ஷாக்! தனது நிலத்தில் விளையாடிய குழந்தைகளை துப்பாக்கியால் சுட்டு விரட்டிய பாஜக அமைச்சரின் மகன்
பாட்னா: பீகார் மாநில அமைச்சரின் மகன் தனக்கு சொந்தமான நிலத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை பயமுறுத்துவதற்காக வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பீகார் மாநிலத்தில் சுற்றுலாத்துறை அமைச்சராக இருப்பவர் நாராயண் பிரசாத். பாஜக மூத்த தலைவரான இவரது மகன் பப்லு பிரசாத். இந்த நிலையில் பீகாரின் மேற்கு சம்பரன் மாவட்டத்தில் உள்ள ஹர்டியா கிராமத்தில் நாராயண் பிரசாத்துக்கு சொந்தமான நிலத்தில் சிறுவர்கள், குழந்தைகள் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தனர்.

கிரிக்கெட் விளையாடினார்கள்
இதனை பார்த்த அமைச்சரின் மகன் பப்லு பிரசாத் ஆத்திரம் அடைந்தார். அங்கு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை இங்கு இருந்து செல்லும்படி அவர் எச்சரிக்கை விடுத்தார். அவர் சிறுவர்களிடம் கடுமையாக பேசியதால் சிறுவர்களுக்கும், அவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அமைச்சரின் மகன் உள்ளூர்வாசிகள் சிலரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

துப்பாக்கியால் சுட்டார்
தொடர்ந்து அங்கு விளையாடிய குழந்தைகளை பயமுறுத்துவதற்காக வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தில் சிலர் காயம் அடைந்தனர் எனவும் தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள், அமைச்சர் நாராயண் பிரசாத் வீட்டுக்குச் சென்று, அவரது காரை அடித்து நொறுக்கினார்கள். அவரது மகன் பப்லுவை சரமாரியாக தாக்கினர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அமைச்சர் மறுப்பு
மகன் மீதான புகார்களை மறுத்துள்ள அமைச்சர் நாராயண் பிரசாத் தனது நிலத்தை கிராம மக்கள் அபகரிக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். ''எனது குடும்ப உறுப்பினர்களை கிராம மக்கள் தாக்கிய பிறகு, எனது மகன் தனது உரிமம் பெற்ற துப்பாக்கி மற்றும் கைத்துப்பாக்கியுடன் சம்பவ இடத்திற்குச் சென்றார், ஆனால் அவரும் கற்களால் தாக்கப்பட்டார். கிராம மக்கள் எனது வாகனத்தையும் சேதப்படுத்தினர்'' என்று அவர் கூறியுள்ளார்.

சட்டம் ஒழுங்கு எங்கே?
இந்த சம்பவத்துக்கு எதிர்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் சக்தி சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ''கிரிக்கெட் விளையாடும் குழந்தைகளை தாக்க அமைச்சரின் மகனுக்கு உரிமை உள்ளதா? பீகாரில் சட்டம் ஒழுங்கு என்பதே இல்லை. சட்டத்தை இயற்றுபவர்கள் சட்டத்தை மீறும் போது மாநிலத்தில் யார் சட்டத்தை அமல்படுத்துவார்கள்'' என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications