குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு.. புதுச்சேரியில் நாம் தமிழர் பந்த்!
சென்னை: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாம் தமிழர் கட்சி புதுச்சேரியில் இன்று பந்த் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், அதனால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும், குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. ஆங்காங்கே நடைபெறும் வன்முறையில் பேருந்துகளுக்கு தீ வைப்பு, துப்பாக்கி சூடு சம்பவங்களும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி மாநிலம் முழுவதும் இன்று பந்த் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் புதுச்சேரியில் இன்று பந்த் போராட்டத்திற்கான அறிகுறியே இல்லை.
காரணம் புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்திலிருந்து உள்ளூர் மற்றும் வெளியூர் செல்லும் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகின்றன. டெம்போ, ஆட்டோக்களும் வழக்கம்போல் இயங்குகிறது.
மேலும் பெரிய மார்க்கெட், குபேர் அங்காடி, முத்தியால்பேட்டை மார்க்கெட் உள்ளிட்ட புதுச்சேரி முழுவதும் உள்ள 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் வழக்கம்போல் திறந்து வைக்கப்பட்டுள்ளன. திரையரங்கம், பெட்ரோல் பங்க் வழக்கம்போல் செயல்படுகின்றன.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் இன்று பந்த் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன.
ஆனால் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு இன்னும் ஒரு சில தினங்களே உள்ள நிலையில், இன்று பந்த் போராட்டம் நடைபெற்றால், புத்தாண்டை கொண்டாடுவதற்காக வரும் சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதாலும், புத்தாண்டு வணிகம் பாதிக்கப்படும் என்ற காரணத்தினாலும் போராட்டத்தை தள்ளி வைக்க வணிகர்கள் காங்கிரஸ் மற்றும் நாம் தமிழர் கட்சிக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
வணிகர்களின் கோரிக்கையை ஏற்று ஆளும் காங்கிரஸ் கட்சி இன்று நடத்தவிருந்த பந்த் போராட்டத்தை தள்ளி வைத்தது. ஆனால் நாம் தமிழர் கட்சி மட்டும் பிடிவாதமாக பந்த் போராட்டத்தை வாபஸ் பெறாமல் நடத்தி வரும் நிலையில், அக்கட்சிக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
வணிகர்கள் கடையை திறந்து வியாபாரம் செய்வதற்கும், பேருந்துகளை இயக்குவதற்கும் முழு பாதுகாப்பு அளிக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைவர்கள் நல்லா இருந்தாலும்.. அரசாங்கம் குழப்பும்.. அதிகாரிகளைதான் கும்பிடணும்.. தம்பி ராமையா நச்!