பாஜக - என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில் குழப்பம்? மோடி பதவியேற்பு விழாவை புறக்கணித்த ரங்கசாமி?
புதுச்சேரி : 3வது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி உடல்நலக் குறைவு காரணமாக நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்று தெரிய வந்துள்ளது.
நாட்டில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் என்டிஏ கூட்டணி 292 இடங்களில் வெற்றிபெற்றது. பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதால், தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சியமைக்கவுள்ளது. இதன் மூலம் நரேந்திர மோடி தொடர்ந்து 3வது முறையாக பிரதமராக பதவியேற்கவுள்ளார்.

ஏற்கனவே ராஷ்டிரபதி பவனில் பிரதமர் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் முடிந்துவிட்டன. இன்று இரவு 7.15 மணிக்கு நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கவுள்ளார். குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவி பிரமானமும், ரகசிய காப்பு பிரமானமும் செய்து வைக்கிறார். இந்த விழாவில் சர்வதேச நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பாஜக கூட்டணி கட்சி தலைவர்களுக்கும் பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஏற்கனவே டெல்லியில் நடந்த என்டிஏ கூட்டணி கட்சி தலைவர்களின் கூட்டத்தில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பங்கேற்கவில்லை.
அப்போது பல்வேறு தரப்பினரும் குழம்பினர். ரங்கசாமி பங்கேற்காததற்கான காரணமும் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் நரேந்திர மோடி பதவியேற்பு விழாவிலும் பங்கேற்காமல் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி புறக்கணித்துள்ளதாக கூறப்பட்டது. புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
இருந்தும் புதுச்சேரி லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வைத்திலிங்கம் சுமார் 1.30 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்தை வீழ்த்தினார். ஆட்சியில் இருக்கும் போது எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றிபெற்றதால், என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி இடையில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதன் காரணமாக மோடி பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்கவில்லை என்று தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications