புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் ஒத்திவைப்புக்கு ஆளுநர் கிரண்பேடிதான் காரணம்- மோடிக்கு நாராயணசாமி பதில்
புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருப்பதை சுட்டிக்காட்டி காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் மோடி விமர்சித்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, உள்ளாட்சி தேர்தலுக்கு முட்டுக்கட்டை போடுவதே துணை நிலைஆளுநர் கிரண்பேடிதான் என கூறியுள்ளார்.
இந்தியாவில் ஜனநாயகமே இல்லை என ராகுல் காந்தி, மத்திய பாஜக அரசை கடுமையாக சாடி இருந்தார். இதற்கு பதில் தந்த பிரதமர் மோடி, ஜனநாயகம் குறித்து எங்களுக்கு பாடம் நடத்துகிறவர்கள்தான் புதுச்சேரியில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் இருக்கின்றனர் என கூறி இருந்தார்.

புதுவை என்.ஆர்.காங். அரசு
இது தொடர்பாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அளித்துள்ள விளக்கம்: புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல்களை நடத்த வேண்டும் என்று 2012-ல்தான் நீதிமன்றங்கள் உத்தரவிட்டன. அப்போது புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. என்.ஆர். காங்கிரஸ் கட்சி, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருந்தது.

கிரண்பேடி மீது புகார்
2014-ம் ஆண்டுக்குப் பின்னரும் உள்ளாட்சித் தேர்தலை நடத்த என்.ஆர். காங். அரசு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. 2016-ம் ஆண்டு முதல் உள்ளாட்சித் தேர்தலை நடத்த நாங்கள் முயற்சித்தோம். இதற்காக தேர்தல் அதிகாரியை நியமித்தோம். ஆனால் இது தொடர்பான கோப்புகளை ஆளுநர் கிரண்பேடி திருப்பி அனுப்பிவிட்டார்.

கிரண்பேடி தலையீடு
ஆளுநர் கிரண்பேடி நியமித்த தேர்தல் அதிகாரியோ வனத்துறையை சேர்ந்தவர். இதனால் அதை நாங்கள் ஏற்கவும் முடியவில்லை. புதுவையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அன்றாட நடவடிக்கைகளில் ஒவ்வொரு நிமிடமும் ஆளுநர் கிரண்பேடி தலையிட்டுக் கொண்டே இருக்கிறார். இது ஜனநாயகத்தை சீர்குலைப்பது ஆகாதா? இந்த ஜனநாயக சீர்குலைவு பற்றி பிரதமர் மோடி பேசாமல் இருப்பது ஏன்? இவ்வாறு நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆளுநருக்கு அதிகாரம் உண்டு
அதேநேரத்தில் ஆளுநர் கிரண்பேடியோ, தேர்தல் அதிகாரி நியமனங்கள் என்பது ஆளுநரின் அதிகாரத்துக்குட்பட்டது. நீதிமன்றத்தின் உத்தரவுகள் தெளிவானதாகவே இருக்கின்றன. ஆனால் புதுச்சேரி அரசாங்கம்தான் முட்டுக்கட்டை போட்டு வருகிறது என்றார்.












Click it and Unblock the Notifications