள் வந்து டவரை தேடியுள்ளனர். இதனையடுத்து எங்களிடம் புகார் வந்திருக்கிறது.

நம்பிக்கை
இந்த விவகாரம் தொடர்பாக நாங்கள் மேலும் சிலரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். இந்த குற்றத்தை செய்தவர்கள் இதிலிருந்து தப்பிக்க முடியாது. அருகில் இருக்கும் சிசிடிவி காட்சிகள், பழைய இரும்பு விற்பனை கடைகள், இரும்பு உருக்கு ஆலைகள் என எல்லா இடங்களிலும் சோதனை செய்து வருகிறோம். விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள்" என்று கூறியுள்ளார். 29 அடி உயர செல்போன் டவர் தடமே இல்லாமல் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பாட்னாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications