வயசு 8 தான்.. ஆனா ஆழ்கடலில் இறங்கிக் குப்பைகளை அள்ளிய புதுச்சேரி சிறுமி.. குவியும் பாராட்டுகள்!
ஆழ்கடலில் குவிந்துகிடக்கும் குப்பைகளை அகற்றும் புதுச்சேரி சிறுமியின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
புதுச்சேரி: இயற்கை வளம் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு ஆழ்கடலில் கிடந்த குப்பைகளை தூய்மை செய்த புதுச்சேரி சிறுமிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
புதுச்சேரியை சேர்ந்தவர் ஆழ்கடல் நீச்சல் பயிற்சி வீரர் அரவிந்த். இவர் சுற்றுலா பயணிகளை உரிய பாதுகாப்புடன் ஆழ்கடலுக்கு அழைத்து செல்லும் வேலையை செய்து வருகிறார். மேலும் சென்னை மற்றும் புதுச்சேரியில் ஆழ்கடல் நீச்சல் பயிற்சி மையத்தையும் அவர் நடத்தி வருகிறார்.

சுமார் 20 ஆண்டுகளாக இப்பணியில் ஈடுபட்டு வரும் அரவிந்த் கொரோனா பாதுகாப்பு, கடல் தூய்மை, யோகா, உடல் ஆரோக்கியம் போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆழ்கடலில் பல்வேறு நிகழ்ச்சியை செய்து அந்த வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அவரது பல வீடியோக்கள் வைரலாகி, ஊடகங்களில் செய்தியாகி இருக்கின்றன.
இந்நிலையில் அரவிந்தின் 8 வயது மகள் தாரகை ஆராதனாவும் தற்போது தனது தந்தை வழியில் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், ஆழ்கடலில் தூய்மை பணி செய்திருக்கிறார். உலக இயற்கை பாதுகாப்பு தினத்தையொட்டி இந்த வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். சிறுமி ஆராதனாவின் இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

தனது தந்தை நீச்சல் பயிற்சி கொடுக்கும் போது அருகில் இருந்து பார்த்த ஆராதனாவுக்கும் ஆழ்கடல் நீச்சலின் மீது ஆர்வம் ஏற்பட்டது. இதனை தனது தந்தையிடம் தெரிவித்து, அவரிடம் இருந்து முறையான பயிற்சி பெற்று ஆழ்கடலில் தூய்மை பணி செய்திருக்கிறார் ஆராதனா என்பது குறிப்பிடத்தக்கது..












Click it and Unblock the Notifications