கொரோனாவுக்கு பிறகு நடக்கும் முக்கிய தேர்தல்.. பீகார் தேர்தலில் இரட்டிப்பு செலவு!.. பரபரக்கும் களம்!
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தல் கொரோனா காலத்தில் இந்தியாவில் நடைபெறும் முதல் முக்கிய சட்டசபை தேர்தல் மட்டுமல்ல உலகிலேயே மிகப் பெரிய தேர்தல் இதுவாகும்.
இந்த தேர்தல் தற்போது 3 கட்டங்களாக நடைபெறுகிறது. 2015-இல் 5 கட்டங்களாகவும் 2005ஆம் ஆண்டு 4 கட்டங்களாகவும் நடைபெற்றது. 15 ஆண்டுகளில் நடைபெறும் சிறிய சட்டசபை தேர்தலும் இதுவாகும். அதாவது தற்போது இந்த தேர்தல் 3 கட்டங்களாக மட்டுமே நடைபெறுகிறது.
சமூக இடைவெளியைப் பராமரிக்க ஒரு பூத்திற்கு 1000 பேர் மட்டுமே அனுமதிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதற்கேற்ப வாக்குச் சாவடி மையங்களும் 60 சதவீதம் அதிகரிக்கப்படவுள்ளது. கடந்த தேர்தலில் 65,367 வாக்குச் சாவடிகள் இருந்த நிலையில் 1,06,526 ஆக உயர போகிறது. அதிக வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்படுவதால் போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கிறது.
பீகார் சட்டசபை தேர்தல் 2020: அப்பா ராம்விலாஸ் பஸ்வான் இழப்பை ஈடு செய்வாரா சிராக் பஸ்வான்
சானிடைசர்
இந்த தேர்தலுக்கு கூடுதலாக 2 லட்சம் போலீஸார் குவிக்கப்படுவதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன. கொரோனா காலம் என்பதால் வழக்கமாக தேர்தலுக்கு ஆகும் செலவை காட்டிலும் இந்த தேர்தலுக்கு அதிக செலவாகிறது. 7.6 லட்சம் வாக்குச் சாவடி ஊழியர்களுக்கு மாஸ்க்கள், சானிடைசர், கிளவுஸ், ஃபேஸ் ஷீல்டுகள் ஆகியவை வாங்க வேண்டும்.
பாதுகாப்பு அம்சங்கள்
அது போல் மேற்கண்ட பாதுகாப்பு அம்சங்கள் 6.2 லட்சம் பாதுகாப்பு படையினருக்கும் வழங்கப்பட வேண்டும். இந்த தேர்தலுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறது என்பது குறித்து பீகார் மாநில தேர்தல் ஆணையர் ஸ்ரீவத்சவா வெளிப்படையாக கூறவில்லை. எனினும் கோவிட்டால் அதிகரிக்கும் செலவை சரி செய்ய போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
2 வாகனங்கள்
வேட்புமனுவை தாக்கல் செய்ய வேட்பாளருடன் இருவர் மட்டுமே வர வேண்டும். 3 வாகனங்களுக்கு பதிலாக வேட்பு மனுதாக்கல் செய்ய 2 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். வீடு வீடாக சென்று பிரசாரம் செய்ய வேட்பாளருடன் சேர்த்து 5 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. சாலையோர பிரசாரத்திற்காக 10 வாகனங்களுக்கு பதிலாக 5 கான்வாய் வாகனங்கள் மட்டுமே அனுமதி.
சானிடைசர்
முகக்கவசம், சானிடைசர், தெர்மல் ஸ்கேன்னர்கள், கிளவுஸ், ஃபேஸ் ஷீல்டுகள், பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவை தேர்தல் நேரத்தில் பயன்படுத்தப்பட வேண்டும். சமூக இடைவெளி மிகவும் அவசியமாகும். தேர்தல் நாளன்று அனைத்து வாக்குச் சாவடிகளும் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். அனைத்து வாக்காளர்களுக்கும் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட வேண்டும்.
காய்ச்சல்
எந்த வேட்பாளருக்காவது காய்ச்சல் இருந்தால் அவருக்கு தனியாக டோக்கன் கொடுக்கப்பட்டு வாக்குப் பதிவு முடியும் நேரத்தில் வாக்களிக்க அனுமதி அளிக்கப்படும். வரிசைகளில் சமூக இடைவெளியை பராமரிக்க மார்க்கர்கள் கொண்டு வரையப்பட்டிருக்க வேண்டும். சானிடைசர்கள் நுழையும் இடத்திலும் வெளியேறும் இடத்திலும் வைக்கப்பட வேண்டும். பதிவேட்டில் கையெழுத்திடவும் வாக்குப் பதிவு இயந்திரத்தில் வாக்கை பதிவு செய்யவும் வாக்காளர்களுக்கும் கிளவுஸ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.