அடங்காத குடிகாரர்கள்.. ரயில் தண்டவாளத்தில் விற்பனை.. கடையை உடைத்து 500 லிட்டர் சாராயம் திருட்டு!
புதுச்சேரி: புதுச்சேரியில் ரயில் தண்டவாளத்தில் பதுக்கி வைத்து மது விற்பனை செய்த 6 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்து, அவர்களிடமிருந்து 40 ஆயிரம் மதிப்பிலான மதுபானங்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் கிராமப் பகுதியில் சீல் வைக்கப்பட்ட சாராயக்கடையை உடைத்து 500 லிட்டர் சாராயத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க புதுச்சேரி மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஊரடங்கால் மதுபானம் மற்றும் கள், சாராயக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனால் மதுப்பிரியர்கள் மதுபானம் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். கள்ளத்தனமாக மது விற்பனை, போலி மதுபான தயாரிப்பு, கள்ளச்சாராய விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க போலீஸார் நடவடிக்கை எடுத்தாலும், கள்ளத்தனமாக மது விற்பனை செய்வது குறைந்தபாடில்லை.
இந்நிலையில் புதுச்சேரி ரயில் நிலையம் அருகே, ரயில் தண்டவாளத்தில் பதுக்கி வைத்து கள்ளத்தனமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக ஒதியஞ்சாலை போலீசார் ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார், ரயில் நிலையம் பின்புறம் உள்ள வாணரப்பேட்டை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றுகொண்டிருந்த இருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர்கள் தண்டவாளத்தில் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதை ஒப்புக்கொண்டனர். பின்னர் ரயில் தண்டவாளத்தில் பதுக்கி வைத்திருந்த ரூபாய் 40 ஆயிரம் மதிப்பிலான மதுபானங்களை பறிமுதல் செய்த போலீசார், அவர்களுக்கு உடந்தையாக இருந்த 4 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்கள் மற்றும் கைது செய்யப்பட்டவர்களை கலால் துறையினரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
இதேபோல் புதுச்சேரி தேங்காய்த்திட்டு பகுதியில் சாராயம் விற்ற நபரை போலீஸாா் கைது செய்தனா். புதுச்சேரி தேங்காய்த்திட்டு பகுதியில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக முதலியாா்பேட்டை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று கண்காணித்தனா். அப்போது, அங்கு ஒருவா் சாராய விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது.
அவரைப் பிடித்து விசாரித்ததில், அவா் தேங்காய்த்திட்டு புதுநகா் பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் (52) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரிடமிருந்து 8 லிட்டா் அளவு கொண்ட சாராய பாட்டில்கள், ரூபாய் 4 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து, ஆறுமுகத்தை போலீஸாா் கைது செய்தனா்.
இதனிடையே வம்புபட்டு கிராமத்தைச் சேர்ந்த சாராயக் கடை ஒன்றில் 500 லிட்டர் சாராயம் திருடப்பட்டுள்ளதாகப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கடையை சிலம்பரசன் என்பவர் நடத்தி வருகிறார். ஊரடங்கு உத்தரவு காரணமாக இந்த சாராயக் கடைக்கு சீல் வைக்கப்பட்டது. கடந்த 5 ஆம் தேதி அவர் வந்து பார்த்தபோது கடையில் 11 கேன்களில் இருப்பு வைக்கப்பட்ட 500 லிட்டர் சாராயம் இருந்தது. ஆனால், இன்று காலை அவர் சென்று பார்த்தபோது கடையின் பின்பக்கக் கதவை உடைத்து 500 லிட்டர் சாராயம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து திருக்கனூர் காவல் நிலையத்தில் அவர் புகார் செய்துள்ளார்.
புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் உள்ள மதுப்பிரியர்கள் ஊரடங்கால் மது கிடைக்காமல், உடல் அளவிலும், மனதளவிலும் பாதிப்படைந்துள்ளனர். எனவே கள்ளத்தனமாக மது விற்பனையை தடுத்து, அரசே ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மதுக்கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டுமென்பதே மதுப் பிரியர்களின் கோரிக்கையாக உள்ளது.