பீகார் அமைச்சரவை.. காங்கிரஸ் கட்சிக்கு 3 இடங்கள் ஒதுக்கீடு.. ஆனால் அங்கு தான் ஒரு ட்விஸ்ட்!
பாட்னா: பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான அமைச்சரவையில், காங்கிரஸ் கட்சிக்கு 3 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் பக்த சரண் தாஸ் அறிவித்துள்ளார்.
பீகாரில் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட ஜேடியூ, ஆர்ஜேடி-காங்கிரஸ்-இடதுசாரிகளுடன் இணைந்து புதிய ஆட்சியை அமைத்துள்ளது. முதலமைச்சராக மீண்டும் நிதிஷ்குமாரும், துணை முதலமைச்சராக ஆர்ஜேடியின் தேஜஸ்வி யாதவும் பதவியேற்றுள்ளனர்.

அமைச்சரவையில் யார்?
இதனிடையே நிதிஷ்குமார் தலைமையிலான அமைச்சரவை அடுத்த ஓரிரு நாட்களில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. ஆகஸ்ட் 24-ந் தேதி பீகார் சட்டசபையில் நிதிஷ்குமார் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதனால் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக அமைச்சர் பதவிகள் ஒதுக்கீட்டை அதிருப்தி இல்லாமல் முடிக்கவும் திட்டமிடப்பட்டு வருகிறது. அதில் ஆர்ஜேடி, ஜேடியூ ஆகிய இரு கட்சிகளும் தலா 14 அமைச்சர் பதவிகளை பகிர்ந்து கொள்ள முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காய் நகர்த்தும் காங்கிரஸ்
இதனிடையே பீகாரில் ஜேடியூ - ஆர்ஜேடி ஆட்சியமைய முக்கியக் காரணம் காங்கிரஸ் கட்சி என்பதால், காங்கிரஸ் கட்சிக்கும் அமைச்சரவையில் இடம் ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. பீகார் சட்டசபையில் காங்கிரஸுக்கு 19 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இதில் பெரும்பாலானோர் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்று அமைதியாக காய்களை நகர்த்தி வருகின்றனர்.

பக்த சரண் தாஸ் ஆலோசனை
அதில் சத்ரபதி யாதவ் என்ற எம்.எல்.ஏ, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு அமைச்சர் பதவி கேட்டு கடிதமே அனுப்பி உள்ளார். அதுமட்டுமல்லாமல், காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் பலரும் டெல்லியில் முகாமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பீகார் மாநில காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் பக்த சரண் தாஸ், டெல்லியில் ஆலோசனை நடத்தினார்.

காங்கிரஸ் கட்சிக்கு 3 இடங்கள்
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பக்த சரண் தாஸ் கூறுகையில், முதலமைச்சர் நிதீஷ் குமார் தலைமையிலான அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு 3 இடங்கள் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 16ம் தேதி நடைபெறும் பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரண்டு எம்எல்ஏ-க்கள் அமைச்சர்களாக பதவியேற்பார்கள்.
இதனைத்தொடர்ந்து அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் போது மூன்றாவது எம்எல்ஏ அமைச்சராக பதவியேற்பார். நாளை காங்கிரஸ் எம்எல்ஏ-க்களில் யார் அமைச்சர்களாக பதவியேற்பர் என்பது முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications