பூலான்தேவி பாணியில் துணிகரம்.. ஓடும் ரயிலில் பயணிகளிடம் பல லட்சம் நகைகள் கொள்ளை.. உறைந்த மக்கள்
பாட்னா: பூலான்தேவி பாணியில் பீகாரில் ஓடும் ரயிலில் நடந்த கொள்ளை சம்பவம் அந்த மாநிலத்தையே உலுக்கி உள்ளது. இதில் பல லட்சம் மதிப்பிலான தங்க நகைகளையும், பல ஆயிரம் ரொக்கத்தையும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.
பீகாரில் 15 - 20 ஆண்டுகளுக்கு முன்புதான் ரயில்களில் இதுபோன்று பயங்கர கொள்ளைச் சம்பவங்கள் அரங்கேறி வந்த நிலையில், தற்போது மீண்டும் இந்த துணிகரக் கொள்ளை நடைபெற்றிருப்பது மக்களை அச்சம் அடையச் செய்திருக்கிறது.
இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை பிடிப்பதற்காக 15-க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக பீகார் காவல்துறை தெரிவித்துள்ளது.
சட்டப்படி ரூ.15,444 போனஸ் வரவேண்டும்.. ஆனால்.. போக்குவரத்து துறை செயலாளருக்கு ஏஐடியுசி கடிதம்
அலறவிட்ட பண்டிட் குயின்..
உத்தரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேசத்தில் ஒருகாலத்தில் பூலான்தேவி என்று சொன்னாலே பயத்தில் நடுங்காதவர்களை பார்க்க முடியாது. பொதுமக்கள் மட்டுமல்லாமல் காவல்துறையினரே பூலான்தேவி என்று உச்சரிக்கவும் பயந்த காலம் இருந்தது. வீடுகள் மட்டுமல்லாமல் ஓடும் ரயில்களிலும் பூலான்தேவியும், அவரது ஆட்களும் கொள்ளையடிப்பார்கள். அதாவது, நள்ளிரவு காட்டுப் பாதைகளில் ரயில் ஓடிக்கொண்டே இருக்கும் போது குதிரைகளில் வரும் பூலான்தேவியும், அவரது கூட்டாளிகளும் ரயிலில் ஏறி அதை நிறுத்திவிட்டு, பயணிகளிடம் இருந்து நகைகளை கொள்ளையடித்த பின்னர் அதே குதிரைகளில் தப்பிச் செல்வர். இதனால் 1980-90-களில் சம்பல் பள்ளத்தாக்கை தாண்டி செல்லும் ரயில்களில் ஜன்னல், கதவுகள் பூட்டி வைக்கப்படும். இருந்தபோதிலும், ரயில்களை மறித்து பூலான்தேவி கூட்டாளிகள் கொள்ளையடித்துச் சென்றுவிடுவர். இந்தியாவில் முதல் பெண் கொள்ளையரான பூலான் தேவி பண்டிக் குயின் (Bandit Queen) என அழைக்கப்பட்டார்.
பீகாரிலும் அதே பாணி..
பூலான்தேவியை பார்த்து மற்ற சில மாநிலங்களிலும் அதே பாணியில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டத் தொடங்கினர். அதில் முக்கியமான மாநிலம் பீகார். 15, 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை பீகார் கொள்ளையர்கள் மற்றும் குண்டர்களின் கூடாரமாக இருந்தது. குறிப்பாக, லாலு பிரசாத் ஆட்சிக்காலத்தில் இதுபோன்ற பயங்கர கொள்ளை, கொலை சம்பவங்கள் நடந்து வந்தன. இது தேசிய அளவில் பெரும் பிரச்சினையாக மாறியதை அடுத்து, அங்கு பல ஆண்டு போலீஸ் நடவடிக்கைகளுக்கு பிறகு சட்டம் ஒழுங்கு ஓரளவுக்கு சரிசெய்யப்பட்டது. அதன் பின்னர் இதுபோன்ற கொள்ளைகள் நடைபெறவில்லை.
மீண்டும் துணிகரம்
இந்நிலையில், நேற்று இரவு டெல்லியில் இருந்து கொல்கத்தாவை நோக்கி தூரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது நள்ளிரவில் பீகார் தலைநகர் பாட்னாவை அந்த ரயில் நெருங்கும் போது, மோட்டார் சைக்கிள்களில் வந்து ரயிலில் ஏறிய கொள்ளையர்கள், சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர். பின்னர் அங்கிருந்த பயணிகளிடம் இருந்து நகை மற்றும் பணத்தை அவர்கள் எடுத்து தப்பினர். கொள்ளைப்போன நகைகள் மற்றும் பணத்தின் மதிப்பு பல லட்சத்தை தாண்டும் எனக் கூறப்படுகிறது.
போலீஸ் விசாரணை
இதையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த போலீஸார் ரயில் பயணிகளிடம் விசாரணை நடத்தினர். பின்னர், இந்தக் கொள்ளையர்களை பிடிப்பதற்காக 15-க்கும் மேற்பட்ட தனிப்படைகளை காவல்துறை அமைத்துள்ளது. பீகாரில் நடந்த இந்தக் கொள்ளைச் சம்பவமானது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த காலங்களை போல பீகாரில் கொள்ளையர்கள் அட்டகாசம் தலைதூக்கியுள்ளதாக பீகார் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.