பீகார்: நேற்று, இன்று, நாளை.. பொற்காலமாக கருதப்பட்ட குப்த பேரரசில் நிலவிய தீண்டாமை!
பாட்னா: பீகார் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதால், அம்மாநிலம் மிகுந்த கவனம் பெற்றிருக்கிறது. மாநிலத்தின் அரசியல் மட்டுமல்லாது, வரலாற்று தகவல்களையும் ஒன் இந்தியா தமிழ் தொகுத்து வழங்குகிறது. இன்று இந்த தொகுப்பில் பீகாரில் குப்த பேரரசு எப்படி வளர்ந்தது என்பதையும், அப்பேரரசு தீண்டாமையை எப்படி உயர்த்தி பிடித்தது என்பதையும் பார்ப்போம்.
பீகாரை மையமாக கொண்டுதான் குப்த பேரரசு தோன்றியது. இது பின்னர் வங்காளம் வரை பரவி இந்தியாவின் மிகப்பெரிய பேரரசுகளில் ஒன்றாக உருவெடுத்தது.

1.ஸ்ரீகுப்தர் - குப்த மரபைத் தோற்றுவித்தவர்.
2. கடோத்கஜர்
3. முதலாம் சந்திர குப்தர் [ கி.பி.320 -330)
4. சமுத்திர குப்தர் [ கி.பி.330 - 380]
5. இரண்டாம் சந்திர குப்தர் [ கி.பி.380-415]
6. குமார குப்தர் [கி.பி.415-455]
7. ஸ்கந்த குப்தர் [கி.பி.456-468]
8. புரு குப்தர்
9. புத்த குப்தர்
10. பாலாதித்யர்
குப்த பேரரசு
இவர்கள்தான் குப்த பேரரசு மன்னர்கள். இதில் முதலாவது இருக்கும் ஸ்ரீகுப்தர் பற்றி ஏற்கெனவே நாம் பார்த்துவிட்டோம். இவருக்கு அடுத்து உள்ள கடோத்கஜர் என்கிற மன்னரை பற்றி பெரிய அளவுக்கு தகவல்கள் இல்லை. ஆனால் மூன்றாவதாக உள்ள முதலாம் சந்திர குப்தர் பற்றி சில குறிப்புகள் இருக்கின்றன. கங்கை நதிக்கும், நேபாள நாட்டிற்கும் இடைப்பட்ட பகுதியில், 'கன சங்கம்' ஆட்சி அதிகாரத்தில் இருந்தது. 'கன சங்கம்' என்றால் கூட்டாட்சி முறை என பொருள். இந்த ஆட்சி வலிமையாக இருந்தது. இந்த ஆட்சியின் இளவரசியைதான் முதலாம் சந்திரகுப்தர் திருமணம் செய்தார்.
இவர் திருமணம் செய்த இளவரசி, 'லிச்சாவி' அரச குடும்பத்தை சேர்ந்தவராவார். அப்புறம் என்ன, முதலாம் சந்திரகுப்தரின் படை பலம் பெரியதாக மாறியது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அனைத்து சிற்றரசுகளையும் இவர் கைப்பற்றினார். இவரது ஆட்சிக் காலத்தில் தங்க நாணயம் அச்சிடப்பட்டது.
சந்திரகுப்தர்
இவருக்கு அடுத்து வந்தவர்தான் சந்திரகுப்தர். இவர் முதலாம் சந்திரகுப்தரின் மகனாவார். குப்த பேரரசின் தலைசிறந்த அரசர்களில் ஒருவராக சந்திரகுப்தர் கருதப்படுகிறார். இவர் காலத்தில் அரசவை புலவராக இருந்த 'ஹரிசேனர்' எழுதிய 'பிரசஸ்தி' எனும் நூல், அலகாபாத் தூணில் பொறிக்கப்பட்டிருக்கிறது. சந்திரகுப்தர் ஆட்சிக்கு சிறந்த சான்றாக இந்த தூண் கல்வெட்டு இருக்கிறது. இவரது காலத்தில் கலை, இலக்கியம் புதிய உச்சத்தை எட்டியது. சிறந்த போர் தளபதியாகவும் இவர் இருந்தார்.
சமுத்திரகுப்தர்
தென்னியா வரை வந்து போரிட்டு பல்லவ நாட்டு அரசன் விஷ்ணுகோபனை சமுத்திரகுப்தர் தோற்கடித்தார். இத்துடன் 11 தென்னிந்திய சிற்றரசர்களையும் அவர் தோற்கடித்துள்ளார். அடிப்படையில் சமுத்திரகுப்தர் ஒரு விஷ்ணு பக்தர். எனவே ஒவ்வொரு முறை போரில் வெற்றிப்பெறும்போதும் அவர் குதிரையை பலியிட்டு யாகம் நடத்தியிருக்கிறார். அவர் காலத்தில் வெளியான தங்க நாணயங்களில் சமுத்திரகுப்தர் கையில் வீணையுடன் அமர்ந்திருக்கும் உருவம் பொறிக்கப்பட்டிருக்கிறது. இது இசையில் அவருக்கு இருந்த ஆர்வத்தை காட்டுகிறது.
தீண்டாமையும் குப்த பேரரசும்
இவருக்கு அடுத்து வந்தவர்தான் இரண்டாம் சந்திரகுப்தர் (கி.பி.380 - 415). சமுத்திரகுப்தரின் மகன்தான் இவர். இவருக்கு விக்ரமாதித்தியர் என்கிற இன்னொரு பெயரும் இருக்கிறது. இவரது காலத்தில்தான் சீன பயணியான பாகியான் என்பவர் இந்தியா வந்திருந்தார். இவர் எழுதியுள்ள குறிப்புகள், குப்த மன்னர்கள் காலத்தில் தீண்டாமை தீவிரமாக இருந்ததற்கான ஆதாரமாக இருக்கிறது.
பிராமணியம் வளர்ச்சி
இதற்கு முன்னர் இருந்த பல குப்த மன்னர்களை போலவே இவரும் பல்வேறு பகுதிகளையும் வென்று குப்த பேரரசை விரிவாக்கினார். குப்த மன்னர்கள் பெரும்பாலும் இந்து மதத்தை சேர்ந்தவர்களாகவே இருந்தனர். குறிப்பாக அவர்கள் வைணவ சமயத்தை பின்பற்றி வந்தனர். இவர்கள் காலத்தில் பிராமணியம் செழித்து வளர்ந்தது.
இரண்டாம் சந்திரகுப்தரை பொறுத்தவரை, அவரது ஆட்சி எப்படி இருந்தது என்பது குறித்து சீன பயணியான பாகியான் குறிப்புகளை எழுதியுள்ளார். இவர் மொத்தம் 9 ஆண்டுகள் இந்தியாவில் தங்கியிருந்தார். அதில் 6 ஆண்டுகளை இரண்டாம் சந்திரகுப்தர் ஆட்சியில் கழித்திருந்தார். இது குறித்து அவர் எழுதுகையில்,
அமைதியான பேரரசு
"குப்தப் பேரரசின் நிர்வாகம் மிகவும் மென்மையான போக்குடன் இருந்தது. மக்களுக்கு அதிக துன்பம் இல்லை. பெரும்பாலான குற்றங்களுக்கு மரண தண்டனை இல்லை, மாறாக அபராதங்கள் விதிக்கப்பட்டன. மக்கள் மகிழ்ச்சியாகவும், செழிப்பாகவும் வாழ்ந்தனர். அவர்கள் வணிகத்தில் ஈடுபட்டிருந்தனர். எந்த அரச வரிகளும் விதிக்கப்படவில்லை. வணிகர்கள் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் பயணம் செய்தனர். கங்கைச் சமவெளியில் உள்ள நகரங்கள் மிகவும் வளமானதாகவும், செழிப்பாகவும் இருந்தன" என்று கூறியிருக்கிறார்.
தீண்டாமையின் உச்சம்
அதேநேரம், இவரது ஆட்சிக்காலத்தில் தீண்டாமை உச்சத்தில் இருந்ததாகவும் அவர் கூறுகிறார். அதாவது, "ஒடுக்கப்பட்ட மக்கள் ஊருக்கு ஒதுக்குப்புறமாகவே தங்க வைக்கப்பட்டனர். அவர்கள் இறைச்சியை சுத்தம் செய்தல் உள்ளிட்ட சுகாதாரமற்ற வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டனர். ஒருவேளை ஒடுக்கப்பட்ட மக்கள் ஊருக்குள் வருகிறார்கள் என்றால், கைகளை தட்டிக்கொண்டோ, மணி அடித்துக்கொண்டோ சத்தம் எழுப்பியவாறு வர வேண்டும் என்கிற கட்டுப்பாடு இருந்தது. மற்ற சாதியினர் இவர்களை தொட்டுவிடாமல் இருக்கவே ஒலி எழுப்ப வேண்டும்" என்று எழுதியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications