புது சிக்கல்.. அய்யோ அப்படி மட்டும் நடந்தா.. கலக்கத்தில் புதுச்சேரி பாஜக வேட்பாளர்கள்!
புதுச்சேரி வாக்காளர்களின் செல்போன் எண்களை முறைகேடாக பாஜக "எடுத்துக்கொண்டதாக" வந்துள்ள புகாரை விசாரித்து முடிக்கும் வரை புதுச்சேரி சட்டசபை தேர்தலை ஏன் தள்ளி வைக்கக் கூடாது என்று சென்னை ஹைகோர்ட் எழுப்பிய கேள்வியால், பாஜக வேட்பாளர்கள், தேர்தல் நடக்குமா நடக்காத என்ற கலக்கத்தில் உள்ளார்கள்.
புதுச்சேரியில் புயலை கிளப்பி உள்ள விஷயம் என்றால் அது, தொலைபேசி எண் "திருட்டு" தான். இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் காட்டமாக கேள்வி எழுப்பியருக்கிறது. 31ம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. அப்போது தேர்தல் ஆணையம் விரிவான பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது உயர்நீதிமன்றம்.
ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழகத்தில் மட்டுமின்றி புதுச்சேரியிலும் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி நடவடிக்கையால் புதுச்சேரி வேட்பாளர்கள் கலக்கத்தில் உள்ளார்கள்.
பாஜகவிற்கு என்ன சிக்கல்
புதுச்சேரி வாக்காளர்கள் செல்போன்களுக்கு பாஜக தரப்பில் இருந்து சமீபகாலமாக தங்களுக்கு ஓட்டு போடுமாறு கோரிக்கை விடுத்து மெசேஜ்கள் வந்தன. இது பற்றி புதுச்சேரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தலைவர் ஆனந்த் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் . அவர் தனது மனுவில் வாக்காளர்கள், செல்போன் எண்களை, ஆதார் மூலமாக சட்டவிரோதமாக பாஜகவினர் பெற்று தங்கள் பிரசாரத்திற்கு பயன்படுத்துகிறது. இதை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாமல் இருக்கிறது என்று குற்றம் சாட்டியிருந்தார்.
அனுமதி பெறவில்லை
இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் கோரி இருந்தது. கடந்த 26ம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்தது . எஸ்எம்எஸ் மூலமாக பிரச்சாரம் செய்வதற்கு பாஜக தரப்பு தங்களிடம் அனுமதி பெறவில்லை, அவர்கள் எப்படி தொலைபேசி எண்களை பெற்றார்கள் என்பது பற்றி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை விசாரித்து அவர்கள் அறிக்கையை பொறுத்து நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை விசாரணை முடிவடையாததால் இந்த தேர்தலில் இருந்து பாஜகவை தகுதி நீக்கம் செய்ய முடியாது. இந்த விசாரணையை நீதிமன்றம் வேண்டுமானால் கண்காணித்து கொள்ளட்டும் என்று தேர்தல் ஆணையம் கூறியது.
எப்படி கிடைத்தது செல்போன் நம்பர்கள்
இதையடுத்து பாஜக மீதான எஸ்எம்எஸ் பிரச்சார குற்றச்சாட்டு விசாரணை முடிவடையும் வரை புதுச்சேரி சட்டசபை தேர்தலை ஏன் தள்ளி வைக்கக் கூடாது என்று ஹைகோர்ட் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். செல்போன் எண்கள் பாஜகவுக்கு எப்படி கிடைத்தது என்பது பற்றி ஆதார ஆணையம் விசாரிக்க வேண்டும் என்று ஹைகோர்ட் உத்தரவிட்டது. மீண்டும் இந்த வழக்கின் விசாரணையை மார்ச் மாதம் 31 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது
தேர்தல் நடக்குமா
ஆதார் விவரங்களில் உள்ள தனிநபர்களின் செல்போன் எண்கள் எப்படி பாஜகவுக்கு சென்றது என்ற கேள்வி புதுச்சேரியில் எழுந்துள்ளது. தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளதால், புதுச்சேரியில் வரும் 6ம் தேதி திட்டமிட்டபடி தேர்தல் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பாஜக வேட்பாளர்கள் கலக்கம்
புதுச்சேரியில் பாஜக உள்பட பல வேட்பாளர்கள் பிரச்சாரத்தை தீவிரமாக செய்து வருகிறார்கள். பலர் கிட்டத்தட்ட இறுதிகட்ட பிரச்சாரத்தை நெருங்கிவிட்டனர். இன்னும் 9 நாட்களே இருப்பதால் தேர்தல் ரத்தானால் தங்களது செலவினங்களை பாதிக்கும் என்பதால் மிகுந்த கலக்கததில உள்ளனர்.