"10 ஆண்டு சிறையே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது" ராகுல் வழக்கில் பழிவாங்கும் நடவடிக்கை-நாராயணசாமி ஆவேசம்
புதுவை: கொலை வழக்கில் லட்சத்தீவு எம்.பிக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனையே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், ராகுலுக்கு எதிரான நடவடிக்கைகள் பாஜகவின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையை காட்டுவதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் புதுவை முன்னாள் முதல்வருமான நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனக்கு அவதூறு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை நிறுத்தி வைக்கக் கோரி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை சூரத் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சூரத் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி குஜராத் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராகுல் காந்தி மேல் முறயீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இது தொடர்பாக தனியார் செய்தி தொலைக்காட்சியிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும் புதுவை முன்னாள் முதல்வருமான நாராயணசாமி கூறியதாவது:-
அவதூறு வழக்கில் கீழமை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்த மேல் முறையீடு மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை ஏற்றுகொள்ளாமல் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து இருக்கிறார். அவதூறு வழக்கில் அதிகப்படியான தண்டனை பதவி பறிப்பு, வீட்டை காலி செய்வது, தொலைபேசி துண்டிப்பு என எல்லாம் ஒருவாரத்தில் நடைபெறுகிறது.
ஒட்டு மொத்த பழிவாங்கும் நடவடிக்கையில் மத்தியில் உள்ள பாஜக அரசு தொடர்ந்து செய்து வருகிறது. லட்சத்தீவு பாராளுமன்ற உறுப்பினர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 10 ஆண்டு சிறை தண்டனை கொடுக்கப்பட்டவர். அவருடைய தண்டனையை நிறுத்தி வைத்து இருக்கிறார்கள்.

ஆனால் இது அவதூறு வழக்கு.. பொய்யான வழக்கு சம்பந்தப்பட்டவர்கள் வழக்கு போடவில்லை. ஆனால் தண்டனையை நிறுத்திவைக்க கோரும் மனுவை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒட்டு மொத்தமாக பாஜக அரசு, அரசு இயந்திரங்களை தனது கையில் வைத்துக்கொண்டு எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்கு அவைகளை பயன்படுத்துவது நீதிமன்றங்களை மிரட்டுவது.. நீதிபதிகளை மாற்ற வேண்டும் என்று உச்ச நிதிமன்றம் பரிந்துரை அனுப்பினால் அதை தள்ளுபடி செய்வது.. என ஜனநாயக விரோத செயல், இந்திய அரசியல் அமைப்புக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வருகிறது.
இதுவும் அதனுடைய காரண காரியம்தான். இந்தியாவில் மோடி ஆட்சியில் ஜனநாயகம் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொண்டு வருகிறது. ராகுல் காந்தி தண்டனை நிறுத்தி வைக்காதது மிகப்பெரிய ஜனநாயக படுகொலை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications