நிக்காம ஓடு ஓடு ஓடு.. எடப்பாடி டூ நிதிஷ்.. பாஜகவை கழற்றிவிடும் மாநில கட்சிகள்? தேசிய அளவில் ட்விஸ்ட்
பாட்னா: பாஜக - நிதிஷ் குமார் இடையே கடந்த சில மாதங்களாக நடந்த வந்த மோதல்.. இன்று முடிவிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி இன்றோடு அதிகாரபூர்வமாக முறியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Recommended Video
டைட்டானிக் கப்பல் மூழ்க போவதற்கு கடைசி நொடியில் தண்ணீர் எல்லா பக்கமும் உள்ளே வருமே.. அந்த நிலையில்தான் தற்போது பாஜக - ஐக்கிய தளம் கூட்டணி இருக்கிறது. எந்த நொடியில் வேண்டுமானாலும் இவர்களின் கூட்டணி கப்பல் நீரில் மூழ்கிவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்று பீகார் கவர்னர் பாகு சவுகானை முதல்வர் நிதிஷ் குமார் சந்திக்க உள்ளார்.
இதில் முதல்வர் பதவியில் இருந்து விலகுவது குறித்த முடிவை நிதிஷ் அறிவிக்க வாய்ப்பு உள்ளது என்று தகவல்கள் வருகின்றன. அதன்பின் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், சிபிஐ, சிபிஎம் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் புதிய கூட்டணி அமைத்து, மீண்டும் புதிதாக ஆட்சிக்கு உரிமை கோர வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் இருந்த மகாபந்தன் கூட்டணியை முறித்துக்கொண்டு பாஜகவுடன் கடந்த 2015ல் கூட்டணி அமைத்து மீண்டும் ஆட்சிக்கு வந்தவர்தான் நிதிஷ் குமார். தேஜஸ்வி யாதவுடன் இருந்த மோதலால் ராஜினாமா செய்து பாஜகவுடன் திடீரென கூட்டணி வைத்து ஆட்சிக்கு வந்தார் நிதிஷ் குமார்.
2024 லோக்சபா தேர்தல்: பிரதமர் வேட்பாளர் கனவு.. பாஜகவுக்கு நிதிஷ்குமார் குட்பை சொல்வதன் பின்னணி என்ன?
கூட்டணி அறிவு
தற்போது அதே நிதிஷ் குமார்தான் பாஜகவுடன் உள்ள மோதலால் கூட்டணியை முறித்துக்கொண்டு மீண்டும் "அமெரிக்காவிற்கே போயிடு சிவாஜி" என்பது போல மீண்டும் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் இருந்த மகாபந்தன் கூட்டணியை உருவாக்கும் திட்டத்தில் இறங்கி உள்ளார். ஆனால் நிதிஷ் குமாரை மட்டும் இதில் குறை சொல்ல முடியாது. கடந்த 2-3 வருடங்களில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் முக்கிய அங்கம் வகித்த பல கட்சிகள் பாஜகவை கழற்றிவிட்டுவிட்டு வெளியேறி உள்ளன. "என்டிஏ இஸ் டையிங்" என்று சொல்லும் அளவிற்கு என்டிஏ கூட்டணியில் இருந்து பல முக்கிய கட்சிகள் வெளியேற தொடங்கி உள்ளன.
அகாலிதளம்
முக்கியமாக கடந்த 2020ல் பாஜக கூட்டணியில் இருந்து சிரோன்மணி அகாலி தளம் வெளியேறியது. வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறுகிறது. கிட்டத்தட்ட 25 வருட கூட்டணியை முறித்துக்கொண்டு சிரோன்மணி அகாலி தளம் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறது. பஞ்சாப்பில் பாஜக தோல்வி அடைய இது முக்கியமான காரணமாக அமைந்தது. சிங்குகள் மத்தியிலும், விவசாயிகள் மத்தியிலும் பாஜக பெருத்த அடியை வாங்க இந்த கூட்டணி முறிவு முக்கிய காரணமாக அமைந்தது.
சிவசேனா
அதேபோல் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலுக்கு பின்பாக சிவசேனா - பாஜக இடையே மோதல் வந்தது. முதல்வர் பதவியை பாதியாக பிரித்துக்கொள்வதில் ஏற்பட்ட மோதலில் சிவசேனா - பாஜக கூட்டணி முறிந்தது. கொள்கை ரீதியாக வேறுபட்ட காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் சிவசேனா சேரும் நிலை ஏற்பட்டது. இந்த கூட்டணி தற்போது முறிந்து ஷிண்டே தலைமையிலான சிவசேனா - பாஜகவுடன் கூட்டணி வைத்து இருந்தாலும் இன்னும் உத்தவ் தாக்கரே பாஜகவுடன் இணையவில்லை.
அதிமுக
இது போக கடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி முறிந்தது. பாஜகவின் நம்பிக்கையான தென்னிந்திய கூட்டணியாக இருந்த அதிமுக தொகுதி பங்கீடு, பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனின் அவதூறு பேச்சு காரணமாக பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்டது. இதுவரை இவர்கள் இடையிலான கூட்டணி புதுப்பிக்கப்படவில்லை. சமீபத்தில் எடப்பாடி - பாஜக இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த கூட்டணி மீண்டும் சேருமா என்பதே சந்தேகம் ஆகி உள்ளது.
ஐக்கிய ஜனதா தளம்
இந்த நிலையில்தான் தற்போது ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி முறியும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வரிசையாக தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து கட்சிகள் வெளியேற தொடங்கி உள்ளன. என்டிஏ கூட்டணி என்றாலே அச்சம் என்ற நிலை பல்வேறு மாநில கட்சிகள் இடையே எழ தொடங்கி உள்ளதாக அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள். முக்கியமாக சிவசேனாவிற்கு நேர்ந்த கதி தங்களுக்கும் நேர்ந்துவிடும் என்ற அச்சம் பாஜக கூட்டணியில் உள்ள மாநில கட்சிகளுக்கு எழுந்துள்ளது.
என்டிஏ அச்சம்
பாஜகவுடன் கூட்டணி வைத்து.. நம்முடைய வாக்குகளை அவர்கள் பெற்று வளர்ந்து.. பின்னர் நம்மையே பாஜக கட்சியினர் கழற்றிவிட்டுவிடுவார்களோ என்ற அச்சம் பாஜக கூட்டணி கட்சிகளிடையே எழ தொடங்கி உள்ளதாக அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள். பீகாரில் நிதிஷ் குமார் இப்போது கூட்டணியை முறித்துக்கொள்ளவும் இதுவே காரணமாக பார்க்கப்படுகிறது. நாளுக்கு நாள் என்டிஏ சுருங்கி வருவதால்.. கூட்டணிக்கு உள்ளேயே பாஜக தனித்து விடப்படுகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.