நடிகர் விஜய்யை சந்திக்க மட்டும் புதுவை முதல்வருக்கு நேரம் இருக்கிறதா?.. அதிமுக கடும் விமர்சனம்
புதுவை: நடிகர் விஜய்யை அவரது நீலாங்கரை இல்லத்தில் புதுவை முதல்வர் ரங்கசாமி சந்தித்து பேசிய விவகாரம் தற்போது என்.ஆர். காங்கிரஸ்- அதிமுக கூட்டணியிடையே மோதல் போக்கை ஏற்படுத்தியுள்ளது.
புதுவையில் ஏப்ரல் மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, அதிமுக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில் என்.ஆர்.காங்கிரஸ் 10 இடங்களிலும் பாஜக 6 இடங்களிலும் வென்றன.
4 இடங்களில் போட்டியிட்ட அதிமுக தோல்வியை தழுவியது. இதையடுத்து புதிதாக அமைந்த அமைச்சரவையில் என்.ஆர். காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

பாஜக எம்எல்ஏ
இந்த நிலையில் வாரிய தலைவர்கள் பதவிக்கு சில பாஜக எம்எல்ஏக்கள் முதல்வரை அணுகி கோரிக்கை விடுத்து வருகிறார்கள். அது போல் தேர்தலில் வெற்றி பெறாத நிலையில் வாரிய தலைவர்கள் பதவியை தங்களுக்கு வழங்க வேண்டும் என அதிமுக எதிர்பார்க்கிறது. தற்போது வாரியங்கள் நஷ்டத்தில் இயங்குவதால் அப்பதவிகளுக்கு தலைவர்களை நியமிக்க முடியாது என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துவிட்டார்.

பாஜக மோதல்
இதனால் என்.ஆர்.காங்கிரஸுடன் பாஜக மோதல் போக்கை கொண்டிருக்கிறது. இந்த நிலையில் மற்றொரு கூட்டணி கட்சியான அதிமுகவும் என் ஆர் காங்கிரஸுடன் மோதல் போக்கை ஏற்படுத்தியுள்ளது. நீலாங்கரையில் உள்ள விஜய்யின் வீட்டுக்கு முதல்வர் ரங்கசாமி வந்திருந்தார். அங்கு ஒரு மணி நேரத்திற்கு மேல் இருவரும் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

அக்கறை இல்லையா
இது குறித்து முதல்வர் ரங்கசாமி கூறுகையில் இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றார். இதை அதிமுக கடுமையாக விமர்சித்துள்ளது. அதிமுகவின் புதுவை மாநில தேர்தல் பிரிவு செயலாளரான முன்னாள் எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன் சமூகவலைதள பக்கத்தில் கடுமையாக சாடியுள்ளார். புதுவை முதல்வருக்கு மக்கள் மீது அக்கறை இல்லையா என்ற தலைப்பில் அவர் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

ஓபிஎஸ், எடப்பாடி பழனிச்சாமி
அந்த பதிவில் மாநில மக்கள் வளர்ச்சி திட்டத்திற்காக மத்திய அமைச்சர்களையும் பிரதமரையும் சந்திக்க நேரம் இல்லை. அதிமுகவின் வாக்குகளை பெற்று முதல்வர் ஆன நிலையில் எங்கள் கட்சி தலைவர்கள் ஓபிஎஸ், எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து நன்றி தெரிவிக்கக் கூட வழி தெரியவில்லையா?
Recommended Video

என்.ஆர். காங்கிரஸ் விமர்சனம்
நடிகரை மட்டும் மரியாதை நிமித்தமாக சந்திக்க நேரம் இருக்கிறதா என கேள்வி எழுப்பியுள்ளார். கூட்டணியில் உள்ள அதிமுக , முதல்வரை விமர்சித்திருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே வாரிய தலைவர் பதவி விஷயத்தில் பாஜக மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் நிலையில் தற்போது அதிமுகவும் விமர்சனம் செய்துள்ளது. இதற்கு என் ஆர் காங்கிரஸ் கட்சியினரோ, அதிமுக போட்டியிட்ட 4 தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட இவர்கள் வெல்லவில்லை என்கிற போதில், அதிமுகவின் வாக்குகளை பெற்று எப்படி நாங்கள் ஆட்சி அமைத்திருக்க முடியும்? விமர்சனத்திலும் ஒரு நியாயம் வேண்டாமா என கேள்வி எழுப்பியுள்ளார்கள்.












Click it and Unblock the Notifications