மகளை பலாத்காரம் செய்த காமுகன்.. வழக்குக்காக ஆஜராக வந்தபோது கோர்ட் வாசலில் வைத்தே சுட்டு கொன்ற தந்தை
பாட்னா: பீகாரில் மகளை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை பாதிக்கப்பட்ட தந்தையே சுட்டுக் கொன்றது காவல் துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பீகார் மாநிலம் முசாபர்நகரை சேர்ந்தவர் தில்ஷாத். இவர் அதே பகுதியில் சைக்கிள் பழுது நீக்கும் கடை வைத்து நடத்தி வந்தார். இந்த நிலையில் இவரது கடைக்கு அருகே எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றிவிட்டு ஓய்வு பெற்ற வீரர் ஒருவர் குடியிருந்து வருகிறார்.
அவரது மைனர் மகளை கடந்த 2020-ஆம் ஆண்டு பிப்ரவரி 12 ஆம் தேதி முதல் காணவில்லை என தெரிகிறது. இந்த நிலையில் விசாரித்ததில் அந்த சிறுமியை தில்ஷாத் கடத்தி சென்றிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் போலீஸார் தில்ஷாத்தை ஹைதராபாத்தில் வைத்து கைது செய்தனர். பின்னர் அவருடன் இருந்த மைனர் சிறுமியை மீட்டனர். அந்த சிறுமியை தில்ஷாத் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இதையடுத்து சிறுமியின் புகாரின் பேரில் தில்ஷாத் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது. இந்த நிலையில் நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணைக்காக தில்ஷாத் வந்திருந்தார். அப்போது அவர் வழக்கறிஞரை சந்திப்பதற்காக காத்திருந்ததாக தெரிகிறது.
அந்த நேரத்தில் அங்கு வந்த சிறுமியின் தந்தை நீதிமன்ற வாயிலில் தில்ஷாத்துடன் சண்டையிட்டார். பின்னர் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் தில்ஷாத்தை சுட்டுக் கொன்றார். இதையடுத்து அங்கிருந்த வழக்கறிஞர்கள், பொதுமக்களின் உதவியுடன் ஓய்வு பெற்ற எல்லை பாதுகாப்பு படை வீரரை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்து துப்பாக்கியை போலீஸார் பறிமுதல் செய்தனர். இறந்த தில்ஷாத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.