புதுவையிலும் ஜூன் 15 ஆம் தேதி எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு.. கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு
புதுச்சேரி: தமிழகத்தை பின்பற்றி புதுச்சேரியிலும் வரும் ஜூன் 15-ந்தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும் என கல்வித் துறை அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலத்திற்கென தனி கல்வி வாரியம் கிடையாது. புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களில் தமிழக பாடதிட்டங்களும், மாகி பிராந்தியத்தில் கேரளா பாடத்திட்டமும், ஏனாம் பிராந்தியத்தில் ஆந்திர பாடத்திட்டம் பின்பற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் ஜூன் 15 ஆம் தேதி முதல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரியிலும் அதே தேதியில் பத்தாம் வகுப்பு தேர்வுகள் தொடங்கும் என கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஊரடங்கு காலத்தில் உயர் கல்வித்துறையில் 1,060 ஆசிரியர்கள் 35 ஆயிரம் மணி நேரம் வகுப்புகள் எடுத்து உள்ளனர். இதில் விடுபட்ட மாணவர்களுக்கு நேரடியாகவும் பாடம் நடத்தப்படும்.
தமிழகத்தில் அறிவித்துள்ளது போல் புதுவையிலும் வரும் ஜூன் 15 ந்தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்குகின்றன. இதற்காக அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. சுமார் 200 பள்ளிகளில் தேர்வு மையம் அமைக்கப்படும்.
தனியார் பள்ளிகள் பெற்றோர்களிடம் கல்விக் கட்டணம் கேட்டு வற்புறுத்தக் கூடாது என்று அறிவுறுத்தி உள்ளோம். இதுதொடர்பாக பெற்றோர் எழுத்துப்பூர்வமாக புகார் கொடுத்தால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கல்லூரி மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்துவது தொடர்பாக பல்கலைக்கழக மானியக்குழு சில வழிகாட்டுதல்களை கூறியுள்ளது.
அதன்படி கல்லூரி மாணவர்களுக்கான தேர்வுகளை கல்லூரிகளில் மட்டுமல்லாது பள்ளிகளையும் தேர்வு மையமாக பயன்படுத்தி நடத்த உள்ளோம் என அமைச்சர் கமலக்கண்ணன் கூறினார்.
பிளஸ் 2 வேதியியல் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு போனஸ் மதிப்பெண்.. தேர்வு துறை