இது மக்கள் கொடுத்த தீபாவளி பரிசு.. நாராயணசாமி செம ஹேப்பி அண்ணாச்சி!
புதுச்சேரி: புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் பெற்ற வெற்றி, பொதுமக்கள் கொடுத்த தீபாவளி பரிசு என புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் ஜான்குமார் வெற்றிபெற்று காங்கிரஸ் மீண்டும் இத்தொகுதியை கைப்பற்றியது. வாக்கு எண்ணிக்கை லாஸ்பேட்டை மோதிலால் நேரு பாலிடெக்னிக்கில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு அதைத்தொடர்ந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.
தொடக்கம் முதலே காங்கிரஸ் முன்னிலையில் இருந்தது. 32 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் அனைத்தும் 3 சுற்றுகளாக எண்ணப்பட்டது வாக்கு எண்ணிக்கைக்கு 11 டேபிள்கள் போடப்பட்டிருந்தன. வாக்குகள் ஒரு மணி நேரத்திலேயே எண்ணி முடிக்கப்பட்டன. இறுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் வென்றார். வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் விவிபாட் இயந்திரங்களில் பதிவான வாக்கு சீட்டுகள் எண்ணப்பட்டு ஒப்பிடப்பட்டது.
ஒரு தாக்கரே குடும்பம் செம ஹேப்பி.. இன்னொரு குடும்பம் பெரும் சோகம்.. சறுக்கிய ராஜ் தாக்கரே!
தக்க வைத்த காங்கிரஸ்
தொகுதி மறுவரையரைக்கு பிறகு கடந்த 2011ம் ஆண்டும், 2016ம் ஆண்டும் காங்கிரஸ் வசமிருந்த இத்தொகுதி தற்போது மீண்டும் காங்கிரஸ் வசமானது. இதன் மூலம் இத்தொகுதி தொடர்ந்து காங்கிரஸ் வசமே இருந்து வருகிறது.
முதல் சுற்று விவரம்:
ஜான்குமார் (காங்)- 4029, புவனேஷ்வரன் (என்.ஆர்.காங்)- 2092, பிரவீணா (நாம் தமிழர் கட்சி)- 199, முதல் சுற்றில் ஜான்குமார் 1937 வாக்குகள் முன்னிலை பெற்றிருந்தார்.
2 வது சுற்று விவரம்:
ஜான்குமார்- 4837, புவனேஷ்வன் - 2992, பிரவீணா- 193. 2வது சுற்றில் ஜான்குமார் 1845 வாக்குகள் முன்னிலை பெற்றார்.
3வது சுற்று3வது சுற்று விவரம்:
ஜான்குமார்- 5916, புவனேஷ்வரன்- 2528, பிரவீணா - 191. இதில் ஜான்குமார் 3,388 வாக்குகள் அதிகம் பெற்றார். மூன்று சுற்றுகள் முடிவில் ஜான்குமார் 14,782 வாக்குகள் பெற்று காங்கிரஸ் வென்றது. இரண்டாவது இடத்தை புவனேஷ்வரன் (என்.ஆர்.காங்) 7612 வாக்குகள் பெற்றார். வாக்கு வித்திாசம் 7170. மூன்றாவது இடத்தை நாம் தமிழர் கட்சி பிரவீணா 620 வாக்குகளுடன் பெற்றார். 4வது இடத்தில் 426 வாக்குகளுடன் நோட்டா பிடித்தது. 5 வது இடத்தை முன்னாள் அமைச்சர் கண்ணனின் கட்சியான மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி செல்வன் 343 வாக்குகள் எடுத்தார்.
ஜாந் குமார் நன்றி
தேர்தல் வெற்றி குறித்து ஜான்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், காமராஜ் தொகுதி மக்கள் அனைவருக்கும் எனது நன்றி. எனது வெற்றிக்கு பாடுபட்ட முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர், கூட்டணிக் கட்சிகளுக்கு தனது நன்றி தெரிவித்தார்.
மக்கள் குறைகளை தீர்ப்பேன்
தொடர்ந்து காமராஜ் நகர் தொகுதியில் அனைத்து நலத்திட்டங்களையும் செயல்படுத்துவேன் என்றும், எந்தவித குறைபாடுகள் இருந்தாலும் என்னை நேரடியாக மக்கள் தொடர்பு கொள்ள வேண்டும் என்றும், அப்படி தொடர்பு கொண்டால் அவர்களுடைய அனைத்து குறைகளை நிவர்த்தி செய்வேன் என்றும் உறுதியளிக்கிறேன் என தெரிவித்தார்.
நாராயணசாமி ஹேப்பி
ஜான்குமார் வெற்றி பெற்றதையடுத்து முதலமைச்சர் நாராயணசாமி கட்சி அலுவலகத்தில் தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கி செய்தியாளர்களை சந்தித்தார், புதுச்சேரி மக்கள் எங்கள் அரசு மீது வைத்திருந்த நம்பிக்கையை எதிரொலிக்கும் விதமாக எங்களுக்கு மக்கள் அமோக வெற்றியை தந்துள்ளார்கள்.
இது தீபாவளி பரிசு
இது மக்கள் எங்களுக்குத் தந்த தீபாவளி பரிசு என்றும், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு தனது நன்றி தெரிவிப்பதாகவும், மேலும் கூட்டணி கட்சி சார்பில் அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக்கொள்வதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.