நூடுல்ஸ் பேக்டரியில் கோர விபத்து: 7 உயிர்களை பலிகொண்ட சோகம்
பாட்னா: பீகார் மாநிலத்தில் முசாபர்பூரில் உள்ள நூடுல்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில் திடீரென பாய்லர் வெடித்ததில் 7 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், 2 பேர் பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முசாபர்பூரில் உள்ள பேலா தொழில்துறை பகுதியில் நூடுல்ஸ் தயாரிக்கும் ஆலை செயல்பட்டு வருகிறது. இரண்டு யூனிட்களாக செயல்பட்டு வரும் இந்த ஆலையில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர்.
அடுத்த 4, 5 நாட்களுக்கு குளிர் அதிகரிக்கும்.. சென்னையில் மழை எப்போது?.. வெதர்மேனின் முக்கிய தகவல்!
ஞாயிற்றுக்கிழமையான அந்த ஆலைக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தபோதும் , சட்டவிரோதமாக அந்த நூடுல்ஸ் தயாரிப்பு ஆலை இன்று குறைந்த அளவிலான தொழிலாளர்களே பணியாற்றி வந்தனர் என தகவல் வெளியானது.
நூடுல்ஸ் ஆலையில் விபத்து
இந்நிலையில் நூடுல்ஸ் தயாரிக்கும் ஆலையில் இரண்டாவது யூனிட்டில் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, அங்கு இருந்த பாய்லர் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த 7 தொழிலாளர்கள் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 தொழிலாளர்கள் பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர்.
கட்டிடங்களில் அதிர்வு
வெடிப்பு மிகவும் கடுமையாக இருந்ததால் அப்பகுதியில் உள்ள மேலும் பல தொழிற்சாலைகளின் கட்டிடங்களும், அருலிருந்த சில வீடுகளும் சேதமடைந்தன. மேலும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்கள் லரிகளின் கண்ணாடிகளும் வெடித்து சிதறின. பல கிலோமீட்டர்களுக்கு இந்த வெடிப்பு சத்தம் கேட்டதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர், இதையடுத்து அங்கு ஏராளமானோர் திரண்டதால் தொழிற்சாலை பகுதியை சுற்றிலும் கடும் பதற்றம் ஏற்பட்டது.
மீட்பு பணிகள் துரிதம்
விபத்து ஏற்பட்ட தொழிற்சாலைக்குள் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் தகவலறிந்து வந்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் அப்பகுதி மக்களுடன் இணைந்து இடிபாடுகளை அகற்றி மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து அமைச்சர் விளக்கம்
விபத்து குறித்து பீகார் அமைச்சர் ராம் சுரத் ராய் செய்தியாளர்களிடம் பேசும்போது, நூடுல்ஸ் தொழிற்சாலையில் ஏற்பட்டுள்ள பாய்லர் வெடிப்பு விபத்து குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தப்பட்டு வருகிறது எனவும் தவறு யார் செய்திருந்தாலும் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை ஏன் தொழிற்சாலை இயங்கியது என்பது குறித்து தாங்கள் கண்டுபிடிக்க வேண்டும் எனவும், இந்த ஆலையின் கொதிகலன் செயல்பாட்டிற்கு கடந்த மே மாதத்தில் அரசு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.