“நானே களத்தில் இறங்குவேன்” ஆரம்பமா? முடிவா? நீங்களே முடிவு பண்ணிக்கோங்க.. அதிரடி காட்டிய ராமதாஸ்!
புதுச்சேரி : பாமகவின் சமூக நீதிக்கான போராட்டம் தொடக்கமாக இருக்க வேண்டுமா? நிறைவாக இருக்க வேண்டுமா? என்பதை புதுவை அரசு தான் முடிவு செய்ய வேண்டும், நானே களமிறங்கி போராடுவேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரித்துள்ளார்.
புதுச்சேரி அரசின் அரசுத் தேர்வுக்கான அறிவிப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு இடம்பெறவில்லை. அதற்கு பாமக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதனைக் கண்டித்து நேற்று பாமக சார்பில் சட்டப்பேரவையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், அனைத்து நிலைகளிலும் எம்.பி.சி இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய அரசு தவறினால் நானே களமிறங்கி போராடுவேன் என பாமக நிறுவனர் தெரிவித்துள்ளார்.

எம்.பி.சி இட ஒதுக்கீடு
புதுச்சேரி காவல்துறை சப் இன்ஸ்பெக்டர், தீயணைப்புத் துறை டிரைவர் மற்றும் புள்ளியியல் ஆய்வாளர், வாகன ஆய்வாளர் ஆகிய பணிகளுக்கு அரசு தேர்வு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புதுச்சேரி அரசின் அறிவிப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு இடம்பெறவில்லை. இதற்கு பாமக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனைக் கண்டித்து பாமக சார்பில் நேற்று புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சமூக அநீதி
இந்நிலையில் அனைத்து நிலைகளிலும் எம்.பி.சி இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய அரசு தவறினால் நானே களமிறங்கி போராடுவேன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "புதுவை அரசின் ஏ, பி பிரிவு பணிகளில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு மறுக்கப்படுவது பெரும் சமூக அநீதி. இது தொடர்பான புதுவை மக்களின் உணர்வை பாட்டாளி மக்கள் கட்சி அறவழிப் போராட்டத்தின் மூலம் அரசுக்கு உணர்த்தியிருக்கிறது. புதுவை மக்களின் உணர்வுகளை அம்மாநில அரசு உணர வேண்டும்; மதிக்க வேண்டும்.

நானே களத்தில் இறங்குவேன்
புதுவையில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அனைத்து நிலைகளிலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தான் முழுமையான சமூகநீதி. வாக்களித்த மக்களை ஏமாற்ற நினைக்கக் கூடாது. பாட்டாளி மக்கள் கட்சியின் சமூக நீதிக்கான போராட்டம் தொடக்கமாக இருக்க வேண்டுமா? நிறைவாக இருக்க வேண்டுமா? என்பதை புதுவை அரசு தான் முடிவு செய்ய வேண்டும். அனைத்து நிலைகளிலும் எம்.பி.சி இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய அரசு தவறினால் நானே களமிறங்கி போராடுவேன்" என்று தெரிவித்துள்ளார்.

பாமக பேரணி
முன்னதாக நேற்று, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்ததை கண்டித்தும், முன்பு இருந்த இடஒதுக்கீட்டு அரசாணையை பின்பற்ற வேண்டும் என்றும் பெரும்பான்மை வன்னிய சமுதாயத்தை வாழ்வாதாரத்தை அழிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தி அண்ணா சிலை அருகில் இருந்து சட்டப்பேரவையை நோக்கி ஊர்வலமும் நடத்தினர் பாமகவினர். போலீசார் ஆம்பூர் சாலை அருகே பேரிகார்டு அமைத்து ஊர்வலத்தை தடுக்க திட்டமிட்டனர்.

பரபரப்பு
ஊர்வலமாக வந்த பாமகவினர் பேரிகார்டை தள்ளி முன்னேற முயன்றனர். ஊர்வலத்தின் பின்புறத்தில் இருந்து போலீசாரை நோக்கி தண்ணீர் பாக்கெட், கற்கள் வீசப்பட்டன. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. போலீசாரால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. ஒருகட்டத்தில் போலீஸாரை தள்ளிவிட்டு, சட்டப்பேரவை நோக்கி முன்னேறினர். சட்டப்பேரவை அருகே பாமகவினர் அதிகளவில் வந்ததால் பதற்றம் ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications