இன்னா டெக்னிக்பா.. சிக்கன் கடை பில்லை வாயில் மாஸ்க் போல... ஒட்டி வந்த கில்லாடி!
புதுச்சேரி: புதுச்சேரியில் பொதுமக்கள் வெளியே செல்லும்போது முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், போலீசாரின் சோதனைக்கு பயந்து ஒருவர் கோழி இறைச்சி கடையில் கொடுத்த பில்லை முக கவசமாக பயன்படுத்திய சம்பவம் நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் வரும் மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரசிற்கு இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்காத நிலையில், மக்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டால் மட்டுமே கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும் என மருத்துவர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.
மேலும் கொரோனா பரவலை தடுக்க முக கவசம் அணிதல், கைகளை கழுவுதல் மற்றும் சமூக விலகலை கடைப்பிடித்தல் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளை பொதுமக்கள் பின்பற்றுமாறு மத்திய மாநில அரசுகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன.
முகக் கவசம் கட்டாயம்
இதனிடையே புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க பொதுமக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வரும்போது முக கவசம் அணிவதை அரசு கட்டாயமாக்கியுள்ளது. மீறி முகக்கவசம் அணியாமல் வெளியே வருவோரிடம் காவல்துறையினர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் ரூபாய் 100 அபராதம் வசூலித்து வருகின்றனர்.
கில்லாடி மக்கள்
அரசின் உத்தரவை ஏற்று புதுச்சேரியில் பெரும்பாலானோர் தற்போது முக கவசம் அணிந்தாலும், ஒரு சிலர் அரசாங்கத்தை ஏமாற்றுவதாக நினைத்து, தங்கள் உயிரைப்பற்றி கவலைப்படாமல் தாம்பூல பை மற்றும் பாலீதீன் பைகளை முகத்தில் மாட்டிக்கொண்டு போலீசுக்கு பயந்து சுற்றி வருகின்றனர். இதுபோன்ற ஒரு நகைச்சுவை சம்பவம் லாஸ்பேட்டை காவல்நிலையத்திற்குப்பட்ட பகுதியில் நடைபெற்றுள்ளது.
சிக்கன் கடை பில்லு
லாஸ்பேட்டை காவல்நிலைய போலீசார் சிவாஜி சிலை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக ஒருவர் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அவர் முகத்தில் ஏதோ வித்தியாசம் தெரியவே, அவரை போலீசார் மடக்கி நிறுத்தினர். அப்போது அந்த நபர் போலீஸ் சோதனைக்கு பயந்து முக கவசத்திற்கு பதிலாக கோழி இறைச்சி கடையில் கொடுத்த பில்லை முககவசமாக வாயில் கவ்வியபடி வந்தது தெரியவந்தது.
கட்டு ரூ. 100 அபராதம்
இதையடுத்து அந்த நபரிடம் பேச்சு கொடுத்த போலீசார், கோழி இறைச்சி வாங்குவதற்கு காசு உள்ளது. ஆனால் உங்கள் உயிரை பாதுகாக்க பயன்படும் முக கவசம் வாங்க காசு இல்லையா? என கேள்வி எழுப்புகின்றனர். அதற்கு அந்த நபர், ஐயா நான் 50 ரூபாய்க்கு கறி வாங்கினேன்.. முக கவசத்தை மறந்து வீட்டில் வைத்துவிட்டேன் என்றும், சாரி என்றும் கேட்கிறார். அவரின் விளக்கத்தை ஏற்க மறுத்த போலீசார் முக கவசம் அணியாததற்கு அந்த நபரிடம் 100 ரூபாய் அபராதம் வசூலித்து அனுப்பினர்.