Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திரிபுரா காங்., மே.வ.சிபிஎம், அருணாச்சல் ஜேடியூ- பாஜக விழுங்கப் போகும் கட்சி புதுவை என்.ஆர். காங்.

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற கட்சிகளை கபளீகரம் செய்யும் பாஜகவின் வேட்டை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த வேட்டையில் சிக்கப் போகும் பலியாடாக புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ் இப்போது களத்தில் நிற்கிறது.

2014 லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அதிகாரத்தை பாஜக பெற்றதுதான் தாமதம்.. ஒட்டுமொத்த தேசத்தின் நிலைமையையும் ஒரே அடியாக தலைகீழாக மாற்றி தனக்கு கீழே கொண்டுவந்துவிட வேண்டும் என்பதில் படுமுனைப்பாக இருந்து வருகிறது பாஜக.

கடந்த 7 ஆண்டுகாலத்தில் இந்திய அரசியல் இதுவரை கண்டறியாத சித்து வேலைகளை எல்லாம் பயன்படுத்தி மாநிலங்களில் அதிகாரத்தை கைப்பற்றுவதை ஒரு கோட்பாடாகவே பாஜக கொண்டிருக்கிறது. சின்ன கட்சி, பெரிய கட்சி என்ற பாகுபாடு எல்லாம் கிடையாது; இந்துத்துவா கோட்பாடு கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை- ஊழல் வழக்கில் சிக்காதவர்கள் என்ற லட்சியங்கள் எதுவும் இல்லை பாஜகவுக்கு.. யார் வந்தாலும் யார் கட்சி தாவினாலும் அரவணைத்துக் கொள்ளும் அடடே போக்குதான் பாஜகவின் பாணியாக உள்ளது.

திரிபுராவும் இடதுசாரிகளும்

திரிபுராவும் இடதுசாரிகளும்

திரிபுரா மாநில சட்டசபையில் மொத்தம் 60 இடங்கள் உள்ளன. 2013-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திரிபுரா தேர்தலில் இடதுசாரிகள் 50 இடங்களில் வென்றனர். அந்த தேர்தலில் பாஜக ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. 2013 தேர்தலில் இடதுசாரிகளுக்கு 50%-க்கும் அதிகமான வாக்கு சதவீதம்; காங்கிரஸ் கட்சிக்கு 37% வாக்கு சதவீதம். பாஜகவுக்கு வெறும் 1.5%தான் வாக்குகள் கிடைத்தது.

காங்கிரஸை கபளீகரம் செய்தது

காங்கிரஸை கபளீகரம் செய்தது

ஆனால் 2018 சட்டசபை தேர்தலில் பாஜக 36 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்தது. அந்த கட்சிக்கு மொத்தம் 43.59% வாக்குகள். இடதுசாரிகள் வெறும் 16 இடத்திலும்தான் வெல்ல முடிந்தது. இடதுசாரிகளுக்கு 43% வாக்குகள் கிடைத்தது. ஆனால் காங்கிரஸுக்கு வெறும் 1.79% வாக்குகளே கிடைத்தன. ஒரே தேர்தலில் எப்படி காங்கிரஸ் கட்சி காணாமல் போனது? ஒரே தேர்தலில் பாஜக எப்படி 36 இடங்களில் வென்று ஆட்சியை கைப்பற்ற முடியும்? வேறு ஒன்றும் இல்லை.. திரிபுராவில் காங்கிரஸ் என்கிற அந்த கட்சியின் அத்தனை தலைவர்களையும் ஒருசேர வளைத்துப் போட்டது பாஜக. காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்தவர்கள் பாஜகவினராக உருமாறினர். அதனால் காங்கிரஸ் வாக்கு வங்கி அப்படியே பாஜக வாக்கு வங்கியாகிப் போனது. இந்த மாயஜாலம்தான் பாஜகவின் அரசியல் சாணக்யத்தனமாக கொண்டாடப்படுகிறது.

மே.வங்கம் விஸ்வரூபம்

மே.வங்கம் விஸ்வரூபம்

மேற்குவங்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள்...2016 சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 44.91%; சிபிஎம் 19.75%; காங்கிரஸ் 12.25% வாக்குகள் பெற்றன. அந்த தேர்தலில் பாஜகவுக்கு 10.16% மட்டுமே வாக்குகள் கிடைத்தன. தற்போது முடிவடைந்த 2021 சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 47.94% வாக்குகளைப் பெற்று ஆட்சியைத் தக்க வைத்தது. சிபிஎம்-க்கு 4.73%; காங்கிரஸுக்கு 2.94% வாக்குகள்தான் கிடைத்தன. அதேநேரத்தில் பாஜகவுக்கு கிடைத்த வாக்குகள் எத்தனை சதவீதம் தெரியுமா? 38.13% வாக்குகள்... ஒருகாலத்தில் மேற்கு வங்கத்தை கோட்டையாக கட்டி ஆண்ட காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கு இந்த தேர்தலில் ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. பாஜகவுக்கோ 77 இடங்கள் கிடைத்தன. என்னதான் ஆனது இடதுசாரிகள் வாக்குகளும் காங்கிரஸ் வாக்குகளும்? 2019 லோக்சபா தேர்தலிலேயே இதற்கான விடைகள் வெளிப்பட்டன.

இடதுசாரிகள், காங்கிரஸ்

இடதுசாரிகள், காங்கிரஸ்

ஆம் இன்குலாப் ஜிந்தாபாத் என முழங்கிய இடதுசாரி காம்ரேடுகள், பாரத்மாதா கீ ஜே என இந்துத்துவா முழக்கமிட்டு பாஜகவினராகவே மாறி வாக்கு கேட்டனர். கொள்கை சித்தாந்தம் பேசும் இடதுசாரிகள் நிலைமையே இப்படி எனில் மிதவாத இந்துத்துவா முகம் கொண்ட காங்கிரஸ் கட்சி நிலைமையை சொல்ல வேண்டுமா என்ன? இடதுசாரிகள், காங்கிரஸ் இரண்டின் வாக்கு வங்கியை அப்படியே உள்விழுங்கி செங்கொடி பறந்த மேற்கு வங்க தேசத்தில் இப்போது காவி கொடியை பட்டொளி வீசி பறக்கவிட்டு வருகின்றனர். இதுவும் கூட பாஜக அரசியலின் மகோன்னத சாணக்கியத்தனம் என்றே சிலாகிக்கப்படுவதுதான் சுவாரசியமானது.

அடேங்கப்பா அருணாச்சல் ஆட்டம்

அடேங்கப்பா அருணாச்சல் ஆட்டம்

இதேபோல்தான் அருணாச்சல பிரதேசத்திலும் பாஜக ஆடிய ஆட்டத்தைப் பாருங்கள். 2016-ம் ஆண்டு பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் காங்கிரஸ் கட்சியின் பெமா காண்டு முதல்வரானார். அவருக்கு 45 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தந்தனர். திடீரென பெமா காண்டு 45 எம்.எல்.ஏக்களுடன் அருணாச்சல பிரதேச மக்கள் கட்சியில் இணைந்தார். இதனால் அருணாசலப் பிரதேசத்தில் காங்கிரஸின் சகாப்தம் முடிவுக்கு வந்தது. பெமா காண்டு தலைமையில் 45 எம்.எல்.ஏக்கள் இணைந்த அருணாச்சல பிரதேச மக்கள் கட்சி, பாரதிய ஜனதாவின் ஆதரவு கட்சி. பின்னர் சில மாதங்களிலேயே அருணாச்சல் மக்கள் கட்சிக்கு 33 எம்.எல்.ஏக்கள் முழுக்கு போட்டு அப்படியே பாஜகவுக்கு தாவினர். இதனால் அருணாச்சல பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைந்துவிட்டது. அத்துடன் ஓயவில்லை பாஜக. பீகாரில் கூட்டணி கட்சியாக இருக்கும் ஜேடியூவுக்கும் அருணாச்சல பிரதேசத்தில் 7 எம்.எல்.ஏக்கள் இருந்தனர். அவர்களில் 6 பேரையும் பாஜகவுக்குள் இழுத்துப் போட்டு ஜேடியூவை இல்லாமல் செய்தது.

அடுத்தது புதுச்சேரி கேம்

அடுத்தது புதுச்சேரி கேம்

இப்போது இதேபாணியில்தான் புதுச்சேரியிலும் ஆட்டத்தை பாஜக ஆடத் தொடங்கிவிட்டது. புதுச்சேரி தேர்தலில் 6 இடங்களில்தான் பாஜக வென்றது. அதன் கூட்டணி கட்சியான என்.ஆர். காங்கிரஸ் 10 இடங்களில் வென்றது. இதனால் புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ்- பாஜக கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. ஆனால் என்.ஆர். காங்கிரஸை இல்லாமல் ஆக்குவதற்காக முதல் கட்டமாக பாஜகவின் 3 பேரை நியமன எம்.எல்.ஏக்களாக்கி இருக்கிறது பாஜக. அதேபோல் சுயேட்சைகளில் 3 பேரை வளைத்துள்ளது பாஜக. இப்போது புதுவையில் பாஜக தனிப்பெரும்பான்மை கொண்ட கட்சியாக சித்துவிளையாட்டுகளால் உருமாற்றிக் கொண்டிருக்கிறது. என்.ஆர். காங்கிரஸ் கட்சியில் எம்.எல்.ஏக்களை வளைக்கும் பேரத்தையும் பாஜக தொடங்கிவிட்டது. போகிற போக்கில் புதுவையில் கோலோச்சிக் கொண்டிருந்த என்.ஆர். காங்கிரஸ், பாஜகவுடன் கூட்டணி அமைத்த ஒரே காரணத்தால் புதைகுழிக்குப் போவது தவிர்க்க முடியாதது என்கிற நிலைதான் உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+