ஏன் இப்டி பன்றாரு? குழப்பத்தில் பாஜக.. நிதீஷின் 2வது சம்பவம் -அதுவும் மோடியிடம்! கூட்டணியில் விரசலா?
பாட்னா: பிரதமர் நரேந்திர மோடியின் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தும் 2 வது முறையாக பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் அதில் பங்கேற்க முடியாது என்று அறிவித்து இருப்பது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்து இருக்கிறது.
மத்திய அரசின் நிதி ஆயோக் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை நடைபெற உள்ளது. இதில் அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மத்திய அரசுடன் தொடர்ந்து மோதல் போக்குகளை கடைபிடித்து வரும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் பல மாநில முதலமைச்சர்கள் கலந்துகொள்ள உள்ளார்கள்.
அதே நேரம் தெலுங்கானா முதலமைச்சர் சந்திர சேகர் ராவ் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்து இருக்கிறார். இந்த நிலையில் பாஜக கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும் பீகார் முதலமைச்சருமான நிதீஷ் குமார் இதில் பங்கேற்கப் போவதில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
விவசாயி மகன் குடியரசுத் துணைத் தலைவரானது பெருமை - ஜெகதீப் தன்கரை நேரில் வாழ்த்திய பிரதமர் மோடி
கொரோனா பாதிப்பு
அதேநேரம் வேறு அமைச்சர்களை இந்த கூட்டத்துக்கு நிதீஷ் குமார் அனுப்பி வைக்கலாம் என்ற பேச்சு அடிபடுகிறது. மேலும் நாளை பீகாரில் நடைபெறும் ஜனதா தர்பார் நிகழ்ச்சியையும் நிதீஷ் குமார் நிறுத்தி வைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த நிதீஷ் குமார் உடல்நலன் காரணமாகவே இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.
நிதி ஆயோகி மீது அதிருப்தி
ஆனால், அவர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவுடன் மாநிலத்தில் நடைபெறும் இதர அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவே செய்கிறார். மாநிலங்களின் வளர்ச்சி தர பட்டியலில் பீகாரை நிதி ஆயோக் நீண்ட காலமாக கடைசி இடத்தில் வைத்து இருப்பதால் நிதீஷ் குமாருக்கு அந்த அமைப்பின் மீது அதிருப்தி அடைந்துள்ளார் என்று பீகார் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மோடி, அமித்ஷா நிகழ்ச்சிகள் புறக்கணிப்பு
சில வாரங்களுக்கு முன்பாக பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அளித்த பிரிவு உபசார விழாவின்போது அளித்த விருந்தையும் நிதீஷ் குமார் புறக்கணித்தார். ராம்நாத் கோவிந்த் பீகாரை சேர்ந்தவராக இருப்பதால் இதில் நிதீஷ் நிச்சயம் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இது பாஜகவினரை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. அதேபோல் அமித்ஷா நடத்திய முதலமைச்சர்கள் கூட்டத்திலும் நிதீஷ் குமார் பங்கேற்காமல் அமைச்சரையே அனுப்பி வைத்தார்.
கூட்டணியில் விரிசலா?
ஒரே மாதத்தில் பிரதமரின் 2 நிகழ்ச்சிகளை கூட்டணி கட்சியை சேர்ந்த முதலமைச்சரே புறக்கணித்து இருப்பது அக்கட்சியினரை குழப்பமடைய செய்துள்ளது. அக்னிபாத் விவகாரம், சாதிவாரி கணக்கெடுப்பு போன்றவற்றில் நிதீஷ் குமாரின் நிலைபாடு மத்திய பாஜக அரசுக்கு எதிராக இருந்ததால் மாநில கூட்டணியிலும் உரசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதன் காரணமாகவே நிதீஷ் குமார் இத்தகைய கூட்டங்களை புறக்கணிப்பதாக பாட்னா அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.