'காதல்' பட பாணியில் பயங்கரம்.. காதலனை பஸ் முன் தள்ளிவிட்ட காதலியின் குடும்பம்.. கதறிய பெண்!
பாட்னா: தங்கள் வீட்டு பெண்ணை காதல் திருமணம் செய்த இளைஞரை, ஓடும் பஸ் முன்பு தள்ளிவிட்டு பெண் குடும்பத்தார் கொலை செய்த சம்பவம் பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பட்டப்பகலில் ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் இந்தக் கொலை அரங்கேறியது மக்களை மிகுந்த அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
நாகரீக வளர்ச்சி அடைந்த சமூகம் என நாம் சொல்லிக் கொண்ட போதிலும், இன்னும் சில மனிதர்கள் காட்டுமிராண்டிகளாகவே இருக்கின்றனர் என்பதற்கு இதுபோன்ற சம்பவங்கள் தான் சாட்சியாக இருக்கின்றன.

காதலுக்கு தடையாக இருந்த ஏழ்மை
பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டம் கத்தாரா கிராமத்தைச் சேர்ந்தவர் ரோஷன் குமார் (25). பட்டதாரியான இவர், அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதனிடையே, இவர்களின் காதல் விவகாரம் அந்தப் பெண்ணின் பெற்றோருக்கு அண்மையில் தெரியவந்து பெரும் பிரச்சினை ஆனதாக கூறப்படுகிறது. ரோஷன் குமாரும், அந்த இளம்பெண்ணும் ஒரே சமூகம் என்ற போதிலும், அவர் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர்களின் காதலுக்கு பெண்ணின் பெற்றோர் சம்மதிக்கவில்லை.

தகராறு செய்த பெண் வீட்டார்
ஆனால், அந்த இளம்பெண் திருமணம் செய்தால் ரோஷன் குமாரை மட்டுமே திருமணம் செய்வேன் என உறுதியாக இருந்துள்ளார். இதனால் அந்தப் பெண்ணின் பெற்றோரும், உறவினர்களும் கடந்த மாதம் ரோஷன் குமாரின் வீட்டுக்கு சில குண்டர்களுடன் சென்றுள்ளனர். அப்போது தனது மகளை மறந்துவிடும்படியும், அவரிடம் இனி பேசக்கூடாது எனவும் ரோஷன் குமாரை அவர்கள் மிரட்டியுள்ளனர். ஆனால் அவர்களின் மிரட்டலுக்கு ரோஷன் குமார் பணியவில்லை எனத் தெரிகிறது. இதன் காரணமாக, இரு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக, ரோஷன் குமாரையும், அவரது குடும்பத்தினரையும் அவர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர்.

யாருக்கும் தெரியாமல் திருமணம்
இந்நிலையில், இங்கிருந்தால் தங்களை சேர்ந்து வாழ விட மாட்டார்கள் எனத் தெரிந்துகொண்ட ரோஷன் குமாரும், இளம்பெண்ணும் யாருக்கும் தெரியாமல் கடந்த மாதம் முசாஃபர்பூர் மாவட்டத்துக்கு சென்றனர். அங்கு அவர்கள் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி, அங்கேயே திருமணமும் செய்து கொண்டனர். ரோஷன் குமாருக்கு உடனடியாக வேலை கிடைக்காததால் அவர் வேலை தேடி வந்துள்ளார். இதனிடையே, அந்த இளம்பெண்ணின் குடும்பத்தினர் அவர்கள் இருவரையும் வலைவீசி தேடி வந்தனர்.

தந்திரமாக பேசிய பெண் வீட்டார்
இந்த சூழலில், ரோஷன் குமாரை முசாஃபர்பூர் மாவட்டம் ஹாஜ்பூரில் பார்த்ததாக இளம்பெண்ணின் குடும்பத்தினரும் கடந்த வாரம் சிலர் கூறியுள்ளனர். இதன்பேரில், ஹாஜ்பூருக்கு கடந்த வெள்ளிக்கிழமை வந்த பெண்ணின் குடும்பத்தார், ரோஷன் குமாரின் புகைப்படத்தை காட்டி அங்குள்ளவர்களிடம் விசாரித்துள்ளனர். இதில் அவர்கள் தங்கியிருந்த வீட்டை அக்கம்பக்கத்தினர் காண்பித்தனர். இதையடுத்து, திடீரென வீட்டுக்கு வந்த அவர்களை பார்த்து ரோஷன் குமாரும், இளம்பெண்ணும் பதட்டம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து, பெண் வீட்டார் அவர்களை சமாதானப்படுத்தினர். "நம் ஊருக்கு செல்லலாம். அங்கு உங்களுக்கு திருமணமும் நடத்தி வைக்கிறோம்" என அவர்கள் கூறினர்.

கொடூரக் கொலை
இதனை நம்பிய அந்த இளம் ஜோடிகளும், பெண் வீட்டாருடன் அன்று மதியம் காரில் சென்றனர். கார் ஹாஜ்பூர் பகுதியை தாண்டி, ஃபகுலி செளக் பகுதியை அடைந்ததும் திருமணத்துக்கு தேவையான சில பொருட்களை வாங்கி வருமாறு ரோஷன் குமாரை பெண் வீட்டார் கேட்டுக்கொண்டனர். இதையடுத்து அவரும் காரில் இருந்து இறங்கியுள்ளார். அவருடன் பெண்ணின் தந்தை, சகோதரர்கள், மாமா ஆகியோரும் சென்றனர். அப்போது சாலையை கடக்கும் போது, ரோஷன் குமாரின் கை, கால்களை பிடித்து தூக்கிய அவர்கள், அங்கு வந்துக் கொண்டிருந்த பஸ்ஸின் முன்பு தூக்கியெறிந்தனர். இதில் பஸ் அவர் மீது ஏறியதில், ரோஷன் குமார் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.

கைது நடவடிக்கை
தன் கண் முன்பே கணவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டதை பார்த்த அந்த இளம்பெண் கதறி அழுதார். இந்த சம்பவத்தை கண்ட அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். பின்னர் போலீஸாரு்ககு இதுகுறித்து தகவல் அளிக்கப்பட்டது. இதன்பேரில் போலீஸார் அங்கு வந்து ரோஷன் குமாரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தப்பியோடிய பெண் வீட்டார் 3 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர். தலைமறைவாகியுள்ள மற்ற நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications