என்ன "சாமி சார்" இது.. அப்ப நாங்க தமிழ்நாட்டில் போய் குடிக்கட்டா.. புலம்பும் புதுவை குடிமகன்கள்!
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் மதுக்கடைகளை மீண்டும் திறப்பது குறித்து அரசு எந்தவித முடிவும் எடுக்காததால், வரலாற்றில் முதல்முறையாக புதுச்சேரி குடிமகன்கள் தமிழ்நாட்டிற்கு படையெடுக்க முடிவு செய்துள்ளனர்.
Recommended Video
புதுச்சேரி என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது மதுபானம். புதுச்சேரியில் 450 க்கும் மேற்பட்ட மதுபான கடைகள் இயங்கி வருகின்றன. இந்த மதுபான கடைகளில் 2000 க்கும் அதிகமான மது வகைகள் விற்பனை செய்யப்படுகிறது.
அண்டை மாநிலங்களான தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களை விட பல்வேறு விதமான மதுபான வகைகள் கிடைப்பதாலும், விலை குறைவாக இருப்பதாலும் புதுச்சேரிக்கு மது பிரியர்கள் வருகை அதிக அளவில் உள்ளது.
டாஸ்மாக் திறப்புக்கு எதிராக வீடுகளில் இருந்தே விடுதலை சிறுத்தைகள் கண்டன ஆர்ப்பாட்டம்
விலை கம்மி பாஸ்
புதுச்சேரி மாநிலத்தில் வரி வருவாயில் கலால் துறை முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக புதுச்சேரியை சுற்றியுள்ள அண்டை மாநிலங்களில் ஒரு பீரின் விலை ரூபாய் 150 என்றால், அதே பீர் புதுச்சேரியில் வெறும் 70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதேபோன்று விஸ்கி, பிராந்தி, ஒயின், வோட்கா, பிரிசர் என அனைத்து வகையான மதுபாட்டில்களும், பாதிக்கு பாதி விலை குறைவாக விற்கப்பட்டு வருகிறது.
எப்ப சார் கடையைத் திறப்பீங்க
இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தலால், புதுச்சேரியில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக கடந்த 40 நாட்களுக்கும் மேலாக அனைத்து மதுபான குடோன்கள் மற்றும் மதுபான கடைகள், கள்ளு, சாராய கடைகளுக்கும் கலால் துறையினர் மூடி சீல் வைத்துள்ளனர். இதனால் மதுப்பிரியர்கள் மது கிடைக்காமல், கள்ளசந்தையில் அதிக விலை கொடுத்து மது வாங்கி குடிப்பதும், கள்ளச்சாராயம் குடிப்பதுமாக இருந்துவந்தனர்.
இங்க மட்டும் தளர்த்தலையே பாஸ்!
இதனிடையே மத்திய மே 17 ஆம் தேதி வரை 3 ஆம் கட்டமாக ஊரடங்கை நீட்டித்துள்ள நிலையில், அதில் சில தளர்வுகளை அறிவித்ததால் நேற்று முன்தினம் புதுச்சேரியில் தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், ஓட்டல்கள் திறக்க அனுமதிக்கப்பட்டது. ஆனால் மதுபான கடைகளை திறக்க அனுமதி வழங்கவில்லை. ஊரடங்கு தளர்வினால் டெல்லி, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் மதுபான கடைகள் திறக்கப்பட்டது.
அங்க மட்டும் திறக்கிறாங்களே
தமிழகத்திலும் அண்டை மாநிலங்களில் மதுபான கடைகள் திறக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி நாளை முதல் மதுபான கடைகளை திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. டாஸ்மாக் மதுபான கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கவும், தொற்று பரவாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் விற்பனை செய்யவும் உத்தரவிட்டுள்ளது. கட்டுப்பாட்டு மண்டலங்களில் மதுபான கடைகள் திறக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏமாற்றமா இருக்கு பாஸ்
ஆனால் புதுச்சேரியில் மதுபானக் கடைகளை திறப்பது குறித்து அரசு எந்தவித அறிவிப்பும் வெளியிடாதது, மதுப்பிரியர்கள் மத்தியில் பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் புதுச்சேரி அருகே உள்ள அண்டை மாவட்டங்களான கடலூர், விழுப்புரத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கும் பட்சத்தில் புதுச்சேரியை சேர்ந்த குடிமகன்கள் தமிழக பகுதிக்கு சென்று மதுபாட்டில்களை வாங்கி வர முடிவு செய்துள்ளனர்.
கவுரதை என்னாகிறது பாஸ்
இதனால் எளிதாக கொரோனா வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு வரும் குடிமகன்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது என தமிழ்நாடு காவல்துறையினர் கவலையுடன் உள்ளனர். அண்டை மாநிலத்தவர் புதுச்சேரிக்கு மது அருந்து வந்த காலம் மாறி, தற்போது அண்டை மாநிலங்களுக்கு புதுச்சேரி குடிமகன்கள் மது குடிக்க செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக புதுச்சேரி குடிமகன்கள் புலம்பி வருகின்றனர். இதனால் புதுச்சேரி அரசு உடனடியாக மதுக்கடைகளை திறக்க உத்தரவிட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளனர்.