மேகாலயாவில் தீவிரவாதி சுட்டுக் கொலைக்கு எதிர்ப்பு- முதல்வர் வீடு மீது பெட்ரோல் குண்டுகள் வீச்சு
ஷில்லாங்க: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவில் தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா இல்லத்தின் மீது அடுத்தடுத்து பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் தனி மாநிலம், தனி நாடு கோருகிற தடை செய்யப்பட்ட ஆயுதக் குழுக்கள் நடமாட்டம் தொடர்ந்து வருகிறது. மேகாலயா தனிநாடு கோரும் Hynniewtrep National Liberation Council கடந்த சில வாரங்களா தலைநகர் ஷில்லாங் உள்ளிட்ட இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்த தாக்குதல்களைத் தொடர்ந்து மேகாலயா போலீசார் ஷில்லாங்கில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது Hynniewtrep National Liberation Council -ன் மூத்த தலைவரும் பொதுச்செயலாளருமான செரிஸ்டர்பீல்டு தாங்கியூ சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால் ஷில்லாங் உள்ளிட்ட மேகாலயா நகரங்களில் வன்முறை வெடித்தது.
அடுத்த 9 வருடங்களில் உலக வெப்ப நிலை 1.5 டிகிரி செல்சியஸ் உயரும்- ஐ.நா. பருவநிலை மாற்றத்திற்கான குழு
தற்போதைய நிலையில் 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இணைய இணைப்பு சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனிடையே மேகாலயா உள்துறை அமைச்சரான லக்மென் ரிம்புய் நேற்று தமது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அவர் தமது ராஜினாமா கடிதத்தை முதல்வர் கான்ராட் சங்மாவுக்கு அனுப்பி வைத்தார்.
பயங்கரவாதி கொலைக்கு நீதி விசாரணை
அந்த கடிதத்தில், பயங்கரவாதி செரிஸ்டர்பீல்டு தாங்கியூ சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார் லக்மென் ரிம்புய். மேலும் இந்த படுகொலை சம்பவத்தின் பின்னணியில் இருக்கும் உண்மை குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் லக்மென் ரிம்புய் வலியுறுத்தி இருக்கிறார். இது தொடர்பாக நீதி விசாரணைக்கும் உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
முதல்வர் வீடு மீது தாக்குதல்
இதனிடையே ஷில்லாங்கில் நேற்று பயங்கரவாதிகள் வாகனங்களில் ஆயுதங்களையும் கறுப்பு கொடிகளையும் ஏந்தியபடி வலம் வந்தனர். அப்போது அதாவது நேற்று இரவு முதல்வர் கான்ராட் சங்மா வீடு மீது அடுத்தடுத்து 2 பெட்ரோல் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தினர் அந்த பயங்கரவாதிகள். இந்த சம்பவங்களில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த தாக்குதல் சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுதக் குழுக்கள் உருவானது எப்படி?
மேகாலயா மாநிலமானது அஸ்ஸாமில் இருந்து பிரித்து உருவாக்கப்பட்ட ஒன்று. ஆனால் மேகாலயாவின் பழங்குடி மக்களான காரோ, காசி, ஜெயந்தியா ஆகியோர் தங்களுக்கு தனிநாடு வேண்டும் என்று கோரி Hynniewtrep Achik Liberation Council (HALC) என்ற ஆயுதக் குழுவை முதலில் உருவாக்கினர். இதுதான் மேகாலயாவில் உருவான முதல் ஆயுதக் குழு. பின்னர் காரோ பழங்குடிகள் தனி நாடு கோரிக்கையை வலியுறுத்தி Achik Matgrik Liberation Army (AMLA) என்ற அமைப்பை தனியாகத் தொடங்கினர். இதன்பின்னர் உருவானதுதான் Hynniewtrep National Liberation Council (HNLC). இது கடந்த 1993-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. காசி- ஜெயந்தியா பழங்குடி மக்களுக்கான இயக்கமாக இது தன்னை பிரகடனப்படுத்தியது. இந்த தீவிரவாத இயக்கம், வங்கதேசத்தில் இருந்து செயல்பட்டு வருகிறது. வங்கதேசத்தின் சிட்டகாங் மலைப்பகுதிகளில் முகாம்கள் அமைத்துள்ளனர் இந்த தீவிரவாதிகள்.
தடை செய்யப்பட்ட இயக்கம்
வடகிழக்கு மாநிலங்களில் இயங்கி வரும் பிற ஆயுதக் குழுக்கள் மூலம் ஆயுதங்களைப் பெற்று தாக்குதல்களை நடத்துகிறது HLNC. மேலும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உதவியுடன் மேகாலயாவில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுவதிலும் இந்த அமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த 2000-ம் ஆண்டு இந்த இயக்கத்தை மத்திய அரசு தடை செய்தது. பின்னர் இந்த தடை நீக்கப்பட்டது. மீண்டும் 2019 முதல் இந்த அமைப்பு பயங்கரவாத இயக்கமாக பட்டியலிடப்பட்டு தடை செய்யப்பட்டிருக்கிறது.