விவசாயிகள், சிறு வர்த்தகர்களின் முதுகெலும்பையே முறித்துவிட்ட மோடி-நிதிஷ்குமார்... ராகுல் தாக்கு
பாட்னா: விவசாயிகள், நடுத்தர மற்றும் சிறு வர்த்தகர்களின் முதுகெலும்பையே பிரதமர் மோடியும் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரும் முறித்துவிட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடுமையாக தாக்கியுள்ளார்.
பீகார் நவாடாவில் நடைபெற்ற சட்டசபை தேர்தல் பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:

லட்சக்கணக்கானோர் வேலை இழப்பு
மோடிஜி அவர்களே! பீகாரிகளிடம் நீங்கள் பொய்யை பேசாதீர்கள். ரயில்வேதுறையை சுரங்கத்துறையை தனியார்மயமாக்கியதால் பல லட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.

பீகாரிகளை கண்டுகொள்ளாத மோடி
லட்சக்கணக்கான பீகாரிகள் கொரோனா லாக்டவுன் காலத்தில் அவர்கள் பணிபுரிந்த மாநிலங்களில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட போது அவர்களுக்கு பிரதமர் மோடி உதவ முன்வரவில்லை. பிற மாநிலங்களில் இருந்து பசியோடும் பட்டினியோடும் சாலைகளில் பல்லாயிரக்கணக்கான கிலோ மீட்டர் நடந்து வந்து பீகார் சேர்ந்தீர்களே... அப்போது உங்களுக்காக பிரதமர் மோடி ரயில்களை இயக்கவில்லை.

உங்களை சாகவிட்ட அரசு
நீங்கள் செத்தால் சாகட்டும் அதை பற்றி கவலை எதுவுமே இல்லை என மோடி அரசாங்கம் சொன்னது. பீகாரில்தான் முதலில் மண்டிகளை ஒழித்தார்கள்.. குறைந்தபட்ச விலை என்பதை நிர்மூலமாக்கினார்கள்.

விவசாயிகள் முதுகெலும்பை முறித்தனர்
இப்போது அதையே ஒட்டுமொத்த தேசத்துக்கும் அமல்படுத்தி இருக்கிறார்கள். விவசாயிகள் மீதான தாக்குதல்கள்தான் மோடி அரசாங்கம் கொண்டு வந்திருக்கும் 3 விவசாய சட்டங்கள். பீகார் முதல்வர் நிதிஷ்குமாரும் பிரதமர் மோடியும் நாட்டின் விவசாயிகள், சிறு, நடுத்தர வர்த்தகர்களின் முதுகெலும்பையே முறித்துவிட்டனர். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.












Click it and Unblock the Notifications