கெட்ட சகுனம்! நேற்று தேவலாய கொடி அறுந்தது..இன்று யானை லட்சுமி இறந்தது! பதற்றத்தில் புதுச்சேரி மக்கள்
புதுச்சேரி : புதுச்சேரியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மணக்குள விநாயகர் கோவிலுக்கு சொந்தமான பெண் யானை லட்சுமி உயிரிழந்த நிலையில், சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித ஜென்மராகினி அன்னை பேராலய கொடியேற்று விழாவில் நேற்று கொடிக்கயிறு அறுந்து விழுந்ததும் தெரிய வந்திருக்கிறது
புதுச்சேரியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மணக்குள விநாயகர் கோவிலுக்கு சொந்தமான பெண் யானை லட்சுமி உள்ளது. இதன் வயது 32. ஐந்து வயதாக இருந்தபோது புதுச்சேரி மாநிலத்திற்கு 1988 ஆம் ஆண்டு அழைத்துவரப்பட்டது.
ஸ்ரீ மணக்குள விநாயகர் கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான உள்நாட்டு மற்றும் பொதுமக்கள் சாமிதரிசனம் செய்வது வழக்கம் இதேபோல் வார இறுதி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வர் .
மணக்குள விநாயகரை தேர் போல வழிநடத்திய யானை லட்சுமி! கண்ணீர் விடும் புதுச்சேரி வாசிகள்! தமிழிசை அஞ்சலி
யானை லட்சுமி
மணக்குள விநாயகரை தரிசனம் செய்த பின்னர் கோவில் வாயிலில் நிற்கும் யானை லட்சுமியிடம் ஆசீர்வாதம் வாங்கி செல்வர். மேலும் அனைவரிடமும் யானை லட்சுமி அன்பாக பழகும். வழக்கமாக லட்சுமி நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில் இன்று காலை யானை லட்சுமி நடைபயிற்சி மேற்கொண்டு இருந்தபோது காமாட்சி அம்மன் கோவில் வீதியில் வந்து கொண்டிருந்தபோது திடீரென மயங்கி கீழே விழுந்து துடி துடிக்க உயிரிழந்தது.
மக்கள் கண்ணீர்
இதனையடுத்து யானை உயிரிழந்த இடத்திற்கு ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கூடி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து கிரேன் மூலம் யானை அகற்றப்பட்டு லாரியில் வைக்கப்பட்டு உயிரிழந்த காமாட்சி அம்மன் கோவிலில் இருந்து ஸ்ரீ மணக்குள விநாயகர் கோவில் வரை ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு கோவில் முன்பு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.
இன்று அடக்கம்
உயிரிழந்த கோவில் யானை லட்சுமிக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் மலர் மற்றும் மாலைகளை கொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் யானை லட்சுமி உயிரிழந்ததை அடுத்து கோவில் நடைகள் சாத்தப்பட்டுள்ளது. மேலும் இன்று மாலை 3 மணி அளவில் வாழைக்குளம் பகுதியில் அடக்கம் செய்யப்பட இருக்கிறது.
கொடி அறுந்தது
இது ஒரு புறம் இருக்க புதுச்சேரியில் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித ஜென்மராகினி அன்னை பேராலய கொடியேற்று விழாவில் கொடிக்கயிறு அறுந்து விழுந்ததும் தெரிய வந்திருக்கிறது. அந்த பேராலயத்தின் பங்கு பெறுவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. நிகழ்ச்சியில் பங்கு தந்தைகள் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது .பின்னர் கோவிலை சுற்றி கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கொடிமரத்தில் ஏற்ற தயாரானது.
மக்கள் அச்சம்
அப்போது கொடி ஏற்றப்பட்ட போது கயிறு திடீரென அறுந்து விழுந்தது. இதை அடுத்து அதற்கு பதிலாக சிறிய கொடி ஏற்றப்பட்டது இதனால் அங்கிருந்த கிறிஸ்தவ பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் கோவில் யானை திடீர் மரணம் அடைந்தது கொடியேற்றத்தின் போது தேவாலய கொடி அறுந்து விழுந்தது குறித்து மக்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர். கோவிலில் யானை உயிரிழந்ததும் கொடியறுந்து விழுந்ததும் நல்ல சகுனம் இல்லை என பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.