சிராக் பாஸ்வானை கன்ட்ரோல் செய்யாமல் விட்டதால் வந்தவினை.. கொதிக்கும் ஜேடியூ
பாட்னா: லோக் ஜனசக்தித் தலைவர் சிராக் பாஸ்வானின் போக்கை தொடக்கத்திலேயே கண்டிக்காமல் விட்டதால்தான் ஜேடியூவுக்கு பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக அக்கட்சியின் மூத்த தலைவர் கே.சி. தியாகி தெரிவித்துள்ளார்.
பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலையில் பாஜக இம்மாநிலத்தில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
ஆர்ஜேடி 2-வது இடத்திலும் 3-வது இடத்தில் ஜேடியூவும் உள்ளன. முதல் முறையாக பீகார் மாநில கட்சிகளை பின்தள்ளிவிட்டு பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கிறது.
இது தொடர்பாக ஜேடியூ மூத்த தலைவர் கேசி தியாகி கூறியதாவது: 1918-ம் ஆண்டுக்குப் பின்னர் மிகப் பெரிய தொற்று நோய் ஏற்பட்டிருக்கிறது. ஆர்ஜேடி அல்லது தேஜஸ்வி யாதவால் ஜேடியூவை தோற்கடித்துவிட முடியாது.
கொரோனா வைரஸ்தான் எங்களை தோற்கடித்திருக்கிறது. இந்த தேர்தலில் சிராக் பாஸ்வானின் பங்கு மிக முக்கியமானது. அவரை தொடக்கத்திலேயே கட்டுப்படுத்தி வைத்திருந்தால் ஜேடியூவுக்கு இவ்வளவு பின்னடைவு இருந்திருக்காது. இவ்வாறு கேசி. தியாகி கூறியுள்ளார்.